இலங்கை சிறையில் இருந்து விடுதலையான தமிழ்நாடு மீனவர்கள் 41 பேர் சென்னை திரும்பினர்

Viduthalai
1 Min Read

சென்னை, ஜன.23 இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், அக்கா மடம் பகுதிகளைச் சேர்ந்த 41 மீனவர்கள் இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர். விமான நிலையத்தில் தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் அவர்களை வரவேற்று, அரசு ஏற்பாடு செய்த வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

இலங்கை சிறையில்…
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த 35 மீனவர்கள், 3 விசைப்படகுகளில் கடந்த ஆகஸ்ட் மாதம் கடலில் மீன் பிடிக்கச் சென்றபோது, இலங்கைக் கடலோர காவல் படையினர் இவர்களைக் கைது செய்து, இலங்கை சிறையில் அடைத்தது. அதேபோல, கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி, ராமநாதபுரம் மாவட்டம் அக்கா மடத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் விசைப்படகு கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தபோது இலங்கைக் கடலோர காவல் படை யினர் சுற்றி வளைத்து கைது செய்து இவர்களையும் சிறையில் அடைத்தனர். இதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதங்கள் எழுதினார். தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடந்தன. இந்நிலையில் இலங்கை நீதிமன்றம், தமிழ்நாடு மீனவர்கள் 41 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.

அவரவர் சொந்த ஊர்களுக்கு…
இதைத்தொடர்ந்து, இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 41 பேரும், விமானம் மூலம் சென்னைக்கு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிலையில், 21.1.2025 அன்று இரவு இலங்கைத் தலைநகர் கொழும்புவில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் 41 மீனவர்களும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர்களை வரவேற்று, தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்த வாகனங்கள் மூலம் 41 பேரும் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *