• கச்சத்தீவு இலங்கைக்கு அளிக்கப்பட்ட போதே எதிர்த்தது தி.மு.க. – முதலமைச்சர் கலைஞர்
• தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சினைக்குத் தீர்வு என்று அயல்துறை அமைச்சர் கூறுவது சரியானதல்ல
• பிஜேபி ஆட்சிக்கு வந்தால் ஒரு மீனவர்கூட கைது செய்யப்படமாட்டார் என்று நரேந்திர மோடி கூறியது என்னாயிற்று?
கச்சத்தீவை மீட்கும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைக்கு பிரதமர் மோடி பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்!
சென்னை, ஏப். 2- தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுதல், படகுகளைப் பறிமுதல் செய்தல், சிறைத் தண்டனை, அபராதம் என்றும், இலங்கை அரசு – அதன் கடற்படை தாக்குதல் இவற்றிலிருந்தும் நிரந்தரமாக விடுபட கச்சத்தீவு மீட்கப்படவேண்டும் என்றும், இந்தியப் பிரதமர் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைக்கு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்றும், திமுகவைப் பொறுத்தவரையில் தொடக்க முதலே கச்சத்தீவை இலங்கைக்கு அளித்தற்கு எதிர்த்தே வந்தது என்றும், முதல் அமைச்சர் கலைஞர் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடமும் கச்சத்தீவை இலங்கைக்கு அளிக்கக் கூடாது என்று வலியுறுத்தினார் என்றும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (2.4.2025) சட்டப்பேரவையில் தீர்மானம் முன்மொழிந்து ஆற்றிய உரை வருமாறு:
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரின் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதை கனத்த இதயத்தோடு இந்த மாமன்றத்தில் நான் பதிவு செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன். முற்றுப்புள்ளி வைக்க முடியாத தொடர் பேரழிவாக இது அமைந்திருக்கிறது. அங்கு எத்தனை அரசியல் நிலைமைகள் மாறினாலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது மட்டும் இன்னும் மாறாமல் இருக்கிறது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இந்திய மீனவர்கள்தான் என்பதை ஒன்றிய அரசு அடிக்கடி மறந்துவிடுகிற காரணத்தால், நாம் மீண்டும் மீண்டும் அவர்களை தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் என்று அழுத்தமாகச் சொல்ல வேண்டியதாக இருக்கிறது. கடல் நீர் ஏன் உப்பாக இருக்கிறது? கடல் கடந்து போன தமிழனின் கண்ணீரால் என்று அறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார். கடல் நீர் இன்று ஏன் சிவப்பாக இருக்கிறது? தமிழ்நாட்டு மீனவர் சிந்திய இரத்தத்தால் என்று சொல்ல வேண்டிய கவலையான நிலைமையில் தான் நாம் நின்று கொண்டிருக்கிறோம்.
பிரதமர் மோடி அன்று சொன்னார்
ஒன்றியத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தால் ஒரு மீனவர்கூட கைது செய்யப்படமாட்டார் என்று 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள் சொன்னார்கள். ஆனாலும், இந்தத் தாக்குதல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இலங்கையில் சில மாதங்களுக்கு முன்னால் ஆட்சி மாற்றம் நடந்திருக்கிறது. ஏற்கெனவே இருந்தவர்கள் தோல்வியடைந்து, புதியவர்கள் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். ஆனாலும், தமிழ்நாட்டு மீனவர்கள் நிலைமை மாறவில்லை; மீனவர்கள் மீதான தாக்குதல் ஓயவில்லை. பாரம்பரிய மீன்பிடி உரிமை கொண்ட நம் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும்போது தொடர்ந்து சிறைபிடிக்கப்படுகிறார்கள்; படகுகள் இலங்கை அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
மார்ச் 27 அன்று, நாடாளுமன்ற மாநிலங்களவை யில் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் மாண்புமிகு ஜெய்சங்கர் அவர்கள், 97 இந்திய மீனவர்கள் இலங்கைச் சிறையில் இருக்கிறார்கள் என்று ஒரு புள்ளிவிவரத்தைக் கொடுத்திருக்கிறார்கள். அதில், 11 பேரை கடந்த 27 ஆம் தேதி இலங்கைக் கடற்படை கைது செய்திருக்கிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு மட்டும் 530 மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அமைச்சர் சொன்ன கணக்குப்படி பார்த்தால், ஒரு நாளைக்கு இரண்டு மீனவர்களை கைது செய்துள்ளார்கள். எல்லைதாண்டி வந்தார்கள் என்று சொல்லி அவர்களுக்கு அதிகபட்ச சிறை தண்டனை விதிக்கப்படுகிறது அல்லது அதிகபட்ச அபராதம் விதிக்கப்படுகிறது. அண்டை நாடாக இருந்து கொண்டு இந்திய மீனவர்கள் மீது எந்தவிதமான இரக்கமும் இல்லாமல், நம் மீனவர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும்விதமாக, ஏன் அடியோடு பறிக்கும்விதமாக இலங்கைக் கடற்படையினரும், இலங்கை அரசும் நடந்து கொள்வது நமக்கெல்லாம் மிகுந்த கவலையளிக்கிறது; கண்டிக்கத்தக்கது. இதனை ஒன்றிய பா.ஜ.க. அரசு தடுத்து நிறுத்திட வேண்டும்.
சவால் எங்கே இருக்கிறது?
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது சவாலாக இருக்கிறது என்று ஒன்றிய அமைச்சர் திரு. ஜெய்சங்கர் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். இதில் என்ன சவால் இருக்க முடியும் என்று தெரியவில்லை. வேறொரு மாநில மீனவர்கள் இப்படி தொடர் தாக்குதலுக்கு உள்ளானால், இப்படித்தான் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பார்களா? தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து தமிழ்நாடு அரசின் சார்பில் நான் தொடர்ந்து கடிதம் எழுதிக் கொண்டு வருகிறேன். இதுவரைக்கும் மீனவர்கள் கைது, தாக்குதல் குறித்து 74 கடிதங்களை ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கும், மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கும் எழுதியிருக்கிறேன்.
பிரதமர் அவர்களை நேரில் சந்திக்கும் போதெல்லாம் இதுகுறித்து வலியுறுத்தியிருக்கிறேன். இரு நாட்டு மீனவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் ஆக்கபூர்வமான முடிவுகள் எட்டப்பட இயலாமல் கடந்து கொண்டிருக்கிறது. கடிதம் எழுதினால் விடுவிப்பது, பிறகு கைது செய்வதென்று இலங்கை அரசின் நடவடிக்கை தொடர்ந்து கொண்டே இருப்பதால், தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுகிறது. மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டு, பாரம்பரிய மீன்பிடி உரிமை கேள்விக்குறியாகி, கடலுக்குச் சென்றால் பத்திரமாக வீடு திரும்புவார்களா நம் சொந்தங்கள் என்று குடும்பத்தினர் மீளாக் கவலையில் மூழ்கியிருக்க வேண்டிய துயர நிலை ஏற்பட்டிருக்கிறது. எவ்வளவு காலத்துக்கு இதனைச் சகித்துக் கொண்டு இருக்க முடியும்? இதுபோன்ற சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண கச்சத்தீவு மீட்பே மிகச் சரியான வழி என்பதை இம்மாமன்றத்தின் வாயிலாக மீண்டும் வலியுறுத்திட விரும்புகிறேன். (மேசையைத் தட்டும் ஒலி)
முதல் அமைச்சர் கலைஞர்
அப்பொழுதே எதிர்த்தார்
அப்பொழுதே எதிர்த்தார்
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கச்சத்தீவு விவகாரத்தைப் பொறுத்தவரைக்கும், கச்சத்தீவை மாநில அரசுதான் இலங்கைக்கு அளித்தது போன்று ஒரு தவறான தகவலைப் பரப்பி அரசியல் செய்வது அரசியல் கட்சிகளுக்கு வழக்கமாகி விட்டது. ஆனால், அரசியல் ஆதாயத்திற்காக கட்சிகள் செய்யும் அதே தவறை ஒன்றிய அரசு செய்வது வருந்தத்தக்கது; ஏற்கமுடியாதது. கச்சத்தீவைப் பொறுத்தவரைக்கும், அந்தத் தீவைக் கொடுத்து, ஒப்பந்தம் போட்ட போதே முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். தமிழ்நாட்டு மக்கள் அதை விரும்ப மாட்டார்கள் என்று எடுத்துச் சொல்லியிருக்கிறார்.
கச்சத்தீவு இலங்கைக்கு அளிக்கப்படக் கூடாது என்று அழுத்தந்திருத்தமாக வாதிட்டு இருக்கிறார். அன்றைக்கிருந்த தி.மு.க. எம்.பி.-க்கள் இரா செழியன், எஸ்.எஸ்.மாரிச்சாமி ஆகியோர் நாடாளுமன்றத்திலே கடுமையாக எதிர்த்து இருக்கிறார்கள். அதையும் மீறி கச்சத்தீவு ஒப்பந்தம் 28.6.1974 அன்று கையெழுத்து ஆனவுடன், மறுநாளே அதாவது, 29.6.1974 அன்றே அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் கூட்டி இதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றி, அன்றையதினமே பிரதமருக்கும் கடிதம் எழுதினார்.
அன்றைய பிரதமருக்கு அன்றைய முதலமைச்சர் தெரிவித்தது என்ன?
அந்தக் கடிதத்தில், “I am constrained to express our deep disappointment over the recent Indo-Sri Lanka Agreement” என்று குறிப்பிட்டு- தமிழ்நாடு அரசின், தமிழ்நாட்டு மக்களின் எதிர்ப்பை பிரதமருக்குத் தெரிவித்துள்ளதை இங்கே நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அப்போதே 21.8.1974 அன்று “இந்தியாவுக்கு சொந்தமானதும், தமிழ்நாட்டுக்கு நெருங்கிய உரிமைகள் கொண்டதுமான கச்சத்தீவு பிரச்சினையில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவு பற்றி இந்தப் பேரவை தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. மத்திய அரசு இதனை மறுபரிசீலனை செய்து கச்சத்தீவின் மீது இந்தியாவிற்கு அரசுரிமை இருக்கும் வகையில் இலங்கை அரசுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தைத் திருத்தியமைக்க முயற்சி எடுத்து, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறது” என அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து நிறைவேற்றியவர் நம்முடைய முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள்தான்.
கச்சதீவை மீட்கவும், கச்சத்தீவில் இருக்கிற இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலைநாட்டவும் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை திராவிட முன்னேற்றக் கழக அரசு எடுத்து வந்திருக்கிறது. கழக அரசு ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கும், பிரதமருக்கும் கடிதங்கள் எழுதி தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை மீட்க வலியுறுத்தி வந்திருக்கிறது என்பதைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
ஏற்கனவே முன்னாள் முதலமைச்சர் அம்மையார் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது 3.10.1991 மற்றும் 3.5.2013 ஆகிய தேதிகளிலும், அதேபோன்று, இங்கே அமர்ந்திருக்கக்கூடிய திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் முன்னாள் முதலமைச்சராக இருந்தபோது 5.12.2014 அன்றும் கச்சத்தீவைத் திரும்பப் பெற இந்த அவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஒன்றிய அரசு வலியுறுத்தப்பட்டுள்ளது. நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்கள் முதன்முதலில் தமிழ்நாட்டிற்கு வந்தபொழுது கச்சத்தீவைத் திரும்பப் பெற அவரிடம் வலியுறுத்திக் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறேன்.
பிறகு 19.7.2023 அன்று மாண்புமிகு இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், “வரலாற்று ரீதியாக கச்சத்தீவு இந்தியாவின் ஓர் அங்கமாக இருந்திருக்கிறது. தமிழ்நாடு மீனவர்கள் பாரம்பரியமாக கச்சத்தீவைச் சுற்றி மீன்பிடித்துள்ளார்கள். மாநில அரசின் ஒப்புதலின்றி கச்சத்தீவு இலங்கைக்கு மாற்றப்பட்டதால், தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமைகளும், வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.” என்பதை மேற்கோள்காட்டி “கச்சத்தீவைத் திரும்பப் பெற வேண்டும். அதுவே தமிழ்நாட்டு மீனவர்களுக்கு நிரந்தரத் தீர்வாக அமையும்” என்று வலியுறுத்தி, “அதுவரை தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை மீட்டுக் கொடுங்கள்” என்று கேட்டுக் கொண்டேன்.
ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்களுக்கும் எனது 2.7.2024 தேதியிட்ட கடிதம் மூலம் கச்சத்தீவு பிரச்சினையையும், தமிழ்நாட்டு மீனவர்களின் மீன்பிடி உரிமையையும் வலியுறுத்தியிருக்கிறேன். ஆனால், இன்றுவரை மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்திருக்கக்கூடிய பா.ஜ.க. அரசு கச்சத்தீவை மீட்பது குறித்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதை நான் வேதனையுடன் இங்கே குறிப்பிடுகிறேன்.
ஆகவே, இந்தச் சூழலில், தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும் போது இலங்கைக் கடற்படையினரால் கடும் தாக்குதலுக்கு உள்ளாவது, படகுகள் பறிமுதல் செய்யப்படுவது, கடும் அபராதம் விதிக்கப்படுவது போன்றவற்றிலிருந்து தமிழ்நாட்டு மீனவர்களைப் பாதுகாக்கவும், விரைவில் இலங்கை செல்லும் பிரதமர் அவர்கள் தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணவும், கச்சத்தீவை மீட்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைக்கு பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றம் விரும்புகிறது. இதனை அடிப்படையாகக் கொண்ட தீர்மானத்தை இப்போது நான் முன்மொழிகிறேன்: இவ்வாறு முதலமைச்சர் உரையாற்றினார்.