கும்பமேளாவா? பக்தர்களை மரணக் குழியில் தள்ளும் நிகழ்ச்சியா?

Viduthalai
2 Min Read

பேருந்துடன் கார் மோதி 10 பேர் நசுங்கிச் செத்த பரிதாபம்

லக்னோ, பிப்.16- கும்பமேளாவா? பக்தர் களை மரணக் குழியில் தள்ளும் நிகழ்ச்சியா? தொடரும் மரணங்கள் விவரம் வருமாறு:
குளிக்கப் போகும் போது ஒரு விபத்து
உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக சத்தீஷ்காரின் கோர்பா மாவட்டத்தில் இருந்து பக்தர்கள் சிலர் காரில் புறப்பட்டு சென்றனர். அவர்களுடைய கார் பிரயாக்ராஜ் நகரில் மெஜா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நெடுஞ்சாலையில் சென்றபோது, பேருந்து மீது மோதி விபத்தில் சிக்கியது. இந்த சம்பவத்தில் காரில் பயணித்த 10 பேரும் உயிரிழந்தனர். பேருந்தில் இருந்த பயணிகளில் சிலருக்கு காயம் ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ பகுதிக்கு சென்று விபத்திற்கான காரணம் பற்றி விசாரித்து வருகின்றனர்.

குளித்துவிட்டுத் திரும்பும் போது மற்றொரு விபத்து
உத்தரபிரதேசம் பருச் மாவட்டத்தை சேர்ந்த 10 பேர் பிரயாக்ராஜில் உள்ள கும்பமேளாவிற்கு சென்று நீராடினர். இந்நிலையில் கும்பமேளாவில் இருந்து வேனில் திரும்பிய பேர் குஜராத்தின் லிம்கேடா அருகே இந்தூர்-அகமதாபாத் நெடுஞ்சாலையில் எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த வேன் அங்கு சாலை ஓரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதியது. இதில் வேனில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 பேர் பலத்த காயமடைந்தனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விபத்தில் படுகாயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கோர விபத்தில் இறந்தவர்கள் அங்கலேஷ்வரைச் சேர்ந்த தேவ்ராஜ் நாகும் (49) அவரது மனைவி ஜசுபா (47), தோல்காவைச் சேர்ந்த சித்ராஜ் தாபி (32) மற்றும் ரமேஷ் கோஸ்வாமி (47) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தீவிபத்தில் உயிரிழப்பு
உத்தரப் பிரதேசத்தில் மகா கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக சிலர் பேருந்தில் புறப்பட்டு சென்றுள்ளனர். அவர்கள் திரிவேணி சங்கமத்தில் நீராடி விட்டு, அயோத்திக்கு சென்றனர். பின்பு ஊருக்கு திரும்பினர். இந்நிலையில், பிரோசாபாத் மாவட்டத்தில் லக்னோ-ஆக்ரா விரைவு சாலையில் வந்து கொண்டிருந்த பேருந்து அதிகாலை 4 மணியளவில் திடீரென தீப்பிடித்து கொண்டது. இதனை பார்த்ததும் பேருந்தில் இருந்த பயணிகள் அல றியடித்தபடி வெளியே தப்பி ஓடினர். இதில், நீராடலில் கலந்து கொண்டு விட்டு திரும்பிய பக்தர்களில் ஒருவர் பேருந்திற்குள் ஆழ்ந்த நிலையில் தூங்கி கொண்டு இருந்துள்ளார். அவரை யாரும் கவனிக்கவில்லை என தெரிகிறது. பேருந்து தீப்பிடித்து முற்றிலும் எரிந்ததில் சிக்கி அவர் பலியானார். அவர், ராஜஸ்தானின் நகாவர் பகுதியை சேர்ந்த பவன் சர்மா (வயது 33) என தெரிய வந்துள்ளது. மற்ற அனைவரும் வேறொரு பேருந்தில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப் பட்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *