சென்னை, ஏப்.24- பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக தமிழ்நாட்டி லிருந்து ஜம்மு – காஷ்மீருக்கு சுற்றுலா செல்ல முன்பதிவு செய்தவர்களில் 75 சதவீதம் பேர் தங்களது பயணத்தை ரத்து செய்தனர்.
சுற்றுலா
ஜம்மு – காஷ்மீர் சுற்றுலா செல்ல விரும்புபவர்களின் பட்டியலில் முக்கிய இடத்தை அலங்கரிக்கிறது. இதனால் ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது கடந்த 2020-ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கு 34 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்தனர். இது 2024-ம் ஆண்டு 2.35 கோடியாக உயர்ந்துள்ளது.
பயங்கரவாத தாக்குதல்
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நேற்று முன்தினம் (22.4.2025) பயங் கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தையடுத்து காஷ்மீரில் உள்ள சுற்றுலாதலங்களில் இருக்கும் ஓட்டல்களில் முன்பதிவு செய்யப்பட்ட அறைகள் ரத்து செய்யப்பட்டு வரு கின்றன. மீட்கப்பட்ட தமிழர்கள் டில்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைக்கப் பட்டனர்.
ஆகஸ்டு மாதம் வரை பதிவு செய்யப் பட்டிருந்த ஓட்டல்களின் அறைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. இதேபோல விமான பயணச்சீட்டுகளும் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டிலிருந்து காஷ்மீருக்கு செல்ல பதிவு செய்தவர்களும் தங்களது பயணத்தை ரத்து செய்து வருகின்றனர்.
பயணம் ரத்து
இதுகுறித்து இந்திய டிராவல் ஏஜெண்டுகள் சங்கத்தின் தென் மண்டல தலைவர் டி.தேவகி கூறியதாவது:-
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் காஷ்மீரில் தவித்தால், அவர்களுக்கு உதவ எங்களது சங்கம் சார்பில் உதவி எண்களை அறிவித்துள்ளோம். தமிழ்நாட்டிலிருந்து கோடை விடுமுறைக்காக காஷ்மீருக்கு சீசன் கால கட்டமான ஏப்ரல், மே மாதங்களில் ஏராளமானோர் செல்வது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டும் நிறைய பேர் அங்கு செல்ல முன்பதிவு செய்திருந்தார்கள்.
பின்னர் தமிழ்நாட்டிலிருந்து இந்த மாதம் 30-ஆம் தேதி வரை காஷ்மீர் செல்ல முன்பதிவு செய்திருந்தவர்களில் 75 சதவீதம் பேர் தங்களது பயணத்தை ரத்து செய்துவிட்டனர்.
இது. ஓரிரு நாட்களில் 100 சதவீதத்தை எட்டிவிடும் என்று நம்புகிறோம். இதேபோல கேரளா, ஆந்திரா உள்பட தென்மாநிலங்களில் இருந்து செல்லதிட்டமிட்டு இருந்தவர்களும் பயணத்தை ரத்து செய்து வருகின்றனர். விமான நிறுவனங்களே இம்மாதம் இறுதிவரை காஷ்மீருக்கு முன்பதிவு செய்தவர்களுக்கு, கட்டணத்தை திரும்ப தருவதாக அறிவித்துவிட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.