சென்னை, ஏப்.6- ஒரே ஆண்டில் பத்திரப் பதிவுத்துறை மூலம் தமிழ்நாடு அரசுக்கு ரூ.21,900 கோடி வருமானம் கிடைத்துள்ளது. மொத்தம் 33 லட்சத்து 60 ஆயிரம் ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசுக்கு வருவாய் ஈட்டி தருவதில் வணிகவரித் துறை, மதுபானம் விற்பனை மூலம் கிடைக்கும் கலால் வரி என அதற்கு அடுத்தப்படியாக பத்திரப்பதிவுத் துறை உள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தம் 587 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்கள் மூலம் பொதுமக்களின் நிலம், மனை, வீடு உள்ளிட்ட அசையா சொத்துகள் அனைத்தும் பதிவு செய்யப்படுகிறது.
இந்த பதிவுக்கு விதிக்கப்படும் பதிவு கட்டணம் மற்றும் முத்திரை கட்டணம் மூலம் நல்ல வருமானம் கிடைக்கிறது. இது தவிர பத்திரப்பதிவு துறை சங்கங்கள், அறக்கட்டளை கள் பதிவு, திருமண பதிவு, வில்லங்க சான்றிதழ், ஆவண நகல்கள் கட்டணம் மூலமும் வருமானம் வருகிறது.
கடந்த 2023-2024ஆம் நிதியாண்டில் 33லட்சத்து 22 ஆயிரம் ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு, அதன் மூலம் ரூ.19 ஆயிரத்து 30 கோடி வருமானம் கிடைத்தது. ஆனால் இந்தாண்டு முன்பு எப்போது இல்லாத அளவிற்கு கூடுதல் வருமானம் கிடைத்துள்ளதாக தகவல் வெளி யானது.
இதுகுறித்து பத்திரப்பதிவுதுறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது:-
தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக தற்போது பத்திரப்பதிவுகள் எளிமைப்படுத்தப்பட்டு உள்ளது.பொது மக்கள், விரைவாக ஆவணங்கள் பதிவு செய்து அன்றையே தினமே ஆவணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் காரணமாக முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு பத்திரப்பதிவு துறைக்கு வருவாய் அதிகரித்து உள்ளது.
கடந்த நிதியாண்டில் (2024-2025), அதாவது 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கடந்தமார்ச் 31ஆம் தேதி வரை 33 லட்சத்து 60 ஆயிரம் ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன அதன் மூலம் அரசுக்கு ரூ.21 ஆயிரத்து 900 கோடி வருமானம் கிடைத்துள்ளது. பத்திரப்பதிவுத்துறை மூலம் ரூ.20 ஆயிரம் கோடிக்கு மேல் வருமானம் கிடைத்து இருப்பது இதுவே, முதல் முறையாகும். முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு வருமானம் 15 சதவீதம் அதிகம் ஆகும்.
அதே காலகட்டத்தில் கேரளாவில் 6 சதவீதமும், கருநாடகாவில் 10 சதவீதமும், தெலங்கானாவில் ஒரு சதவீதமும், ஆந் திராவில் மைனஸ் சதவீதத்திலும் வளர்ச்சி உள்ளது. தமிழ்நாடுதான் 15 சதவீத வளர்ச்சி பெற்று சாதனை படைத்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பத்திரப்பதிவு துறை வருமானத்தை கணக்கிடும்போது மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் ரியல் எஸ்டேட் துறை சிறப்பானதாக இருப்பதும், மக்களும் வீடு, நிலம் வாங்குவதில் அதிகளவு முதலீடு செய்து இருப்பதும் தெரியவந்துள்ளது.