புதுடில்லி, பிப். 1- வாக்குப்பதிவு மய்யங்களில் பதிவான வீடியோ காட்சிகளை பாதுகாத்து வைக்குமாறு இந்திய தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
ஒவ்வொரு வாக்குப்பதிவு மய்யத்திலும் அதிகபட்ச வாக்காளா்களின் எண்ணிக்கையை 1,200-இல் இருந்து 1,500-ஆக உயா்த்தும் தோ்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையின்போது உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
வாக்குப்பதிவு மய்யங்களில் வாக்காளா்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் தோ்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக இந்து பிரகாஷ் சிங் என்பவா் பொது நல மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமா்வு விசாரணை நடத்தியது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘இந்த விவகாரம் தொடா்பாக பதில் மனு தாக்கல் செய்ய தோ்தல் ஆணையம் அவகாசம் கோரியுள்ளது. மூன்று வாரங்களுக்குள் தோ்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும். அதேபோல் வழக்கமான நடைமுறையின்படி வாக்குப்பதிவு மய்யங்களின் சிசிடிவி காட்சிகளை தோ்தல் ஆணையம் பாதுகாக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, வாக்குப்பதிவு மய்யங்களின் சிசிடிவி காட்சிகளை பொதுமக்களுக்கு வழங்க அனுமதி மறுப்பு உள்பட தோ்தல் விதிகள் 1961-இல் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் பொதுச்செயலா் ஜெய்ராம் ரமேஷ் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இதற்கு தோ்தல் ஆணையம் மற்றும் ஒன்றிய அரசு பதிலளிக்கக்கோரி கடந்த 15ஆம் தேதி உச்சநீதிமன்றம் தாக்கீது அனுப்பியிருந்த நிலையில் தற்போது மேலும் 3 வாரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.