அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு
லக்னோ, மே 7 ராகுல்காந்தி குடியுரிமை தொடர் பான மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.
மனு தாக்கல்
கருநாடக மாநிலத்தை சேர்ந்த பா.ஜனதா தொண்டர் விக்னேஷ் ஷிஷிர் என்பவர், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியின் குடியுரிமை தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில், அவர் கூறியிருந்ததாவது:- ராகுல்காந்தி இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர். இதை நிரூபிக்க தேவையான இங்கிலாந்து அரசின் சில இ-மெயில்களும், ஆவணங்களும் என்னிடம் உள்ளன. எனவே, அவர் இந்தியாவில் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர். மக்களவை உறுப்பினர் பதவி வகிக்க முடியாது. எனவே, 2024-ஆம் ஆண்டில் அவர் பெற்ற மக்களவை தேர்தல் வெற்றியை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இங்கிலாந்துக்கு கடிதம்
இந்த மனு, கடந்த நவம்பர் 25-ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, ஒன்றிய அரசு பதில் அளிக்க அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான துணை சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.பி.பாண்டே, ராகுல்காந்தி குடியுரிமை குறித்து இங்கிலாந்து அரசிடம் தகவல் கேட்டு கடிதம் எழுதி இருப்பதாக கூறினார். கடந்த 21-ஆம் தேதி நடந்த விசாரணையின்போதும், அதே தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்கு உயர்நீதிமன்றம் மே 5-ஆம் தேதிவரை ஒன்றிய அரசுக்கு கால அவகாசம் அளித்தது.
முடித்து வைப்பு
இந்நிலையில், நீதிபதிகள் ஏ.ஆர்.மசூதி, ராஜீவ்சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்றுமுன்தினம் (5.5.2025) இம்மனு விசாரணைக்கு வந்தது. ஒன்றிய அரசு தரப்பில் பதில் அளிக்கப்படவில்லை. அதனால் நீதிபதிகள் மனுவை முடித்து வைத்தனர்.
நீதிபதிகள் கூறியதாவது;- மனுதாரரின் புகாருக்கு தீர்வு காண ஒன்றிய அரசால் எந்த கால வரையறையும் அளிக்க முடியவில்லை. எனவே, மனுவை நிலுவையில் வைத்திருப்பதில் நியாயம் இல்லை. மனுதாரர் மாற்று வழிமுறைகளை ஆராயலாம். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
அமெரிக்காவில் அதானிக்கு எதிரான லஞ்ச வழக்கு
கைவிட வலியுறுத்தி டிரம்ப் அரசுடன் அதானியின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை
வாசிங்டன், மே 7 அமெ ரிக்காவில் அதானிக்கு எதிரான லஞ்ச வழக்கை கைவிட வலியுறுத்தி டிரம்ப் அரசுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. அமெரிக்காவில் மின்உற்பத்தி திட்டங்களை பெற இந்திய அரசு அதிகாரிகளுக்கு அதானி குழுமம் லஞ்சம் தந்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்தியாவில் சூரிய மின்சார விநியோகம் தொடர்பான ஒப்பந்தம் பெறுவதற்கு, ரூ.2,239 கோடி ($265 மில்லியன்) லஞ்சம் கொடுக்க கவுதம் அதானி முன்வந்ததாகக் கூறி அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துடன், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. என்றாலும், இந்தக் குற்றச்சாட்டை அதானி குழுமம் மறுத்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவில் அதானிக்கு எதிரான லஞ்ச வழக்கை கைவிட வலியுறுத்தி டிரம்ப் அரசுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 265 மில்லியன் டாலர் லஞ்ச வழக்கை கைவிடக் கோரும் பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போதைய வேகத்தில் பேச்சுவார்த்தை நடந்தால் அதானிக்கு எதிரான லஞ்ச வழக்கு ஒரு மாதத்தில் கைவிடப்படும். அமெரிக்க அரசு அதிகாரிகளுடன் அதானியின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.