டில்லியில் பிரதமரோடு தமிழ்நாடு முதலமைச்சர் சந்திப்பு
புதுடில்லி, மே 25 கோவை, மதுரைக்கான ரயில் மெட்ரோ திட்டங்கள், மீனவர்கள் விவகாரத்தில் நடவடிக்கை, எஸ்எஸ்ஏ திட்ட நிதி விடுவிப்பது ஆகியவை குறித்து பிரதமரிடம் வலியுறுத்தியதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புதுடில்லியில் நேற்று (24.5.2025) நடந்த நிதி ஆயோக் கூட்டத்துக்குப்பின், பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலி்ன் சந்தித்து, தமிழ்நாட்டின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தினார். அதன்பின், செய்தியாளர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன நிலுவைகள் உள்ளன என்பதை பட்டியலிட்டு பேசியுள்ளேன். குறிப்பாக பள்ளிக்கல்வித் துறையில் தமிழ்நாட்டுக்கு விடுவிக்க வேண்டிய எஸ்எஸ்ஏ நிதி, கோவை, மதுரைக்கான மெட்ரோ ரயில் திட்டங்கள், அங்குள்ள விமான நிலையங்களை விரிவாக்கம் செய்தல், சென்னையில் பறக்கும் ரயில் திட்டத்தை மெட்ரோ ரயில் திட்டத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்.
மீனவர்கள் படகுகளை மீட்க வேண்டும்
செங்கல்பட்டு- திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையை 8 வழிச்சாலையாக்க வேண்டும். கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஜாதிப்பெயர் விகுதிகளை மாற்றுவது, கிறிஸ்தவராக மாறிய ஆதிதிராவிடர்களை ஆதிதிராவிடர் பட்டியலில் சேர்ப்பது, இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட இந்திய மீனவர்கள், படகுகளை மீட்பது போன்ற கோரிக்கைகளை வைத்துள்ளேன்.
நிதி ஆயோக் கூட்டம் முடிந்ததும், பிரதமரை சந்திக்க நேரம் கேட்கப்பட்டிருந்தது. அங்கேயே அவர் 5 நிமிடம் நேரம் அளித்தார். அதை பயன்படுத்தி அப்போது இதே கோரிக்கைகளை வலியறுத்தினேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விகளுக்கு முதலமைச்சர் அளித்த பதில்கள்:
கேள்வி: பிரதமர் என்ன பதில் தெரிவித்தார்?
பதில்: அவர் செய்ய மாட்டேன் என்றா கூறுவார். செய்வேன் என்றுதான் தெரிவித்தார். போகப் போக பார்ப்போம்.
கேள்வி: தொடர்ச்சியாக நீங்கள் கோரிக்கை வைத்து வந்தாலும், சட்டப்போராட்டம் நடத்தியே பெற வேண்டியுள்ளது. தற்போது நம்பிக்கை உள்ளதா?
பதில்: ஏற்கெனவே மெட்ரோ ரயில் திட்டத்துக்கு சேர வேண்டிய நிதியை நிறுத்தி வைத்திருந்தனர். அப்போது நான் நேரில் சென்று வலியுறுத்தியதும் செய்து கொடுத்தார்; அதை நினைவுபடுத்தி நன்றி கூறியபோது ‘நீங்கள் வந்து சொன்னதால் செய்தேன்’ என்றார். அதேபோல் இப்போது கோரியதையும் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளேன்.
கேள்வி: தமிழ்நாடு கோரிய கல்வி நிதி கிடைக்குமா?
பதில்: நம்பிக்கையுடன் இருப்போம்.
கேள்வி: அமலாக்கத் துறை மீதான உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்: நீதிபதி நியாயமான தீர்ப்பைத்தான் கூறியுள்ளார்.
கேள்வி: பல மாநிலங்களைத் தொடர்ந்து, தமிழ்நாட்டிலும் அமலாக்கத் துறையால் குற்றச்சாட்டுக்கள் வைக்கப்படுகிறதே?
பதில்: இது அரசியல் ரீதியாக நடைபெறுவது. அதை எப்படி சந்திக்க வேண்டுமோ அப்படி சந்திப்போம்.
கேள்வி: எதிர்க்கட்சித் தலைவர் நீங்கள் டில்லி வந்ததை விமர்சித்துள்ளாரே?
பதில்: பழனிசாமி நான் வெள்ளைக் கொடி காட்டப்போவதாக கூறியுள்ளார். என்னிடம் வெள்ளைக் கொடியும் இல்லை. அவரிடம் உள்ளது போல் காவிக் கொடியும் இல்லை.
கேள்வி: சோனியா, ராகுல் காந்தியுடனான சந்திப்பின் போது கூட்டணி குறித்து பேசப்பட்டதா?
பதில்: அது மரியாதை நிமித்தமான சந்திப்பு. எப்போது டில்லி வந்தாலும் அவர்களை சந்திக்காமல் போவதில்லை. அதேபோல் சந்தித்துள்ளேன். அதேநேரம் அரசியலும் பேசினோம். இல்லை எனக் கூறவில்லை.
கேள்வி: டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல், மணல் குவாரி விவகாரத்தில் ரூ.5 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளதாக சொல்லி வருகிறார்களே?
பதில்: அதெல்லாம், பொய், பித்தலாட்டம். தேவையில்லாமல் பிரச்சாரம் செய்கின்றனர். துறை அமைச்சர்கள் இவற்றை எல்லாம் மறுத்து வருகின்றனர். அவர்கள் திட்டமிட்டு செய்கின்றனர். தேர்தல் நெருங்க நெருங்க இ்ன்னும் செய்வார்கள். எதையும் சந்திக்க தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் பதிலளித்தார்.
(பிரதமரிடம் முதலமைச்சர் வைத்த கோரிக்கைகள் பக்கம் 4இல் காண்க).