காஞ்சிபுரம், ஜன. 26- தமிழ்நாடு இந்தியாவில் இரண்டாவது பொருளாதார மாநிலமாக வளர்ந்துள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காஞ்சி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் செலுத்தும் பொதுக் கூட்டம் பல்லாவரம் கண்டோன்மென்ட் பகுதியில் நேற்று நடைபெற்றது. இது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது:
5,500 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் தொன்மையான மொழி என நாம் ஆய்வு மூலம் நிரூபித்திருக்கிறோம்.
முன்மாதிரி மாநிலமாக…
தமிழ்நாடு அனைத்து வழிகளிலும் உயர்ந்துள்ளது. தமிழ்நாடு இந்தியாவில் இரண்டாவது பொருளாதார மாநிலமாக வளர்ந்துள்ளது. தேசிய உள்நாட்டு உற்பத்தியில் 5.4 சதவீதமாக இருந்து கடந்த 4 ஆண்டுகளில் 9.2 சதவீதம் உயர்ந்துள்ளது. உள்நாட்டு பொருளாதார கொள்கையில் தமிழ்நாடு வளர்ச்சியை எட்டியுள்ளது. மருத்துவம், கல்வி, சமூக நலன் இவற்றை மேம்படுத்த இந்தியாவிலேயே முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
வறுமையை முற்றிலுமாக ஒழிக்க…
இந்தியாவின் வலிமைமிக்க விளையாட்டு மய்யமாக தமிழ்நாடு வளர்ந்துள்ளது. மக்களைதேடி மருத்துவம் அய்நா அமைப்பு மூலம் விருது பெற்றுள்ளோம். தமிழ்நாட்டில் 2.2 சதவீதம் மக்கள் ஏழை நிலைமையில் உள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய சராசரியான 14.9 சதவீதம் மிக மிக குறைவு. இரண்டு ஆண்டுகளில் வறுமையும் முற்றிலும் ஒழிக்க தாயுமானவர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அமைதி மாநிலமாக இருப்பதால் தமிழ்நாட்டில் பெண்கள் அதிக அளவில் பணிபுரிகின்றனர். இந்தியாவில் 41 % பெண்கள் தமிழ் நாட்டில் வேலை செய்கின்றனர். கட்ந்த மூன்று ஆண்டுகளில் 10 லட்சம் கோடி தனியார் முதலீட்டு கொண்டு வந்துள்ளோம். இப்படி வான்நோக்கி வளர்ந்து வருவது தமிழ்நாடு.
அனைத்திலும் வெற்றி பெறுவோம்
மேலும் உயர்ந்து அனைத்திலும் வெற்றி பெறுவோம். மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் செலுத்தும் இந்நாளில் உறுதியேற்போம். இவ்வாறு முதலமைச்சர் பேசினார். கூட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர். ராஜா, இ.கருணாநிதி, வரலட்சுமி உள் ளிட்ட பலர் பங்கேற்றனர்.
காஞ்சிபுரம் மேட்டுத் தெரு பகுதியில் உள்ள திமுக நகர அலுவலகத்தில் மொழிப்போர் தியாகிகள் நினைவு நாள் கடைப்பிடிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாநகரச் செயலர் சி.கே.வி.தமிழ்செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளர் சன்பிராண்ட் ஆறுமுகம் உட்பட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர்.