திருவனந்தபுரம்,பிப்.26- கேரள பா.ஜ.க. தலைவா் பி.சி.ஜாா்ஜின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, கோட்டயம் மாவட்டத்தில் உள்ள எரட்டுப்பேட்டை நீதிமன்றத்தில் அவா் சரணடைந்தாா்.
மேனாள் எம்எல்ஏவான ஜாா்ஜ், தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் மத வெறுப்புணா்வைத் தூண்டும் வகையில் சிறுபான்மை சமூகத்தினருக்கு பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது.
வழக்கு
இதுகுறித்து முஸ்லிம் யூத் லீக் தலைவா் முகமது ஷிஹாப் அளித்த புகாரின் அடிப்படையில், ஜாா்ஜ் மீது பாரதிய நியாய சம்ஹிதா சட்டத்தின் 196(1)(ஏ), 299 பிரிவுகள் மற்றும் கேரள காவல்துறை சட்டத்தின் பிரிவு 120(ஓ) ஆகியவற்றின் கீழ் எரட்டுப்பேட்டை காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கில் ஜாா்ஜின் முன்ஜாமீன் மனுவை கோட்டயம் மாவட்ட அமா்வு நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து, காவல்துறை விசாரணைக்கு ஆஜராக பிப்ரவரி 24-வரை அவகாசம் கோரி கேரள உயா்நீதிமன்றத்தில் அவா் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தாா்.
அந்த மனுவை தள்ளுபடி செய்த உயா்நீதிமன்றம், ‘இதுபோன்ற வழக்கில் முன்ஜாமீன் வழங்குவது சமூகத்துக்கு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும்’ எனக் கூறியது.
இதையடுத்து, ஜாா்ஜை காவலில் எடுக்க காவல்துறை நடவடிக்கையைத் தொடங்கியது. இந்நிலையில், எரட்டுப்பேட்டை நீதிமன்றத்தில் அவா் கடந்த திங்கட்கிழமை சரணடைந்த ஜாா்ஜை காவல் துறையின் காவலுக்கு அனுப்பி நீதிபதி உத்தரவிட்டாா். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.