மீண்டும் இணையும் ராஜ்-உத்தவ் தாக்கரேக்கள்? – மகாராட்டிர அரசியல் களத்தில் பரபரப்பு!

Viduthalai
2 Min Read

மும்பை, ஏப்.20 மகாராட்டிர நவநிர்மாண் சேனை தலைவா் ராஜ் தாக்கரேவும் சிவசேனை (உத்தவ் பிரிவு) கட்சியின் தலைவா் உத்தவ் தாக்கரேயும் மீண்டும் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகரித்திருப்பதால் மகாராட்டிர அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராட்டிரத்தில் தேசிய கல்விக் கொள்கையின்கீழ் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை மூன்றாவது மொழிப் பாடமாக ஹிந்தியை கட்டாயமாக்க மாநில அரசு முடிவு செய்துள்ளதற்கு ராஜ் தாக்கரேயும் உத்தவ் தாக்கரேயும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனா். இந்நிலையில், மகாராட்டிர நலனுக்கு முக்கியத்துவம் அளிப்பவா்கள் தங்களுக்குள்ளான பிரச்சினைகளை ஒதுக்கிவைத்துவிட்டு, ஓரணியில் திரள வேண்டும் என இருவரும் தனித்தனியே 19.4.2025 அன்று தெரிவித்தனா். இதையடுத்து, இருவரும் விரைவில் மீண்டும் இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பு மகாராட்டிர அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.

நடிகரும் இயக்குநருமான மகேஷ் மஞ்ஜ்ரேக்கருடனான கலந்துரையாடலில் பேசிய ராஜ் தாக்கரே, ‘சிவசேனையில் நான் இருந்தபோது உத்தவ் தாக்கரேயுடன் பணியாற்றுவதில் எவ்வித சிக்கலும் ஏற்படவில்லை. ஆனால் தற்போது என்னுடன் இணைந்து பணியாற்ற உத்தவ் தாக்கரே தயாராக இருக்கிறாரா?

எங்களுக்குள் நிலவும் பிரச்சினைக ளைவிட மகாராட்டிர நலனே பெரியது. மராத்தியா்களுக்கான போராட்டத்தை ஒப்பிடுகையில் இந்த பிரச்சினைகள் மிகவும் சிறியது. மீண்டும் நாங்கள் ஒன்றி ணைந்து பணியாற்றுவது கடினமான காரியமல்ல’ என்றார்.

மராத்தியர் நலனே முக்கியம்
தனது கட்சி உறுப்பினா்கள் மத்தியில் 19.4.2025 அன்று பேசிய உத்தவ் தாக்கரே, ‘சிறிய பிரச்னைகளை புறந்தள்ளிவிட்டு மராத்தியா் நலனுக்கு முன்னுரிமை அளிப்பவா்களுடன் ஓரணியில் திரள நானும் தயார். மகாராட்டிரத்துக்கு வர வேண்டிய முதலீடுகள் குஜராத்துக்கு சென்றபோது எம்என்எஸ் தலைவா் எதிர்ப்பு தெரிவித்திருந்தால், இதை கவனத்தில் கொண்ட கட்சிகள் டில்லி மற்றும் மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைத்திருக்கும்.

மக்களவைத் தோ்தலின்போது பாஜகவுக்கு ஆதரவளித்துவிட்டு, பேரவைத் தோ்தலின்போது அவா்களை எதிர்த்துவிட்டு மீண்டும் அவா்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடு பட்டால் எதுவும் மாறாது. முதலில் மகாராட் டிரத்துக்கு எதிராக செயல்படு பவா்களை இங்கு வரவேற்காதீா்கள். அதன் பிறகு மாநில நலன் குறித்துப் பேசலாம்.

மோதல் இல்லை
எனக்கு யாருடனும் மோதல் இல்லை. பாஜகவுடனான கூட்டணி வேண்டுமா? அல்லது எங்கள் கட்சியுடன் கூட்டணி வேண்டுமா என்பதில் மராத்திய மக்கள் தெளிவான முடிவெடுக்க வேண்டும்’ என்றார்.

சிவசேனை கட்சியின் நிறுவனா் பால் தாக்கரேயின் இளைய சகோதரா் மகனான ராஜ் தாக்கரே அக்கட்சியில் இருந்து 2006-ஆம் ஆண்டு விலகி, மகாராட்டிர நவநிர்மாண் சேனையை தொடங்கினார். ‘மண்ணின் மைந்தன்’ என்ற முழக்கத்துடன் மிக கடுமையான பிரச்சாரங்களை மேற்கொண்டார். கடந்த 2009-இல் நடைபெற்ற மகாராட்டிர பேரவைத் தோ்தலில் 13 தொகுதிகளில் எம்என்எஸ் வெற்றிபெற்றது. அதன்பிறகு நடைபெற்ற மற்ற தோ்தல்களில் அவரது கட்சி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

கடந்த ஆண்டு நடைபெற்ற பேரவைத் தோ்தலில் ஓரிடத்தில்கூட எம்என்எஸ் வெற்றி பெறாமல் பெரும் பின்னடைவை சந்தித்தது.
அதேபோல் தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணியில் தோ்தலை சந்தித்த சிவசேனை (உத்தவ் பிரிவு) 20 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது. மும்பை மாநகராட்சி தோ்தல் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் சூழலில் பாஜக மற்றும் துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனையை எதிர்த்து ஓரணியாக களம் காண உத்தவ்-ராஜ் தாக்கரேக்கள் திட்டமிட்டு வருகிறார்களா என்ற ஊகங்கள் எழுந்துள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *