திராவிட மாடல் அரசின் முன்மாதிரி

viduthalai
2 Min Read

சாலை விபத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கு
கட்டணமில்லாத சிகிச்சை திட்டம் அமல்

புதுடில்லி, மே 9- சாலை விபத்துகளில் பாதிக்கப்படும் நபர்களுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சை வழங்கும் திட்டத்தை தற்போது ஒன்றிய அரசு சோதனை முயற்சியாக நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளதாக ஒன்றிய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி நாடா ளுமன்றத்தில் எழுத்து மூலமாக தெரி வித்துள்ளார். இது தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியா முழுவதும் விரைவில் இந்த திட்டம் அமலுக்கு கொண்டுவரப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.

இலவச மருத்துவ சிகிச்சை

இந்தியா முழுவதும் சாலை விபத்து களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சாலை விபத்துகளில் மரணம் அடையும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டு வருகிறது.

இதில் முக்கிய முயற்சியாக இந்தியா முழுவதும் சாலை விபத்துகளில் பாதிக் கப்படும் நபர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை வழங்கும் திட்டத்தை தற்போது சண்டிகர் மற்றும் அசாம் ஆகிய மாநிலங் களில் நடைமுறைக்கு கொண்டு வந்து உள்ளது

இதன் மூலம் இந்தியா முழுவதும் சாலை விபத்தால் பாதிக்கப்படும் நபர்கள் எந்த சாலையில் விபத்து ஏற்பட்டாலும் அவர்கள் உடனடியாக இலவசமாக மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொள்ள முடியும். இதற்காக ஒன்றிய அரசு ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் அவர்கள் ரூ1.5 லட்சம் வரையில் மருத்துவ பலன்களை பாதிக் கப்பட்டவர்கள் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சாலை விபத்து ஏற்பட்ட ஏழு நாட்களுக்குள் அவர்கள் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை ஒன்றிய அரசு தேசிய ஹெல்த் அத்தாரிட்டியுடன் இணைந்து நடைமுறைப்படுத்தியுள்ளது. இதற்கான பணத்தை ஒன்றிய அரசு மோட்டார் வாகன விபத்து நிதியிலிருந்து வழங்குவதற்கான ஒப்புதலையும் வழங்கி உள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் மருத்துவ சிகிச்சை பெறும் நபர்கள் யார் யார் எவ்வளவு பணத்தை என்ன விதமான சிகிச்சைக்கு பெற்றுக் கொள்ள முடியும் என்ற விரிவான விபரங்களை ஏற்கெனவே கடந்த 2022ஆம் ஆண்டு திருத்தப்பட்ட மோட்டார் வாகன விபத்து நிதி குறித்த விதிமுறையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதன்படி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சைக்கான நிதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக மாநில அரசின் காவல்துறை மற்றும் ஒவ்வொரு மாநிலங்களிலும் இந்த திட்டத்தின் கீழ் இணைந்துள்ள மருத்துவமனைகள், மாநில சுகாதாரத்துறை மற்றும் தேசிய இன்பர்மேட்டிக் சென்டர் ஆகியவற்றுடன் இணைந்து ஜெனரல் இன்சூரன்ஸ் கவுன்சிலும் சேர்ந்து செயல்பட்டு இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின்படி எந்த சாலையில் விபத்து நடந்திருந்தாலும் அதில் பாதிக்கப்பட்ட நபர்கள் அவர்களுக்கான மருத்துவ சிகிச்சையை இந்த திட்டத்தின் கீழ் எடுத்துக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சாலையில் ஏற்படும் விபத்துகளில் மரணம் நடைபெறுவது குறையும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. விபத்துகளில் சிக்கும் பலர் உரிய நேரத்தில் சிகிச்சை இல்லாமல் அல்லது பண வசதி இல்லாமல் உயிரிழக்கக் கூடிய அபாயம் இருக்கிறது. அவர்களுக்காக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  விரைவில் இது இந்தியா முழுவதும் உள்ள அனைத்து சாலை விபத்துகளுக்கும் செல்லுபடியாகும் வகையில் விரிவுபடுத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

திராவிட மாடல் அரசின் முன்மாதிரி திட்டத்தை தொடர்ந்து ஒன்றிய அரசு இத்திட்டத்தை அமல்படுத்துகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *