புதுடில்லி, ஏப்.24 இந்தியாவில், வாகனங்கள் துறையில் பலர் வேலை இழக்கும் நிலையைப்பற்றி உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
மின்சார வாகனங்களில் செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
ஒன்றிய அரசு தனது துறைகளில் மின்சார வாகனங்களை பயன்படுத்த உத்தரவிடக்கோரி, பொதுநல வழக்கு மய்யம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு, நீதிபதிகள் சூர்யகாந்த், கோடீஸ்வர சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண், மின்சார வாகனங்களில் செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்கள் பயன்பாடு அதிகரித்து வருவதாகக் கூறினார்.
அதற்கு நீதிபதிகள், ‘‘செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வருகையால், வாகனங்கள் துறையில் ஓட்டுநர்கள் போன்றவர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. அவர்களை வேலையை விட்டு நீக்கக்கூடாது” என்று கூறினர்.
மேலும், மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க அவ்வப்போது எடுத்த கொள்கை முடிவுகளை தெரிவிக்குமாறு அட்டார்னி ஜெனரல் வெங்கடரமணியை நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர். விசாரணையை மே 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
வாகனங்கள் துறையில் பலர் வேலை இழக்கும் அபாயம் உச்சநீதிமன்றம் கவலை

Leave a Comment