கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தல், கடன் வாங்கியவரை மிரட்டுதல், அவமதித்தல், சொத்துக்களை பறித்தல் ஆகியவை குற்றங்களாக கருதப்படும்
சென்னை, ஏப். 27- கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்க வகைசெய்யும் மசோதாவை சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்தார். இந்த மசோதா வரும் 29ஆம் தேதி நிறைவேற்றப்பட உள்ளது.
கடன்களை வசூலிக்க சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபடுவோருக்கு சிறை தண்டனை விதிக்க வகைசெய்யும் மசோதாவை சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (26.4.2025) தாக்கல் செய்தார். மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:
ஒழுங்குமுறை
பணக் கடன் வழங்குவோர் மற்றும் அடகு கடைகள் தொழிலை ஒழுங்குமுறைப்படுத்தி, கடும் வட்டியில் இருந்து மக்களை காப்பதில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. தமிழ்நாடு அடகு கடைக்காரர்கள் சட்டம்-1943, தமிழ்நாடு பணக் கடன் வழங்குவோர் சட்டம்-1957, தமிழ்நாடு கந்துவட்டி தடை சட்டம்-2003 ஆகியவற்றை அரசு இயற்றியுள்ளது.
ஆனாலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய, நலிந்த பிரிவினர், குறிப்பாக விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள், மகளிர் சுயஉதவி குழுவினர், பணியாளர்கள், நடைபாதை வியாபாரிகள், பால் பண்ணை தொழிலாளர்கள், கட்டிட பணியாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆகியோர் பணக் கடன் வழங்கும் நிறுவனங்களால் ஈர்க்கப்படுகின்றனர். அத்தகைய கவர்ச்சிகரமான கடன்களுக்கு இரையாகி, தாங்க இயலாத கடன் சுமைக்கு ஆளாகின்றனர்.
பாதுகாப்பு
அதேநேரம், பணக் கடன் வழங்கும் நிறுவனங்கள், ஏற்கெனவே நிதி சுமையில் இருக்கும் கடனாளிகளிடம் இருந்து கடனை வசூலிக்க, முறையற்ற வழிகளை நாடுகின்றனர். அது துயரத்தில் இருக்கும் கடனாளிகளை தற்கொலை செய்துகொள்ள தூண்டுதலாக அமைந்து, அதன்மூலம் பலரது குடும்பங்களை அழித்து, சமூக ஒழுங்கை பாதிப்படைய செய்து விடுகிறது.
எனவே, தனிநபர், சுயஉதவி குழுக்கள், கூட்டு பொறுப்பு குழுக்கள் ஆகியோருக்கு பணக் கடன் வழங்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் வலுக்கட்டாய வசூலிப்பு முறையால் ஏற்படும் இன்னல்களில் இருந்து, பொருளாதாரத்தில் பின்தங்கிய, நலிந்த பிரிவினரை பாதுகாக்க சட்டம் இயற்றுவது அவசியமாகிறது. அதற்கான சட்டத்தை இயற்ற அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு இந்த மசோதா வழிவகை செய்கிறது.
வங்கிகள், ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்ட வங்கி சாரா நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் தவிர, தமிழகத்தில் உள்ள பணக் கடன் வழங்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும். ஆனால், கடன் வாங்கியவரிடம் வலுக்கட்டாய வசூல் நடவடிக்கை மேற்கொண்டால், இந்த வங்கிகள், பதிவு செய்யப்பட்ட வங்கி சாரா நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.
இடையூறு ஏற்படுத்தக் கூடாது
கடன் வழங்கிய நிறுவனமோ, அதன் முகவரோ, கடன் வாங்கியவர் மற்றும் அவரது குடும்பத்தினரை வலுக்கட்டாய நடவடிக்கைக்கு உட்படுத்த கூடாது. அந்த வகையில், அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது, வன்முறையை பயன்படுத்துவது, அவமதிப்பது, மிரட்டுவது, அவர்கள் செல்லும் இடங்களில் பின்தொடர்வது, அவர்களுக்கு சொந்தமான அல்லது பயன்படுத்தும் சொத்துகளில் தலையிடுவது, அதை பயன்படுத்த முடியாமல் இடையூறு செய்வது, அந்த சொத்துகளை பறித்துக் கொள்வது ஆகிய செயல்களில் ஈடுபட கூடாது.
அதேபோல, கடன் வாங்கியவரின் வீடு, வசிப்பிடம், வேலை அல்லது தொழில் செய்யும் இடம் ஆகியவற்றுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்த அல்லது கடனை வசூலிக்க, தேவையற்ற செல்வாக்கை பயன்படுத்தி வலுக்கட்டாயப்படுத்துவது, தனியார் அல்லது வெளி தரப்பு முகமைகளின் சேவைகளை பயன்படுத்துவது, அரசு திட்டத்தின்கீழ் உரிமை அளிக்கும் ஆவணங்கள், பிற முக்கிய ஆவணங்கள், பொருட்கள், வீட்டு உடமைகளை வலுக்கட்டாயமாக எடுக்க கோருவது போன்றவை இச்சட்டத்தின் 20ஆவது பிரிவின்படி வலுக்கட்டாய நடவடிக்கைகளாக கருதப்படும்.