கடவுள்கள் நம்மைப் பிரித்தன – மதங்கள் நம்மைப் பிரித்தன –
கட்சிகள் நம்மைப் பிரித்தன – ஜாதிகள் நம்மை அறவே பிரித்தன!
பெரியார், சுயமரியாதை இயக்கம் நம்மை இணைத்தது!
சென்னை, மே 30 பெரிய கூட்டமோ, சிறிய கூட்டமோ தோழர்கள் கூடி மகிழ்ந்து, குடும்பங்கள் சந்திக்கவேண்டும். நமக்குள் யார் என்ன ஜாதி என்பது கிடையாது. கடவுள்கள் நம்மைப் பிரித்தன. மதங்கள் நம்மைப் பிரித்தன. கட்சிகள் நம்மைப் பிரித்தன. ஜாதிகள் நம்மை அறவே பிரித்தன. பெரியார், சுயமரியாதை இயக்கம் நம்மை இணைத்தன. அதனால், மனிதநேயத்தோடு நாம் இருக்கிறோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
சுயமரியாதைச் சுடரொளி பெரம்பூர் பி.சபாபதி நூற்றாண்டு விழா-
தமிழர் தலைவர் பங்கேற்பு
தமிழர் தலைவர் பங்கேற்பு
26.5.2025 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் அரங்கத்தில், புதுமை இலக்கியத் தென்றல் 1042 ஆவது சிறப்பு நிகழ்வாக நடைபெற்ற, சுயமரியாதைச் சுடரொளி பெரம்பூர் பி.சபாபதி நூற்றாண்டு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
‘‘சென்னையில், திராவிடர் கழகக் கூட்டங்கள் எங்கு நடந்தாலும், தேடித் தேடிக் கேட்கத் தொடங்கினார். தந்தை பெரியார் அவர்களின் எளிய உரைகளே, சபாபதி அவர்களை, நாத்திகராக மாற்றின.
தெளிவான எண்ணத்துடன் பயணிக்கத் தொடங்கினார் சபாபதி!
அப்போதே தன் குடும்பத்தை எப்படி கட்டமைக்க வேண்டும் என்ற தெளிவான எண்ணத்துடன் பயணிக்கத் தொடங்கினார். முதல் பெண் குழந்தைக்கு ‘‘அறிவுக்கண்ணு’’ என்று தந்தை பெரியார் அவர்கள் பெயர் சூட்டினார்.
தொடர்ந்து பிறந்த இரண்டு பெண் குழந்தை களுக்கும், “ஆரூயிர்”, ‘‘இன்பக்கனி’’ என்று பெயரிட்டார்.
பிறகு பிறந்த இரு ஆண் குழந்தைகளுக்கு ‘‘முகி லரசு’’, “பவழக்கடல்’’ என்றும், இரு பெண்
குழந்தைக்கு ‘‘எழில்மணி’’, ‘‘பண்பொளி’’ என்றும் பெயரிட்டார்.’’
இப்போது தமிழ்ப் பெயர்களைப் பார்த்தீர்களேயானால், சொல்வதற்கே வெட்கக்கேடாக இருக்கிறது. ‘‘பெரியார் 1000’’ போட்டியில் பரிசு வாங்குகின்ற பிள்ளைகளின் பெயரையே உச்சரிக்க முடியவில்லை.
இது எவ்வளவு பெரிய பண்பாட்டுப் படையெடுப்பு? எவ்வளவு சங்கடமாக இருக்கிறது. இதற்காகவே ஒரு பெரிய இயக்கம் நடத்தவேண்டும்.
திரைப்படங்களுக்குத்
தமிழில் பெயர் வைத்தால், ரூ.5 லட்சம்
தமிழில் பெயர் வைத்தால், ரூ.5 லட்சம்
கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, திரைப்படங்களுக்குத் தமிழில் பெயர் வைத்தால், 5 லட்சம் ரூபாய் தரப்படும் என்று உத்தரவிட்டார்.
இப்போது வெளிப்படையாகவே தமிழ்த் திரைப்படங்களுக்குக்கூட ஆங்கிலப் பெயரைத்தான் வைக்கிறார்கள்.
கல்வி ஒன்றே நம்மை உயர்த்தும் என்பதை உணர்ந்தவர்!
‘‘கல்வி ஒன்றே நம்மை உயர்த்தும் என்று உணர்ந்து, முதல் இரண்டு பெண் குழந்தைகளை மருத்து வர்களாகவும் (டாக்டர்கள்), அடுத்து வந்த அய்வரையும் பொறியாளர்களாகவும் (எஞ்ஜினியர்) படிக்க வைத்தார்.
பண்பொளி அவர்கள் முனைவர் (டாக்டர்) பட்டமும் பெற்றார். தந்தை பெரியார் அவர்களின் மறைவுக்குமுன், அவருடன் குடும்பத்துடன் ஒளிப்படம் எடுத்துக்கொண்டபோது (28.5.1973).
தந்தை பெரியார் அவர்களிடம்
அறிமுகம்!
அறிமுகம்!
தன் முதல் இரண்டு பெண் குழந்தைகளும் மருத்து வமும், மூன்றாவது பெண் குழந்தை பொறியியலும், மற்ற நான்கு குழந்தைகளும் பள்ளியில் வெவ்வேறு வகுப்புகளில் படித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று தந்தை பெரியார் அவர்களிடம் அறிமுகம் செய்தார்.’’
வடாற்காட்டில் ஏ.டி.கோபால் அவர்களும், கோவிந்தசாமி அவர்களும் இருந்தார்கள். இவர்கள் இரண்டு பேருக்கும் ஒரு போட்டி. கழகத்திற்கு உறுப்பினர்களை அதிகமாகச் சேர்ப்பது எப்படி என்று.
ஒவ்வொரு ஆண்டும் புது காலண்டர், புது டைரி போன்று பிள்ளைகளைப் பெறுவார்கள்.
அதேபோன்று காஞ்சிபுரத்தில் ஒரு நண்பர் இருந்தார், அவரும் இவர்களைப் போன்றவர்தான். அவர் தன்னுடைய குழந்தைக்குத் தந்தை பெரியாரிடம் பெயர் வைக்கச் சொன்னார்.
எத்தனையாவது குழந்தை? என்று கேட்டார்.
14 ஆவது குழந்தை என்று அவர் பதில் சொன்னார்.
அப்படியா? என்றார் தந்தை பெரியார்.
நல்ல பெயர் வைக்கட்டுமா? என்று கேட்டுவிட்டு, ‘‘சாலம்மா’’ என்று பெயர் வைத்தார்.
தெலுங்கில், சாலம்மா என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?
‘சாலு’ என்றால், ‘போதும்’ என்று அர்த்தம்.
‘‘சாலம்மா’’ என்பது நல்ல பெயர்தான் அய்யா என்றார், காஞ்சிபுரத் தோழர்.
இதற்கு அர்த்தம் என்ன தெரியுமா? என்று கேட்டு, ‘‘போதும் நிறுத்தய்யா’’ என்றார் தந்தை பெரியார்.
‘‘ரொம்ப சந்தோசம், ரொம்ப சந்தோசம்’’ என்று பூரித்தார் தந்தை பெரியார்!
‘‘அதிகம் பெற்றுக் கொள்ளாதீர்கள்’’ என்று அறிவுறுத்தும் தந்தை பெரியார் அவர்கள், ‘‘ரொம்ப சந்தோசம், ரொம்ப சந்தோசம்’’ என்று பூரித்துக் கூறினார்.
(இவர்களுக்கு மட்டும் விதிவிலக்குக் கொடுத்திருக்கிறார்; ஏனென்றால், இத்தனைப் பிள்ளைகளைப் பெற்றாலும், அவர்களை நன்றாக வளர்த்து, நன்றாகப் படிக்க வைத்திருக்கிறார் என்பதால்).
தன் குழந்தைகளுக்கு நல்ல வாழ்விணை யர்களைத் தேர்ந்தெடுத்தார். அவர்களின் இணை யேற்பு நிகழ்ச்சிகள், ஆசிரியர் அவர்களின் தலைமையில் நடைபெற்றன.
அவரின் பேரக் குழந்தைகளும் பகுத்தறிவா ளர்களாக, நாத்திகர்களாக வாழுகிறார்கள்.’’
இயக்கக் கொள்கையைக் கடைப்பிடிப்பதினால்தான்,
ஒழுக்கத்தோடு இருக்கிறோம்!
ஒழுக்கத்தோடு இருக்கிறோம்!
ஒரு கொள்கை என்றால், பேரக் குழந்தைகள் வரையில் அந்தக் கொள்கையில் இருந்தார்கள் என்றால், இயக்கத்திற்கு லாபம் என்பது இரண்டாவது; முதலில் அந்தக் குடும்பத்திற்கு லாபம்.
நாம் இன்றைக்கு ஒழுக்கத்தோடு இருக்கிறோம் என்றால், இந்த இயக்கக் கொள்கையைக் கடைப்பிடிப்ப தினால்தான், ஒழுக்கத்தோடு இருக்கிறோம்.
இல்லையென்றால், எப்படி வேண்டுமானாலும் போயிருப்போம்.
பொடி, போடுகின்றவனுக்கு பொடி மிச்சம் என்றால், இனி வாழ்நாள் முழுவதும் பொடி போடப் போவதில்லை என்றால், ஆயுளும் மிச்சம், பணமும் மிச்சம்.
சிகரெட் பிடிப்பவர்களைப் பார்த்து நான் வேடிக்கை யாக கேட்டேன்.
‘‘ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் பாக்கெட் வாங்குவீர்கள்? ஒரு வாரத்திற்கு, ஒரு மாதத்திற்கு எத்தனை சிகரெட் பாக்கெட் வாங்குவீர்கள்? ஓராண்டிற்கு எத்தனை சிகரெட் பாக்கெட் வாங்குவீர்கள்? அதனால், எவ்வளவு பணம் செலவாயிற்று?’’ என்று கேட்பேன்.
‘‘அய்யாவிடம் வந்த பிறகுதான், நான் சிகரெட் பிடிப்பதை விட்டுவிட்டேன். அதனால், என்னுடைய ஆயுளையும் நீட்டியிருக்கிறேன்’’ என்பார்.
ஒழுக்கம், கட்டுப்பாடு, நாணயம் இவற்றைத் தவறாமல் கடைபிடிப்பவர்கள்தான் சுயமரியாதை இயக்கத் தோழர்கள்.
‘‘சபாபதியின் பேரக் குழந்தைகளும், கல்வியையே சொத்தாகக் கருதினர். மருத்துவர் மாஸ்கோ மணி, முதுநிலை மருத்துவம்.’’
நம்முடைய பிள்ளைகளைப் பார்க்கும்போது மிகவும் பெருமையாக இருக்கிறது!
அந்தக் காலத்தில் எம்.பி.பி.எஸ். படித்த டாக்டர்க ளையே கண்டுபிடிக்க முடியாது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் நம்முடைய பிள்ளைகளைப் பார்க்கும்போது மிகவும் பெருமையாக இருக்கிறது.
எம்.பி.பி.எஸ். தாண்டி, எம்.டி., எம்.எஸ். அதையும் தாண்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி, எம்.சி.எச்., அதற்குமேல் டி.எம். என்று மேலே மேலே படித்துக் கொண்டே போகிறார்கள்.
ஒரு காலத்தில் நாமெல்லாம் இவற்றையெல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியாது. இவையெல்லாம் யாரால்? தந்தை பெரியாரால் – இந்த இயக்கத்தினால்!
எம்.டி. படிக்கின்றவர்களுக்கு இந்தத் தகவல் தெரியுமா? சரசுவதி பூஜை செய்வதினால், கிடைத்தது என்று நினைப்பார்கள்.
டாக்டர் கிளினீக்கில் பார்த்தீர்களேயானால், பெரியார் படமா இருக்கும்? அதற்குப்பதில், சரசுவதி, லட்சுமி, பிள்ளையார், முருகன் படங்களை வரிசையாக வைத்திருப்பார்கள்.
உடல்நிலை சரியில்லை என்றால், டாக்டரை நம்பித்தான் நாம் அங்கே போகிறோம். சுவரில் மாட்டப்பட்டிருக்கும் படங்களை நம்பி நாம் போக வில்லை. அப்படி அந்தப் படங்களை நம்பிப் போக வேண்டும் என்றால், அந்தப் படங்களை வீட்டிலேயே மாட்டியிருப்போமே – மந்திரம் சொன்னால், உடல்நிலை சரியாகிவிடும் என்று.
ஆனால், படித்த டாக்டரே நம்புகிறார்கள். அவர்களும் முழுமையாக நம்புவதில்லை, சடங்கு போன்றுதான்.
அறுவை சிகிச்சை செய்த டாக்டரிடம், ‘‘எப்படிங்க, ஆபரேசன் நல்லபடியாக முடிந்ததா?’’ என்று கேட்டால்,
‘‘எல்லாம் அவன் விட்ட வழி’’ என்பார்!
‘‘செய்ய வேண்டியதையெல்லாம் செய்துவிட்டேன்; இனிமேல், ‘‘காட் இஸ் கிரேட்’’ என்று சொல்லி, ‘‘எல்லாம் அவன் விட்ட வழி’’ என்று சொல்வார்.
சரிங்க என்று சொல்லிவிட்டு, டிசார்ஜ் ஆகும்போது, ‘‘என்னங்க, பீஸ் கட்டவில்லையே’’ என்று மருத்துவர் கேட்கும்போது, ‘‘அவனிடமே கொடுத்துவிடுகிறேன்; கடைசியாக அவன் விட்ட வழிதானே என்று நீங்கள் சொன்னீர்கள்’’ என்று சொன்னால், அந்த மருத்துவர் ஒப்புக் கொள்வாரா?
இந்த சமுதாயத்தில், இப்படி ஒரு மூடநம்பிக்கையை கடைப்பிடிக்கிறார்கள்.
99 இல் வெற்றி பெற்று, 100 ஆவதில் தோற்றுப் போய்விட்டால், அதைப் பிரபலப்படுத்தி விடுவார்கள் என்கிற பயத்தில்தான், ‘‘அவன் விட்ட வழி’’ என்று சொல்கிறார்கள். அவர்கள் மனப்பூர்வமாக இதைச் சொல்கிறார்கள் என்று நாம் எடுத்துக்கொள்ள முடியாது.
‘‘ஆர்க்கிடெக்ட் வாலண்டினா, பொறியாளர் கோகினூர் முதுகலை, தற்போது அமெரிக்க டெக்சாஸ் மாநிலம், டல்லஸ் என்ற ஊரில் பணியாற்றுகிறார். பொறியாளர் சங்கமித்திரன், பொறியாளர் ஓனிக்ஸ், பொறியாளர் ரேவந்த் சிண்ட்ரெல்லா, ஆர்கிடெக்ட் டானிகா இவர்கள் அனைவரையும் கல்வியால் உயர்த்தி, சுயமரியாதையுடன் வாழச் செய்த பெருமை நூற்றாண்டு காணும் எங்கள் அப்பா மானமிகு சபாபதி அவர்களையும், அவருக்கு அனைத்து வகைகளிலும் உறுதுணையாக இருந்த எங்கள் அம்மா மானமிகு இந்திராணி அவர்களையும் சாரும்.
இப்படி ‘‘தம்மின் தம்மக்கள் பெரிது’’ என்று வாழ வைத்த எங்கள் அப்பா, மருத்துவம் கண்டுபிடிக்காத ஜூரத்திற்கு இயற்கை எய்தினார்.
இவர்களைப் போற்றும்விதமாக, நாங்கள் அனைவரும் எங்கள் வீட்டில் மார்பளவு சிலை வைத்திருக்கின்றோம். எதற்காக என்றால், சடங்குகள் செய்ய அல்ல!
எங்கள் மனதில் என்றும் அவர்கள் வாழ்ந்திருந்தாலும், அவர்களின் பிறந்த நாள், மறைந்த நாள், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள், மறைந்த நாள்களில் மலர்மாலை அணிவித்து மரியாதை செய்வதற்காகவே.’’
இதில் மிகவும் வருந்தவேண்டிய செய்தி, கோவிட் காலத்தில், மூத்த மகள் அறிவுக்கண்ணு அவர்களும், மூத்த மகன் பொறியாளர் முகிலரசு அவர்களும் மறைந்துவிட்டார்கள்.
பெரியாருடைய குடும்பங்கள் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டான குடும்பங்களாகும்!
இவ்வளவு பெரிய இழப்பு என்றாலும், இது ஒரு நல்ல குடும்பம் – எவ்வளவு தொண்டறக் குடும்பமாக இருந்து இன்றைக்கு சமுதாயத்திற்குப் பயன்பட்டு இருக்கின்றதை எண்ணிப் பார்க்கும்போது, பெரியாருடைய குடும்பங்கள் என்பது, அந்தக் குடும்பங்களுக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் எடுத்துக்காட்டான குடும்பங்களாகும்.
ஒவ்வொருவரும் எதிர்நீச்சல் அடிக்கின்றோம்; சோதனைகள் வரும், நோய்கள் வரும். எல்லாவற்றையும் எதிர்க்கவேண்டும். நல்ல அளவிற்கு குடும்பங்கள் வளர வேண்டும் என்பதற்காகத்தான், சபாபதி அவர்களுடைய படத்தைப் பார்க்காமல், பாடமாகப் பார்க்கவேண்டும்.
சபாபதி அவர்களுடைய நூற்றாண்டு விழா- இந்திராணி அம்மையாரின் தொண்டறம் இவற்றை யெல்லாம் நினைத்துப் பார்த்து பெருமையடைகின்றோம்.
இயக்கத்தில் தொண்டாற்றிய அத்துனை பேரையும் நினைத்துப் பார்க்கின்றோம்!
இயக்கத்தில் தொண்டாற்றிய அத்துனை பேரையும் நினைத்துப் பார்க்கின்றோம்; பழையக்கோட்டை அர்ச்சுனன், ஏ.வி.பி. ஆசைத்தம்பி, டாக்டர் சத்தியவாணிமுத்து, புலவர் இராமநாதன், சிவகங்கை சண்முகநாதன், நீதியரசர் சத்தியேந்திரன், ராசகிரி கோ.தங்கராசு, பூண்டி கோபால்சாமி, தவத்திரு குன்றக்குடி அடிகளார், பெங்களூர் வேலு, பொத்தனூர் க.சண்முகம், ஆத்தூர் ஏ.வி.தங்கவேல், வேல்.சோமசுந்தரம், முத்தமிழறிஞர் கலைஞர், நேற்று நூற்றாண்டு விழா கொண்டாடிய முத்துக்கூத்தன், தூக்கநாய்க்கன்பாளையம் சாமி.கைவல்யம், சி.டி.நாயகம், உடையார்பாளையம் வேலாயுதம், பத்தமடை பரமசிவம், பொன்னம்பலனார்.
பெரியார், சுயமரியாதை இயக்கம்
நம்மை இணைத்தது!
நம்மை இணைத்தது!
ஆகவே, பெரிய கூட்டமோ, சிறிய கூட்டமோ தோழர்கள் கூடி மகிழ்ந்து, குடும்பங்கள் சந்திக்க வேண்டும்.
நமக்குள் யார் என்ன ஜாதி என்பது கிடையாது.
கடவுள்கள் நம்மைப் பிரித்தன.
மதங்கள் நம்மைப் பிரித்தன.
கட்சிகள் நம்மைப் பிரித்தன.
ஜாதிகள் நம்மை அறவே பிரித்தன.
பெரியார், சுயமரியாதை இயக்கம் நம்மை இணைத்தது. அதனால், மனிதநேயத்தோடு நாம் இருக்கிறோம்.
எனவே, அந்த இயக்கத்தைப் போற்றுவோம், கொண்டாடுவோம்.
வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.