புதுடில்லி,பிப்.17- டில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 18 பேர் உயிரிழந்தனர். டில்லியில் உள்ள ரயில் நிலையத்தில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெறும் கும்பமேளா நிகழ்ச்சிக்கு செல்ல காத்திருந்த பயணிகள் முண்டியடித்து ரயிலில் ஏற முயற்சித்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் 18 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில், டில்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்த சம்பவத்தில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டுமென காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், டில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட நிர்வாக திறனற்ற செயலுக்காக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும். அவர் பதவி விலகவில்லையென்றால் அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும்.
மணிக்கு 1,500 பயணச் சீட்டு விற்பனை செய்யப்படும்போது எத்தனை பயணிகள் ரயில் நிலையத்திற்குள் நுழைந்திருப்பார்கள் என்று ரயில்வே அதிகாரிகளுக்கு நன்கு தெரியும். கூட்டத்தை நிர்வகிக்க போதிய ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும். ரயில் நிலையத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் எங்குமே இல்லை. பயணிகளே கூட்டத்தை நிர்வகித்துள்ளனர். அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு இந்த விபரீதம் அரங்கேறியுள்ளது’ என்றார்.
காவல்துறை அதிகாரிகளின் முகாம் அலுவலகங்களில்
பெண் காவலர்களை பணி அமர்த்த வேண்டாம்
ஏடிஜிபி உத்தரவு
சென்னை,பிப்.17- காவல் துறை அதிகாரிகளின் முகாம் அலுவலகங்களில் பெண் காவலா்களை பணி அமா்த்துவதை தவிர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு காவல் துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீா்வாதம் உத்தரவிட்டுள்ளார்.
பெண் காவலர்கள்
தமிழ்நாடு காவல் துறையில் உள்ள மொத்த அதிகாரிகள், காவலா்கள் எண்ணிக்கையில் 30 சதவீதம் பெண் காவலா்கள் உள்ளனா். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளை அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துறையினர் விசாரித்து வருகின்றனா். குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. எனவே இந்த வழக்குகளை கையாள்வதற்கு கூடுதலாக பெண் காவலர்கள் காவல் நிலையப் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்தது.
ஏடிஜிபி உத்தரவு
இதன் விளைவாக தமிழ்நாடு காவல் துறையின் சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீா்வாதம் ஒரு சுற்றறிக்கையை அனைத்து மாநகர காவல் ஆணையா்கள், மண்டல அய்ஜிக்கள், சரக டிஅய்ஜிக்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் ஆகியோருக்கு கடந்த வாரம் அனுப்பினார். அதில், காவல் துறை அதிகாரிகளின் முகாம் அலுவலகங்களில் கணினியை கையாள்வதற்கும், தொலைபேசி அழைப்புகளை கையாள்வதற்கும் பெண் காவலா்களை பணியில் அமா்த்துவதாக தகவல் வந்துள்ளன.
தற்போது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், அந்த வழக்குகளை விசாரணை செய்வதற்கு பெண் காவலா்களின் பணி முக்கியமானதாகிறது. புகார் அளிக்கவரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக உணரவும், அவா்களுக்கு ஆறுதலாக இருக்கவும் காவல் நிலையங்களில் பெண் காவலா்கள் அதிகளவில் பணியில் இருக்க வேண்டும். எனவே நிர்வாகப் பணிகளுக்காக காவல் துறை அதிகாரிகளின் முகாம் அலுவலகங்களில் பெண் காவலா்கள் தேவையற்ற முறையில் பணியில் அமா்த்துவதை தவிர்க்க வேண்டும்.
முகாம் அலுவலகங்களில் பணியாற்றும் பெண் காவலா்களை, காவல் நிலைய களப்பணிக்கு விரைவில் மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
திறந்தவெளி அருங்காட்சியக பணிகள் கீழடியில் துவங்கின
திருப்புவனம்,பிப்.17- கீழடியில் நான்கரை ஏக்கர் பரப்பளவில் திறந்தவெளி அருங்காட்சியகத்தின் கட்டுமானப் பணிகளை அமைச்சர்கள் கேஆர்.பெரியகருப்பன், தங்கம் தென்னரசு துவக்கி வைத்தனர்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2014இல் ஒன்றிய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் நதிக்கரை நாகரீகத்தை தேடி அகழாய்வுப் பணிகள் நடந்தது. அப்போது 2,600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களின் கட்டடக் கலை, விவசாயம், தொழில் மேலாண்மை, கால்நடை வளர்ப்பு, எழுத்தறிவு உள்ளிட்ட பல்வேறு தொல்லியல் சான்றுகள் கண்டறியப்பட்டன. அடுத்து தமிழ்நாடு தொல்லியல் துறை அகழாய்வுப் பணிகளை தொடர்ந்து நடத்தி வருகிறது.
அகழாய்வு நடந்த இடங்கள் திறந்தவெளி அருங்காட்சியகமாக அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வு நடந்த இடம் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.
கீழடியில் இந்திய தொல்லியல் துறை சார்பில் முதல், இரண்டு, மூன்றாம் கட்ட அகழாய்வு நடந்த இடங்களில் இருந்த கட்டுமானங்களும் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் 4 மற்றும் 5 கட்ட அகழாய்வு நடந்த இடங்களில் கண்டறியப்பட்ட கட்டுமானங்களும் நான்கரை ஏக்கர் பரப்பளவு நிலங்களில் உள்ளன. அந்த இடங்களில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க தமிழ்நாடு அரசு நிலங்களை கையகப்படுத்தி நில உரிமையாளர்களுக்கு இழப்பீடும் வழங்கிவிட்டது.
நிலம் வழங்கிய நில உரிமையாளர்கள் 16 பேருக்கு அருங்காட்சியகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அரசாணைகளை நேற்று (16.2.2205) வழங்கி பாராட்டினர்.
தொடர்ந்து 15 கோடியே 69 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நடக்கவுள்ள திறந்தவெளி அருங்காட்சியக கட்டுமானப் பணிகளை மண் வெட்டியால் வெட்டி அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், தங்கம் தென்னரசு, மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், தொல்லியல் ஆணையர் சிவானந்தம் ஆகியோர் துவக்கி வைத்தனர். தொடர்ந்து பத்தாம் கட்ட அகழாய்வு நடக்கும் இடத்தை பார்வையிட்டனர்.