சென்னை, மே 29- 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத் துறை இறுதி வாய்ப்பு வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக அரசு தேர்வுத் துறை இயக்குநர் ந.லதா அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:
தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தேர்வுத் துறையால் பலமுறை வாய்ப்பு அளிக்கப்பட்டது. எனினும், சில பள்ளிகளின் பெயர்ப் பட்டியலில் திருத்தங்கள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை.
இதையடுத்து தற்போது தேர்வு முடிவு வெளியிடப்பட்ட 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் மாணவர்கள் பெயர், பிறந்த தேதி, ஒளிப்படம், பயிற்று மொழி போன்றவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ள இறுதியாக ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதையடுத்து தலைமை ஆசிரியர்கள் மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழிலில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் அதை மேற்கொண்டு சான்றொப்பமிட்டு தேர்வுத் துறை மாவட்ட அலுவலகத்தில் ஜூன் 13ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். மாணவர்களின் நலன் கருதி பிழைகளற்ற மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சிடுவதற்காக இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.