கீழ்க்கண்ட ஒரு வினோதச் செய்தி, இன்றைய நாளேடு ஒன்றில் வெளியாகி உள்ளது!
‘‘ராசி இல்லாத ராஜஸ்தான் சட்டசபை?
இருபது ஆண்டு கால வரலாற்றில், ராஜஸ்தான் சட்டசபையின் புதிய கட்டடம், மொத்தமுள்ள 200 எம்.எல்.ஏ.,க்களும் ஒன்றாக அமர்ந்திருப்பதை ஒருபோதும் கண்டதில்லை.
ராஜஸ்தானில் முதல்வர் பஜன் லால் சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு தலைநகர் ஜெய்ப்பூரில், வரலாற்று சிறப்புமிக்க மான் சிங் டவுன் ஹாலில் இருந்த ராஜஸ்தான் சட்டசபை, 2001ல் ஜோதி நகரில் உள்ள அதி நவீன வளாகத்துக்கு மாற்றப்பட்டது. இங்கு சட்டசபை செயல்பட துவங்கியதில் இருந்தே, மரணம், தகுதி நீக்கம், ராஜினாமா போன்ற காரணங்களால், முழு பலத்துடன் ஒருபோதும் சபை இயங்கியதே இல்லை.
பாரன் மாவட்டத்தின் அன்டா தொகுதியின் பா.ஜ., – எம்.எல்.ஏ.,வாக இருந்த கன்வர் லால் மீனா, குற்ற வழக்கில் சிக்கி பதவியை இழந்தார். இதனால் சட்டசபையின் பலம், 199 ஆக குறைந்ததை அடுத்து, சட்டசபையின் ராசி, வாஸ்து பிரச்னை மீண்டும் எழுந்துள்ளது.
பாகிடோரா தொகுதியைச் சேர்ந்த பாரதிய ஆதிவாசி கட்சி எம்.எல்.ஏ., ஜெய்கிருஷண் படேல், லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளார். அவர் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டால், இந்த எண்ணிக்கை 198 ஆக மேலும் குறையும்.
படித்தவர்களிடமும் மூடநம்பிக்கை!
இந்திய உச்சநீதிமன்றத்தில் குரோவர் என்பவர் நீதிபதியாக இருந்தார். 1968 மார்ச் 13ஆம் தேதி ஒரு வழக்கை நடத்திக் கொண்டு இருந்தபோது, குற்றவாளியால் கத்தியால் குத்தப்பட்டார். உடனே டில்லி வெலிங்டன் மருத்துவமனையில் (இப்பொழுது அதன் பெயர் ராம் மனோகா லோகியா மருத்துவமனையாகும்) சேர்க்கப்பட்டார். அவர் கண் விழித்துப் பார்த்தபோது அறை எண் 13 என்று இருந்தது – அதைக் கண்டு நீதிபதி அலறினார். நான் இன்று விசாரித்த வழக்கு எண் 13, கத்தியால் குத்திப்பட்டதும் 13ஆம் தேதி (1968 மார்ச்) எனது படுக்கையறையின் எண்ணும் 13.
உடனே என்னை வேறு அறைக்கு மாற்ற வேண்டும் என்றார்; மயக்கத்தில் சிறிது நேரம் அவர் அயர்ந்தபோது அதே அறைதான், எண் மட்டும் 12ஏ என்று மாற்றப்பட்டது. எப்படி இருக்கிறது!
அடல் பிகாரி வாஜ்பேயிக்கு பிரதமர் பதவி முடிந்தவுடன் 8ஆம் எண் பங்களா டில்லியில் ஒதுக்கப்பட்டது. அந்த எண் எனக்கு ராசியில்லை என்றார். என்ன செய்தார்கள்? அதே வீடுதான் எண் மட்டும் 6ஏ என்று மாற்றப்பட்டது. படிப்புக்கும் பகுத்தறிவுக்கும் சம்பந்தம் இல்லையே!! புரிகிறதா?
தொடரும் இடையூறுகள்
ராஜஸ்தான் சட்டசபையின் புதிய கட்டடத்தை, 2001 பிப்., 25ல், அப்போதைய ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் திறந்து வைப்பதாக இருந்தது. ஆனால் அவரது உடல்நலக் குறைவால், விழா ஒத்தி வைக்கப்பட்டது.
இதையடுத்து முறையான திறப்பு விழா இல்லாமல், சட்டசபை செயல்பட துவங்கியது. தொடர்ந்து, 2001 நவ., இறுதியில், பெயரளவுக்கு திறப்பு விழா நடந்தது. அப்போதிருந்தே இந்த இடையூறுகள் தொடர்கின்றன.
பா.ஜ.,வைச் சேர்ந்த வசுந்தரா ராஜே முதல்வராக இருந்த போதும், கீர்த்தி குமாரி, தரம்பால் சவுத்ரி போன்ற தலைவர்கள் உயிரிழந்ததால், சட்டசபையில் முழு பலம் எட்டப்படவில்லை.
காங்., மூத்த தலைவர் அசோக் கெலாட் தலைமையிலான முந்தைய அரசிலும், மரணங்கள், தகுதியிழப்புகள் காரணமாக சட்டசபையில் காலி இடங்கள் உருவாகின. தற்போது, முதல்வர் பஜன் லால் சர்மா தலைமையிலான ஆட்சியிலும், அதே போக்கு தொடர்கிறது.
புனித நீர் தெளிப்பு
இறுதியாக, 2024 நவம்பரில், முழு பலமான 200 எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கையை சட்டசபை எட்டியது. ஆனால், பா.ஜ.,வைச் சேர்ந்த கன்வர் லால் மீனா பதவியை இழந்ததால், 199 ஆக குறைந்துள்ளது.ராஜஸ்தான் சட்டசபை வளாகத்தை ஒரு தீயசக்தி சூழ்ந்திருப்பதாக, முன்னாள் மற்றும் இந்நாள் எம்.எல்.ஏ.,க்கள் சிலர் நம்புகின்றனர்.
சட்டசபை அமைந்துள்ள நிலம், ஒரு காலத்தில் தகன மைதானமாகவும், கல்லறையாகவும் பயன்படுத்தப்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர். இந்த அச்சத்தை போக்க, கடந்தாண்டு டிசம்பரில், சட்டசபை வளாகத்தில் ஸ்வஸ்தி வச்சன் மற்றும் மங்களாச்சரண் உள்ளிட்ட வேத சடங்குகளை சபாநாயகர் வாசுதேவ் தேவ்னானி ஏற்பாடு செய்தார். சட்டசபை வளாகத்தை சுற்றி புனித நீர் தெளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, வாஸ்து சாஸ்திரத்தின்படி, அலுவலக அமைப்புகளை அரசு அதிகாரிகள் மாற்றி அமைத்துள்ளனர். இனி வரும் காலங்களில், ராஜஸ்தான் சட்டசபை எப்போதும் முழு பலத்துடன் செயல்படும் என, அனைவரும் நம்புகின்றனர்.
‘குழு புகைப்படம் சமயங்களில்கூட, அனைத்து எம்.எல்.ஏ.,க்களையும் ஒன்றாக பார்ப்பது அரிது. 200 இருக்கைகள் இருந்தாலும், அவை ஒருமுறை கூட நிரப்பப்படவில்லை’ என, எம்.எல்.ஏ.,க்கள் சிலர் வேதனை தெரிவிக்கின்றனர்.’’ என்பதுதான் அந்த செய்தி!
ராஜஸ்தான் எவ்வளவு முன்னேறி வருகிறது பார்த்தீர்களா – விஞ்ஞான வளர்ச்சியில்?
இச்செய்தியைபடித்து முடித்தவுடன் அந்த சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர்கள், முதலமைச்சர் முதலியோர் பதவியேற்குமுன் எடுத்த பதவிப் பிரமாண அரசியல் சட்டப்படி வரையறைக்கப்பட்ட அரசியல் சட்டநெறியில், 51A என்ற குடிமக்களின் அடிப்படைக் கடமை (Fundamental Duties) என்பதில் உள்ள அறிவியல் மனப்பாங்கு, கேள்வி கேட்டு ஆராயும் தன்மையும், மனிதநேயத்தையும், சீர்திருத்தத்தையும் (h) பிரிவு கூறுகிறபடி – இது எத்தகைய முரண்பாடு, பார்த்தீர்களா?
இதனைப் (ராசியில்லாத நிலையை) போக்க, பரிகாரம் என்ன தெரியுமா?
கடந்த ஆண்டு டிசம்பர் (24 டிசம்பர் 2024) சட்டசபை வளாகத்தின் ஸ்வஸ்தி வச்சன் மற்றும் மங்களாச்சரண் சடங்குகளை சபாநாயகர் வாசுதேவ் தேவ்ஞானி ஏற்பாடு செய்தார். சட்டசபை வளாகத்தைச் சுற்றி புனிதநீர் தெளிக்கப்பட்டது.
‘இதைத் தொடர்ந்து வாஸ்து சாஸ்திரப்படி, அலுவல் அமைப்புகளை அரசு அதிகாரிகள் மாற்றி அமைத்துள்ளனர்.’
இம்மாதிரி பல கோளாறு, குறைபாடுகளுக்கு சட்டசபைக் கட்டடமும், கட்டிய கொத்தனாரும், மேஸ்திரியும், எஞ்சினியர் களுமா பொறுப்பு?
பூமி பூஜை எல்லாம் போட்டு, வேத மந்திரங்கள் எல்லாம் கூறித் தானே இந்தக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதனால் ஏற்பட்ட பயன் இது தானா?
இந்த 21ஆம் நூற்றாண்டில் – அதுவும் செயற்கை நுண்ணறிவு, விண்வெளியில் பெண் பொறியாளர் உள்பட பலரும் சென்றது – செவ்வாய்க்கோளை எட்டிப் பார்த்தது, ஏற்கெனவே நிலவில் மனிதன் இறக்கிய பழைய ‘ஆம்ஸ்ட்ராங்’ சாதனை உட்பட்ட பல எல்லாம் என்னவாச்சு? வேதம் ஓதியா புறப்பட்டார் ஆம்ஸ்ட்ராங்?
இந்தியாவில் உள்ள எந்த சட்டசபைக் கட்டடத்திலும் அதில் இருக்கும் கட்சிகளால் கட்சி மாற்றம் இல்லையா? எம்.எல்.ஏ.க்கள் காரணமில்லையா?
புத்தர் கூறிய உதாரணம், சாவு இல்லாத வீட்டில் ஒரு கரண்டி எண்ணெய் வாங்கி என்னிடம் கொடு; உன் பிள்ளையைப் பிறகு என்னால் எழுப்பி மீண்டும் உயிர் தர முடியும் என்று கதறி அழுத தாய்க்கு புத்தர் கூறிய விளக்கக் கதைதான் நினைவுக்கு வருகிறது!
மூடத்தின் உச்சமல்லவா? அதிலும் புதுப்புது ேஹாமங்கள், யாகங்கள் எல்லாம் அவாள் பிழைக்கவே! புரிகிறதா?
இதையும் பரிசுத்த ‘இனமலர்’ நாளேடு, இன்னொரு பக்கத்தில் ‘அறிவியல் மலர் – சாதனை’ என்றும் செய்தி வெளியிடுகிறது!
‘‘பேசு நா இரண்டையாய் போற்றி, போற்றி’’ என்ற அறிஞர் அண்ணாவின் ‘ஆரிய மாயை’ நூல்தான் நமக்கு ஒரே விடையா?