பிரதமர் மோடிக்கு
16 எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்!
புதுடில்லி, ஜூன் 4 – ‘ஆபரேசன் சிந்தூர்’ தாக்குதல் தொடர்பான உண்மைகளை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில், நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு, 16 எதிர்க்கட்சிகள் கூட்டாக கையெழுத்திட்டு கடிதம் எழுதியுள்ளன.
எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்!
இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள 16 எதிர்க்கட்சி களின் தலைவர்கள் பங்கேற்ற கூட்டம், தலைநகர் புதுடில்லியில் நேற்று (3.6.2025) நடைபெற்றது. காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சி, தேசிய மாநாட்டுக் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி (ஆர்எஸ்பி), விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கேரள காங்கிரஸ், மதிமுக, சிபிஅய்(எம்எல்) லிபரேசன் மற்றும் சிவசேனா (உத்தவ்) உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ‘ஆபரேசன் சிந்தூர்’ குறித்து, ஒன்றிய பாஜக அரசு நாட்டு மக்களுக்கு உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும்; இதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
பிரதமர் மோடிக்குத் தீர்மானம் அனுப்பி வைப்பு!
அத்துடன், இந்த கோரிக்கையை முன்வைத்து, 16 எதிர்க்கட்சித் தலைவர்களும் கூட்டாக கையெழுத்திட்ட கடித மும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. “பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் பூஜ்ஜிய சகிப்புத் தன்மை மற்றும் ஆபரேசன் சிந்தூர் குறித்து விளக்கம் அளிப்ப தற்காக பல்வேறு பன்னாட்டு நாடுகளுக்கு அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழு சென்றுள்ளது. அக்குழுக்கள் நாடு திரும்பியதும், மழைக்காலக் கூட்டத் தொடருக்கு முன்பாக, ஜூலை மாதத்தில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும்” என்று கடிதத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.