வாசிங்டன், மே 13- காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வுகாண உதவத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தலைமைகள்
இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இது பற்றி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தற்போதைய அத்துமீறல் நீடித்தால், ஏராளமான அப்பாவி மக்களின் உயிர்களுக்கும், உடைமைகளுக்கும் பெருத்த சேதம் ஏற்படும் என்பதை புரிந்து கொண்ட இந்தியா மற்றும் பாகிஸ்தானின் வலிமையான, அசைக்கமுடியாத தலைமையை நினைத்து பெருமைப்படுகிறேன்.
இந்த அத்துமீறல் நீடித்திருந்தால், லட்சக்கணக்கான அப்பாவி பொது மக்கள் பலியாகி இருப்பார்கள். உங்களது துணிச்சலான செயல்களால் உங்கள் பெருமை பெரிதும் உயருகிறது. இந்த வரலாற்று சிறப்புமிக்க, வீர, தீர முடிவை எட்ட வைக்க அமெரிக்காவால் முடிந்ததற்காக நான் பெருமைப்படுகிறேன்.
காஷ்மீர் பிரச்சினை
இதுபோல், காஷ்மீர் தொடர்பான நீண்ட கால பிரச்சினையிலும் தீர்வை எட்ட முடியுமா என்பது குறித்து இரு நாடுகளுடனும் இணைந்து செயல்படவும், உதவவும் தயாராக இருக்கிறேன். நல்ல பணி ஒன்றை செய்ததற்காக இந்தியா, பாகிஸ்தான் தலைமையை பாராட்டுகிறேன்.
வர்த்தகம் பற்றி எதுவும் பேசப்படவில்லை. இருப்பினும், இந்தியா, பாகிஸ்தான் என்ற 2 மாபெரும் நாடுகளுடனான வர்த்தகத்தை கணிசமாக உயர்த்தப்போகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நெய்வேலி அனல் மின் நிலையத்தில் தீ விபத்து!
ரூ.1 கோடி பொருட்கள் சேதம்
ரூ.1 கோடி பொருட்கள் சேதம்
கடலூர், மே 13- நெய்வேலி அனல் மின் நிலையத்தில் நேற்று முன்தினம் (11.5.2025) டிரான்ஸ்பார்மர் வெடித்து தீ பரவியது. இதில் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தின் 2ஆம் அனல் மின் நிலைய விரிவாக்கத்தில் நேற்று அதிகாலை டிரான்ஸ்பார்மர் வெடித்து தீ பரவியது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் 4 வாகனங்களில் சென்று தீயை அணைத்தனர்.
விபத்தின்போது என்எல்சி அதிகாரிகள், ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் யாரும் அங்கு பணியில் இல்லாததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அதிக வெப்பம் காரணமாக டிரான்ஸ்பார்மர் வெடித்து விபத்து நேரிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த விபத்தில் காப்பர் வயர் உட்பட ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகியுள்ளதாக கூறப்படுகிறது.