இந்துக் கோயில்களில் யானை என்ற விலங்குக்கு முக்கியத்துவம் உண்டு. திருவிழாக் காலங்களில் சிங்காரித்து அலங்காரமாக ஊர்வலத்தில் அழைத்துச் செல்லுவார்கள்.
விநாயகக் கடவுளே யானை முகத்தான் தானே! பாகவத புராணத்தில் ‘கஜேந்திர மோட்சம்’ என்ற கதையளப்பும் உண்டு.
முதலைப் பிடியில் சிக்கிய கஜேந்திரன் என்னும் யானையின் அபயக் குரல் கேட்டு பகவான் விஷ்ணு ஓடோடி வந்து, கஜேந்திரன் யானையைக் காப்பாற்றி மோட்சம் அளித்தானாம். அதற்குக் ‘கஜேந்திர மோட்சம்’ என்று பெயராம்.
வைணவ சமயத்தில் சரணாகதி தத்துவத்திற்கு இதனை ஓர் எடுத்துக்காட்டாகக் கூறுவர். ஆனால் இப்பொழுது கேரளாவில் கோயில் திருவிழாக்களில் என்ன நடக்கிறது?
கேரளாவில் கோவில் திருவிழாக்கள் அதிகம் நடைபெறும். இதில், சாமி சிலைகளை சுமந்து செல்ல மற்றும் ஊர்வலத்திற்கு என யானைகளை பயன்படுத்துவது வழக்கம். ஆனால், சமீப நாட்களாக கேரளாவில் இதுபோன்ற விழாக்களில் பங்கேற்ற யானைகள் திடீரென மிரண்டு ஓடின. சுற்றியிருந்தவர்களை தாக்கின. (மதம் யாருக்குப் பிடித்தாலும் ஆபத்துதானே!)
கேரளாவில் கடந்த 10 நாட்களில் நடந்த நிகழ்வுகளில் 5 பேர் பலியானார்கள். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கோவிலின் சொத்துகளும் சேதமடைந்தன. கேரளாவின் கோயிலாண்டி பகுதியில் திருவிழாவில் யானை மிரண்டு, ஓடி தாக்கியதில் 3 பேர் கொல்லப்பட்டனர். 36 பேர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலில் கோவிலில் இருந்த அலுவலகம் ஒன்றும் சேதமடைந்தது. 2 மணிநேர போராட்டத்திற்கு பின்னர் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. திருவிழாவின்போது, பட்டாசு வெடித்த சத்தம் கேட்டதும் யானைகள் மிரண்டு ஓடியுள்ளன என கூறப்படுகிறது.
இதேபோன்று கேரளாவில் மற்றொரு நிகழ்வில் திருச்சூரில் மசூதி ஒன்றில் நடந்த திருவிழாவில் பங்கேற்ற யானை மிரண்டதில் ஒருவரைக் குத்திக் கொன்றுள்ளது. மற்றொரு சம்பவத்தில், பாலக்காட்டில் பாகன் ஒருவரை யானை மிதித்துக் கொன்றது. கடைகள் மற்றும் வாகனங்களையும் சூறையாடியது.
கடந்த ஜனவரியில் மலப்புரம் பகுதியில் யானை தாக்குதலில் ஒருவர் பலியானார். 17 பேர் காயமடைந்தனர். கேரளாவில் ஆண்டுதோறும், யானைகளின் தாக்குதலுக்கு 50 பேர் பலியாகின்றனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைகின்றனர் என தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.
இதேபோன்று, கூட்டத்துக்குள் புகுந்து அமளி ஏற்படுத்தி, மக்களை அச்சமடையச் செய்வது மற்றும் திருவிழாக் காலங்களில் யானை கிணற்றில் விழுந்து விடும் நிகழ்வுகளும் நடந்துள்ளன. யானையால் மக்களுக்கு அச்சுறுத்தல், சொத்துகளுக்குச் சேதம் ஏற்படுவதுடன், யானைகளுக்கும் பாதிப்புகள் ஏற்படுகின்றன.(கடவுள் என்ன செய்து கொண்டிருந்தாராம்?
திருவிழாக்கள் மற்றும் ஊர்வலங்களில் யானைகளைப் பயன்படுத்தும்போது, அதிக சத்தம், போக்குவரத்து, பட்டாசு வெடித்தல் மற்றும் பிற நடவடிக்கைகளால் அவை உடல் ரீதியாகவும் மற்றும் மனரீதியாகவும் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன.
இதனால் சில தனியார் அமைப்புகள் யானைகளைப் போன்று காணப்படும் இயந்திர யானைகளை வழங்கி, உதவ முன்வந்துள்ளன. இவை உருவத்தில் உண்மையான யானைகளைப் போன்றே காணப்படும். அவை 3 மீட்டர் உயரத்துடன், 800 கிலோ எடை கொண்டிருக்கும். ரப்பர், உலோகம், நுரை மற்றும் ஸ்டீல் போன்ற பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படும். இந்த யானைகளை இயக்க 5 இயந்திரங்கள் இணைக்கப்பட்டு உள்ளன.
அது தலையை ஆட்டும். காதுகள் மற்றும் கண்களை அசைக்கும். வாலை சுழற்றும். துதிக்கையை உயர தூக்கும். தண்ணீர் தெளிக்கவும் செய்யும். மக்கள் அதன் மேல் ஏறி அமரலாம். அதற்கு வசதியாக, அந்த யானையின் முதுகில் சீட் ஒன்று வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த யானைகளின் கால்கள் பகுதியில் சக்கரங்கள் இணைக்கப்பட்டு இருக்கும். அதன் உதவியுடன் இந்த இயந்திர யானைகளை, விழாக்களில் மற்றும் பேரணிகளில் நகர்த்திக் கொண்டு செல்ல முடியும்.
தென்னிந்தியாவில் உள்ள கோவில்களில் இதுவரை 13 இயந்திர யானைகள் பயன்படுத்தப்படுகின்றன.
எப்படி இருக்கிறது? கோயில் சம்பிரதாயங்கள், ஆகம விதிகள் எல்லாம் எங்கே போயின? அஞ்ஞானத்தை விஞ்ஞானம்தான் காப்பாற்ற வேண்டியுள்ளது!
மதமாக இருந்தாலும் மாற்றம் என்பதே மாறாதது!