‘‘ஆபரேஷன் சிந்தூர்’’ நடவடிக்கை இன்னும் முடியவில்லை

viduthalai
3 Min Read

புதுடில்லி, மே 9- பாகிஸ்தானில் இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையில் சுமார் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், இந்த நடவடிக்கை இன்னும் முடியவில்லை என்றும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் ராஜ்நாத் சிங் கூறினார்.

‘‘ஆபரேஷன் சிந்தூர்‘‘

பஹல்காமில் 26 அப்பாவி மக்களை கொன்று குவித்த பயங்கரவாதிகளை குறிவைத்து இந்தியா கடந்த 7 ஆம் தேதி நள்ளிரவு பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தியது.

“ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானிலும், ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் ரபேல் போர் விமானங்கள் மூலமும், ஏவுகணை மற்றும் டிரோன்கள் மூலமும் இந்தியா நடத்திய தாக்குதலில் பயங்கரவாதிகளின் கட்டமைப்புகள் தரைமட்டமாகின. மேலும் பயங்கரவாத தலை வர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனால் பாகிஸ்தான் முழுவதும் பேரதிர்ச்சி நிலவி வருகிறது.

மறுபுறம் இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்குப் பதிலடியாக பாகிஸ்தானும் இந்திய எல்லையில் சீண்டி வருகிறது. இதற்கு இந்திய படைகள் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் மேகம் சூழ்ந்துள்ளது.

அனைத்துக்கட்சி கூட்டம்

இந்த சூழலை அனைத்துக் கட்சிகளுக்கும் விளக்குவதற்காக ஒன்றிய அரசு நேற்று (8.5.2025) அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. பாரதீய ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி களும் இந்த கூட்டத்தில் பங்கேற்றன .

ராணுவ அமைச்சர்  ராஜ்நாத்சிங் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், ஒன்றிய அரசு சார்பில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சர்  ஜெய் சங்கர், சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும் மக்களவை எதிர்க் கட்சித்தலைவர் ராகுல்காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லி கார்ஜுன கார்கே, டி.ஆர்.பாலு (தி.மு.க.), அசாதுதீன் ஓவைசி (மஜ்லிஸ் கட்சி) என பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர்.

செயல்பாடுகள்

கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சித்தலை வர்களுக்கு‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை குறித்து ராஜ்நாத் சிங் விளக்கினார்.

அவர் பேசும்போது, ‘பாகிஸ்தானில் இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையில் சுமார் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை. அது தொடர்ந்து நடைபெறும் ஒரு செயல்பாடு. எனவே ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவரங்களை இங்கே பகிர முடியாது. அதனால்தான். ராணுவ அதிகாரிகள் யாரும் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அவர்கள் ராணுவ நடவடிக்கையில் மும்முரமாக உள்ளனர்’ என்றார்.

மேலும் அவர், வெறும் அரசுகளை அமைப்ப தற்காக மட்டும் நாங்கள் அரசியல் செய்யவில்லை, மாறாக நாட்டை கட்டி எழுப்பவும் அரசியல் செய்கிறோம் என்றும் பேசினார்.

படைகளுக்கு பாராட்டு

நிகழ்ச்சியில் பேசிய கட்சித்தலைவர்கள் அனைவரும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்காக ஆயுதப்படைகளை பாராட்டினர்.

மேலும் இந்த விவகாரத்தில் அரசின் நடவ டிக்கைகளுக்கு முழுமையான ஆதரவு அளிப்பதாக கூறிய தலைவர்கள் பயங்காவாதத்துக்கு எதிரான போரில் ஒட்டு மொத்த தேசமும் இணைந்து நிற்பதாகவும் தெரிவித்தனர்.

அதேநேரம் தேச பாதுகாப்பு மற்றும் அனைத்து இந்தியர்களின் பாதுகாப்புக்காக தங்கள் கவலையையும், அக்கறையையும் வெளிப்படுத்தினர்.

கூட்டத்தில் மல்லிகார்ஜூன கார்கே பேசும்போது, ‘இந்த நெருக்கடியான நேரத்தில் நாங்கள் அனைவரும் அரசுடன் இருக்கிறோம்’ என ஆதரவு தெரிவித்தார்.

அசாதுதீன் ஓவைசி கூறுகையில், ‘பஹல்காமில் தாக்குதல் நடத்திய டி.ஆர்.எப். அமைப்புக்கு எதிராக சர்வதேச அளவில் பிரச்சாரம் மேற்கொள்வதுடன், அய்.நா. பாதுகாப்பு சபையில் எடுத்துச்சென்று பயங்கரவாத அமைப்பாக வரையறுக்கவும் வேண்டும்’ என அறிவுறுத்தினார்.

அரசியலில் முதிர்ச்சி

அனைத்துக்கட்சி கூட்டத்துக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு, மேற்படி தகவல்களை தெரிவித்தார். கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் அனைவரும் முதிர்ச்சியை வெளிப்படுத்தியதாகவும், அரசுக்கும், ஆயுதப்படைகளுக்கும் ஒரே குரலில் ஆதரவு தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

முன்னதாக பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து கடந்த 24 ஆம் தேதியும் ஒன்றிய அரசு அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தி விளக்கியது குறிப்பிடத்தக்கது.

ராகுல் காந்தி

ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசிய மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி, இந்தியா-பாகிஸ்தான் இடையே எழுந்துள்ள போர் சூழல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு அமர்வு ஒன்றை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அப்படி நாடாளுமன்ற அமர்வு நடத்தினால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்து களை வெளியிடவும், மக்களின் நம்பிக்கையை அதிகரிக்கவும் உதவும் என்றும் அவர் கூறினார். மேலும் நாடாளுமன்றத்தை கூட்டுவதன் மூலம் ஒரு நல்ல செய்தி இந்தியாவுக்கு வெளியே செல்லும் என்றும் அவர் கூறினார். இந்த தகவல்களை அனைத்துக்கட்சி கூட்டத்துக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய கார்கே தெரிவித்தார். மேலும் இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்காதது குறித்து அவர் ஏமாற்றம் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *