ஒட்டாவா, பிப்.8 இந்தியாவிலிருந்து உயர் கல்விக்காக கனடாவுக்கு மாணவர்கள் விசாவில் சென்ற 20 ஆயிரம் மாணவர்கள் எங்கிருக்கிறார்கள் என்றுதெரியாமல் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் வெளியான தரவுகளின்படி, உயர்கல்விக்காக, இந்தியாவிலிருந்து கனடா சென்ற 20 ஆயிரம் மாணவர்கள், எந்தக் கல்லூரியிலும் சேரவில்லை என்றும், அவர்களைப் பற்றிய எந்த தகவலும் அரசிடம் இல்லை என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
போலியானவை
இவ்வாறு காணாமல் போன மாணவர்களின் பின்னணி பற்றி வெளியாகும் தகவல்களில் பல மாணவர்கள் கனடாவில் உயர் கல்வி பயில சேர்ந்த கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களை, கனடா சென்று பார்த்த பிறகுதான் அவை போலியானவை என்றும், அவ்வாறு கல்லூரி அல்லது பல்கலையே இல்லை என்றும் தெரிய வந்திருக்கலாம்.
இதுபோன்ற மாணவர்கள் ஏதேனும் ஒரு சிறிய கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படித்துக் கொண்டிருக்கலாம் அல்லது கிடைத்த வேலையில் சேர்ந்து எப்படியோ கனடாவில் வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இது பற்றி ஒரு சில மாணவர்கள் கூறுகையில், மிகப்பெரிய பல்கலைக்கழகத்தின் பெயரில், போலியான ஏஜெண்டுகள் மூலம் இந்திய மாணவர்கள் சேர்க்கைக்கான கடிதம் பெற்று கனடா வந்துவிடுகிறார்கள்.
பல லட்சம் கட்டி கனடா வந்து பார்த்தால், மோசடி செய்யும் ஒரு அலுவலகம் தான் இங்கே இருக்கும். அதனால், திரும்ப செல்ல முடியாமல், கிடைத்த வேலையைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள் என்கிறார்கள். சிலரோ, மாணவர்கள் விசா மூலம் கனடாவுக்குள் வந்துவிட்டு, சட்டவிரோதமாகத் தங்கியிருந்து வேலை செய்து வருகிறார்கள் என்றும் கூறினர்.