ராகுல் காந்தி போர்க்குரல்!
புதுடில்லி, மே 28 எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அரசுப் பணி நியமனங்களில் ‘தகுதியானவர் இல்லை’ (Not Found Suitable) என்று கூறி உரிமை மறுக்கப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இது தாழ்த்தப்பட்ட மற்றும், பட்டியல் பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை (OBC) கல்வி மற்றும் தலைமைப் பதவி அடையவிடாமல் செய்யும் சதி என்று அவர் தெரிவித்தார்.
டில்லி பல்கலைக்கழக மாணவர் குழுவு டன் நடத்திய உரையாடலின்போது, ‘‘மோடி அரசு கல்வியின் ஆயுதத்தை மழுங்கடித்து வருவதாக’’ ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
மே 22 அன்று டில்லி பல்கலைக்கழக வளாகத்திற்கு அவர் சென்று மாணவர்களு டன் உரையாடிய காட்சிப் பதிவை, நேற்று (27.5.2025) தனது யூடியூப் சேனலில் பதிவேற்றினார். ‘‘தகுதியானவர் இல்லை என்பது இப்போது புதிய மனுதர்மவிதியாக மாறிவிட்டது இதன் மூலம் தாழ்த்தப்பட்ட /பழங்குடியினர்/ ஓபிசி பிரிவினரின் தகுதியானவர்கள் வேண்டுமென்றே ‘தகுதியற்றவர்கள்’ என்று அறிவிக்கப்படுகிறார்கள்; இது அவர்களை கல்வி மற்றும் தலைமைப் பண்புகளிலிருந்து விலக்கி வைப்பதற்காகவே’’ என்று ராகுல் காந்தி கூறினார்.
பாபாசாகேப் அம்பேத்கர், ‘‘கல்வி என்பது சமத்துவத்திற்கான மிகச்சிறந்த ஆயுதம்’’ என்று கூறியதை சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி, ‘‘ஆனால் மோடி அரசு அந்த ஆயுதத்தை மழுங்கடித்து வருகிறது. டில்லி பல்கலைக்கழகத்தில் 60 சதவீதத்திற்கும் அதிகமான பேராசிரியர் பணியிடங்களும், 30 சதவீதத்திற்கும் அதிகமான இணைப் பேராசிரியர் பணியிடங்களும், ‘தகுதியான வர்கள் இல்லை’ என்று கூறி காலியாக வைக்கப்பட்டுள்ளன’’ என்று தெரிவித்தார்.
இது ஒரு விதிவிலக்கு அல்ல என்றும், அய்அய்டிகள், மத்திய பல்கலைக்கழகங்கள் என எல்லா இடங்களிலும் இதே சதி நடப்ப தாகவும் அவர் கூறினார். ‘தகுதியானவர் இல்லை’ என்பது அரசமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல் மற்றும் சமூக நீதிக்கு இழைக்கப்படும் துரோகம் என்று ராகுல் காந்தி குறிப்பிட்டார்.
‘‘இது கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பற்றியது மட்டுமல்ல – உரிமை, மரியாதை மற்றும் பங்குக்கான போராட்டம். நான் மாணவர்களுடன் பேசினேன். இப்போது நாமெல்லாம் ஒன்றிணைந்து பாஜக/ஆர்எஸ்எஸ்-இன் ஒவ்வொரு இடஒதுக்கீடு எதிர்ப்பு நடவடிக்கையையும் அசமைப்பின் சக்தியால் பதிலடி கொடுப்போம்’’ என்று அவர் கூறினார்.
தாழ்த்தப்பட்ட பழங்குடி மற்றும் ஓபிசி வகுப்பினரின் வரலாற்றை அழிப்பதே ‘ஹிந்துத்துவா திட்டத்தின் நோக்கம்’ என்றும் அந்தக் காட்சிப் பதிவில் அவர் வலியுறுத்தியுள்ளார். தனியார் மயமாக்கலின் உண்மையான பொருள் தாழ்த்தப்பட்ட பழங்குடியின மற்றும் ஓபிசி பிரிவினரை அடிமைகளைப்போலவே வைப்பதுத்தான் ராகுல் காந்தி தனது யூடியூப் பதிவில் குறிப்பிட்டார்.
புதிய கல்விக்கொள்கை, பின்தங்கிய, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின இளைஞர்களிடமிருந்து போட்டித்திறன் நன்மைகளைப் பறிக்கும் முயற்சி என்றும், கல்வி நிறுவனங்களை தனியார் மயமாக்குவதன் மூலம் கல்விச் செலவு அதிகரிக்கப்பட்டு, இந்தியாவின் பெரிய வஞ்சிக்கப்பட்ட பிரிவு நல்ல கல்வியைப் பெறுவதில் சிரமப்படுவதாகவும் காங்கி ரஸ் தலைவர் குற்றம் சாட்டினார். “இந்த அதிகரித்து வரும் ஏற்றத்தாழ்வுக்கு எதிராகவே நமது போராட்டம். இதற்கான தீர்வு ஜாதிவாரி கணக்கெடுப்பு, இடஒதுக்கீட்டில் 50 சதவீத உச்சவரம்பை நீக்குதல், தனியார் நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு அளிக்கும் சட்டப்பிரிவு 15(5), தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களுக்கு உரிய நிதி உதவி அளிக்கும் எஸ்.சி, எஸ்.டி துணைத் திட்டம் ஆகியவைதான். அப்போதுதான் நீதி கிடைக்கும்!’’ என்று அவர் கூறினார்.