சென்னை, ஏப்.23- தமிழ்நாடு ஆளுநரின் அரசியல் சாசன விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து ஏப். 25 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் கறுப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
செயற்குழு கூட்டம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் நேற்று (22.4.2025) காலை மாநில தலைமை அலுவலகமான சென்னையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், கே.சுப்பராயன் எம்.பி., மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன் உள்பட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், தமிழ்நாடு ஆளுநரின் அரசியல் சாசன விரோத நடிவடிக்கைகளை கண்டித்து, வரும் 25.04.2025 அன்று, தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கறுப்புக் கொடி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ்நாடு பல்கலைக்கழக வேந்தர் பதவியில் தானே தொடர்வதாக அவரே கருதிக் கொண்டு செயல்படுவது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் சாரத்திற்கு எதிராக சவால் விடுவதாகக் கருத இடமளிக்கிறது.
ஆனால், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு சட்டப்பேரவையின் வழிகாட்டுதல்களைப் பற்றிக் கவலைப்படாமல் தான்தோன்றித்தனமாக செயல்பட்டு வருகிறார் என்பது அவருடைய தொடர்ச்சியான நடவடிக்கைகள் மூலம் தெளிவாகிறது.
இந்நிலையில், துணைவேந்தர்களின் கூட்டத்தை ஊட்டியில் ஆளுநர் கூட்டியிருப்பதும், அதில் பங்கு பெற குடியரசுத் துணைத் தலைவரை அழைத்திருப்பதும் தனது சட்ட விரோத மனப்பான்மையிலிருந்து தமிழ்நாடு ஆளுநர் இன்னும் விடுபடவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பின் உறைபொருளும், மறைபொருளும் சுட்டிக்காட்டுவது, தமிழ்நாடு பல்கலைக்கழகங்களின் வேந்தராக சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி வேந்தராக தொடர முடியாது என்பதே ஆகும்.
எனவே, மாநில அரசு உரிய சட்ட ஆலோசனைகளைப் பெற்று, தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
ஒன்றிய அரசு உடனடியாக சட்டவிரோதமாக செயல்பட்டு வருகிற ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற மாநில செயற்குழு வற்புறுத்துகிறது.
ஆர்ப்பாட்டம்
எனவே ஆளுநரின் சட்ட விரோத நடவடிக்கையையும், அதற்குத் துணையாக குடியரசுத் துணைத் தலைவரின் வருகையையும் கண்டித்து அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டங்களை நடத்துவது என தீர்மானிக்கப்படுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணை வேந்தர்கள் மாநாடு உதகமண்டலத்தில் நடைபெற உள்ள நிலையில் ஏப். 25 ஆம் தேதி மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.