பதிலடிப் பக்கம்: திருக்குறளும் திரிநூல்களின் திரிபும்

Viduthalai
7 Min Read

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்.,
சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப்
பதிலடிகளும் வழங்கப்படும்)
கவிஞர் கலி.பூங்குன்றன்

கவிஞர் கலி.பூங்குன்றன்

கேள்வி: வள்ளுவருக்கு காவி உடை அணிவது சரியா?
பதில்: துறவறவியலில் 130 குறள்களை எழுதி, துறவு என்ற தலைப்பில் (குறள் 341 முதல் 350 வரை) 10 குறள்களை எழுதிய திருவள்ளுவருக்கு, காவி உடை அணிவிக்காமல் வேறு எந்த உடை அணிவிக்க முடியும்?
பதிலடி: துறவு என்ற தலைப்பில் 10 குறள்களை திருவள்ளுவர் எழுதியதால் அவர் துறவியாகி விடுவாரா?
இல்லறவியல் குறித்து 20 அதிகாரம் 200 பாடல்கள் பாடியுள்ளாரே – அது பூணூல் கண்களுக்குப் புலப்படவில்லையோ?
குறள் என்றாலே குருமூர்த்தி கும்பலுக்குக் குமட்டிக் கொண்டுதானே வரும்!
திருவள்ளுவரின் தந்தையார் பகவன் என்ற பார்ப்பனர்-தாயார் ஆதி என்ற பறைச்சி என்று எழுதிய உ.வே.சு. அய்யரின் பரம்பரைப் பார்ப்பனப் புத்தி அவர்களை விட்டுப் போகுமா என்ன? திருக்குறளில் கூறப்படும் அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியன ஒழிதலும் ஆம் என்று உரை எழுதிய பரிமேலழகரின் வழி வந்த கூட்டமாயிற்றே!

– – – – –

கவிஞர் கலி.பூங்குன்றன்

கேள்வி: படித்த வட இந்திய இளைஞர்கள் வியாபாரம் தொடங்க விரும்புவதும், படித்த தென் இந்திய இளைஞர்கள் மாதச் சம்பளத்திற்கு வேலைக்குச் செல்ல விரும்புவதும் ஏன்?
பதில்: படித்த தென்னிந்தியர்கள் வேலைக்குச் செல்ல விரும்புவதால்தான், படித்த வட இந்தியர்கள் வியாபாரம் செய்ய விரும்புகிறார்கள்.
பதிலடி: நாள்தோறும் அலை அலையாக வடநாட்டிலிருந்து தமிழ்நாட்டுக்கு வேலை தேடி குவிந்து கொண்டு இருக்கிறார்களே – வட இந்திய மக்கள் இதற்கு என்ன பதில்?

– – – – –

கேள்வி: பாரதியார் ‘ஜாதிகள் இல்லையடி பாப்பா’ என்று பாடவில்லை, ‘ஜாதிப் பெருமையில்லை பாப்பா, குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்’ என்றுதான் பாடினார் என்று என் நண்பர் சொல்கிறார். இதில் உண்மை என்ன?
பதில்: உங்கள் நண்பர் கூறுவது உண்மை. அல்லயன்ஸ் கம்பெனி வெளியிட்ட காலவரிசைப் படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் என்ற பிரமாண்ட 23 பகுதி (15,000 பக்கம்) களஞ்சியத்தை உருவாக்கிய சீனி.விஸ்வநாதன், அதில் ‘ஜாதிப் பெருமையில்லை பாப்பா’ என்று பாரதியார் எழுதியது, எப்படி மாற்றப்பட்டது என்பதை ஆதாரத்துடன் விளக்கி இருக்கிறார்.
பதிலடி: குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவமாம்! அது என்ன பாவம்? பாவம் – புண்ணியம் என்ற பிரச்சினை எங்கே வந்தது?
குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் அயோக்கியத்தனம் என்று சொல்லியிருந்தால், அது யோக்கியமானதாகக் கருத முடியும்.
(‘துக்ளக்’, 4.12.2024 பதில்களுக்கான
பதிலடிகள் இவை)

– – – – –

கவிஞர் கலி.பூங்குன்றன்

கேள்வி: ஒரு வருடத்திற்கு விவசாயிகள் தங்கள் உழவுத் தொழிலைச் செய்யாவிட்டால் உலகம் என்னாகும்?
பதில்: ஒரு வருஷம் எதற்கு? ஒரு போகம் சம்பா சாகுபடியையோ, குறுவை சாகுபடியையோ அவர்கள் நிறுத்தினால் கூட, உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு, உலகமே போர்க்களமாகி விடும்.
பதிலடி: மனுதர்மத்தைத் தூக்கி தலையில் வைத்துக் கொண்டு ‘தைதை’ என்று கூத்தாடுகிறது இந்தக் கூட்டம் – மனுதர்மம் விவசாயத்தைப் பற்றி என்ன கூறுகிறது?
“பயிரிடுதலை மேலான தொழில் என்று சிலர் கருதுகின்றனர். ஆயினும் பெரியோர் அதைப் பாராட்டவில்லை. ஏனெனில் இரும்புக் கொழு நுதியுடைய கலப்பை, மண்வெட்டி இவற்றைக் கொண்டு பூமியையும், பூமியில் வாழும் சிறிய உயிரினங்களையும் வெட்ட நேரிடுகிறதன்றோ?” (‘மனுதர்மம்’, அத்தியாம் 10, சுலோகம் 84)
இந்த இடத்தில் மட்டும் மனுதர்மத்தை குப்பைக் கூடையில் வீசுவார்கள் – அப்படித்தானே!
இதைப் படிக்கும்போது ஆகா இவர்கள் எத்தகைய ஜீவகாருண்யம் ததும்பி வழியும் பெருமக்கள் என்று கூட சில அடிமைகள் ஆரவாரிக்கலாம்.

கவிஞர் கலி.பூங்குன்றன்

இந்தப் பார்ப்பன ஆரியக் கூட்டம்தான் யாகம் என்ற பெயரால் ஆடுகளையும், மாடுகளையும், குதிரைகளையும், ஏன் மனிதர்களையும் (புருஷயஜ்ஞ்) நெருப்பில் போட்டுப் பொசுக்கிக் கொண்டாட்டம் போட்டவர்கள்.
“சிரார்த்தத்தில் விதிப்படி விதிக்கப்பட்ட பிராமணர் மாமிசத்தைத் தோஷமென்று புசியாவிட்டால் அவன் 21 ஜனனமும் பசுவாகப் பிறப்பான். (‘மனுதர்மம்’, அத்தியாயம் 5, சுலோகம் 35).
பார்ப்பனர்கள் உடலுழைப்பு இல்லாமல் அடுத்தவர் உழைப்பைச் சுரண்டி “சுக ஜீவனமாக” வாழ்வதற்கு வசதியாக சாஸ்திரத்தை உருவாக்கித் துணையாக வைத்துக் கொண்டார்கள் என்பதைக் கவனிக்கத் தவறக்கூடாது.
ஒரு வருடத்திற்கல்ல ஒரு போகம் சம்பா சாகுபடியையோ, குறுவை சாகுபடியையோ விவசாயிகள் நிறுத்தினால் கூட உணவு பற்றாக்குறை ஏற்பட்டு உலகமே போர்க்களமாகி விடும் என்று பதறுகிறாரே குருமூர்த்திவாள் – அவர் போற்றும் மகானான சங்கராச்சாரியாரின் யோக்கியதை என்ன?

இதோ ஓர் ஆதாரம்:
1921ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் இரண்டு பார்ப்பனர்கள் உழவுத் தொழிலை மேற்கொண்டார்கள். பார்ப்பனர்கள் அவர்களை விலக்கி வைத்தார்கள். அந்த சமயம் கும்பகோணம் (இதுதான் ஒரிஜினல் – காஞ்சி மடம் அல்ல). சங்கராச்சாரியார் அந்தப் பகுதிக்கு வந்தார்கள். ஆனால் சங்கராச்சாரியாரோ அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. பிழைப்புக்காக உடலால் உழைப்பது என்ற பாவத்தைச் செய்த பிராமணர்களிடமிருந்து தாம் காணிக்கை எதையும் பெற்றுக் கொள்ள முடியாது என்று கூறிவிட்டார்.
இந்த இரு பார்ப்பனர்களும் காந்தியாருக்கும் கடிதம் எழுதி விளக்கம் கேட்டார்கள்.
“கொடுமையான ஒரு சமூகத்திலிருந்து விலக்கி வைக்கப் பெறுவதே ஒரு சிறப்புதான், அதை வரவேற்க வேண்டும்” என்று பதிலடி கொடுத்தார் காந்தியார் (“தமிழ்நாட்டில் காந்தி”, பக். 348)
விவசாயிகள் ஒரு போகம் பயிர் செய்யாவிட்டால் உலகமே போர்க்களமாகும் என்று பதறுகிறாரே திருவாளர் குருமூர்த்தி – இதற்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போகிறார்? பார்ப்போம்!
விவசாயிகள் உழைக்காவிட்டால் சங்கராச்சாரி முதல் பட்டினி கிடந்து சாக வேண்டியதுதான்!

– – – – –

கவிஞர் கலி.பூங்குன்றன்

கேள்வி: ‘மதங்களின் பெயரால் அரசியல் செய்வதை எவ்வாறு ஏற்க முடியாதோ, அதுபோல் ஜாதியின் பெயரால் அரசியல் செய்வதையும் ஏற்க முடியாது’ என்று வைகைச் செல்வன் கூறியுள்ளாரே?
பதில்: மதங்களின் பெயரால் செய்யும் அரசியல், மதச்சார்பற்ற அரசியல், ஜாதியின் பெயரால் செய்யும் அரசியல், ஜாதி ஒழிப்பு அரசியல். இரண்டும் தவறு என்றால், எப்படித்தான் கட்சிகள் அரசியல் செய்யும்!
பதிலடி: அப்படியா சேதி? தாம்ப்ராஸ் என்று பார்ப்பனர்கள் சங்கம் வைத்துக் கொண்டு இருப்பதும், அதன் பெயரில் மாநாடுகள் கூட்டுவதும், தேர்தல் நேரத்தில் யாருக்கு வாக்களிப்பது என்று தீர்மானம் போடுவதும் குருமூர்த்தி அய்யர் கூறும் பட்டியலில் வராதோ!

– – – – –

கேள்வி: வன்முறை, அராஜகங்கள் மூலம், காஷ்மீரிலிருந்து ஹிந்துக்களை விரட்டியதையும்; பிராமணர் எதிர்ப்பு, அரசியல் மற்றும் சட்டதிட்டங்கள் மூலம் பிராமணர்களை தமிழகத்தை விட்டு விரட்டியதையும் எப்படிப் பார்க்கின்றீர்கள்?
பதில்: அங்கு இஸ்லாமிய சமூகநீதி, இங்கு திராவிட சமூகநீதி என்று பார்க்கிறேன்.
பதிலடி: இதுவரை அப்படி விரட்டியதில்லை; விரட்டப்படலாம் என்ற அச்சத்தின் வெளிப்பாடாக இதனைக் கருதலாம்.
“சமத்துவம் இன்மை மற்றும் பாரபட்சத் தொல்லையால் பாதிக்கப்படும் அடித்தட்டு மக்கள் ஒரு கட்டத்தில் நாட்டின் அரசியல் ஜனநாயகக் கட்டமைப்பையே தகர்த்து விடுவார்கள்” (அண்ணல் அம்பேத்கர், “மனித உரிமைக் கங்காணி” ஆண்டு 2010, பக். 6)
கூறுவது அண்ணல் அம்பேத்கர் – நினைவிருக்கட்டும்!
(‘துக்ளக்’, 11.12.2024 பதில்களுக்கான பதில்களுக்குப் பதிலடி)

– – – – –

கேள்வி: துக்ளக் உட்பட தமிழகப் பத்திரிகைகள், செபஸ்டியன் சைமன், ஜோஸஃப் விஜய், டேனியல் ராஜா என்று முழுப் பெயரையும் குறிப்பிட மறுப்பது ஏன்?
பதில்: தங்கள் முழுப் பெயரைக் கூறுவதற்கு அவர்களுக்குக் கூச்சம் இருக்கும் என்று தோன்றவில்லை, கூறாமல்இருப்பதில் லாபம் இருக்கும் என்று தோன்றுகிறது.
பதிலடி: விஜய் – இந்து என்று கருதி விடாதீர்கள் – அவர் கிறிஸ்தவர் என்று காட்ட வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம்.
ஆமாம். திருவாளர் குருமூர்த்தி தான் பெயருக்குப் பின் னொட்டாக அய்யர் என்று போட்டுக் கொள்ளாதது ஏன்?
இந்தக் காலகட்டத்தில் அது அசவுகரியமாக இருக்கும் என்பதால்தானே!

– – – – –

கேள்வி: பழைய காலத்துப் பள்ளி ஆசிரியர்கள், இக்காலத்துப் பள்ளி ஆசிரியர்கள் – ஒப்பிடவும்?
பதில்: பழைய காலத்து ஆசிரியர்கள், ஆசான்கள், இக்காலத்து ஆசிரியர்கள், பணியாளர்கள், ஏன்? அந்தக் கால மாணவர்கள், ஆசான்களின் சீடர்கள், இந்தக்கால மாணவர்கள், நடிகர்களின் விசிறிகள்.
பதிலடி: ஆசிரியர் சமுதாயம் இதைப் படித்த பின்பும் அமைதி காக்குமா என்று தெரியவில்லை.
அந்தக் காலத்து மாணவர்கள் ஆசான்களின் சீடர்களாம். அதாவது குரு குலக்கல்வியில் சீடர்கள் பிச்சை எடுத்து ஆசானுக்குத் தண்டனிடுவார்கள், அதைப் போல இப்பொழுதும் இருக்க வேண்டும் என்பது அவாளின் ஆசையோ!

– – – – –

கவிஞர் கலி.பூங்குன்றன்

கேள்வி: ஜனநாயகம் என்ற பித்தலாட்ட அரசியல் வழிமுறையை, காஞ்சி மஹா சுவாமிகள் ரசிக்கவில்லை அல்லவா?
பதில்: உத்திரமேரூர் கல்வெட்டுக்கள் விவரிக்கும் 1,100 ஆண்டு புராதன சோழர் கால ஜனநாயகம் போன்ற அறமும், பண்பும் சார்ந்த ஜனநாயக அரசியல் வேண்டும் என்று விரும்பினார் காஞ்சி மஹான், இன்றைய பித்தலாட்ட ஜனநாயகம் போல அல்ல, சோழர் கால ஜனநாயகம். உத்திரமேரூர் கல்வெட்டு என்று கூகுளில் தேடினால், அறம் சார்ந்த ஜனநாயகம் என்ன என்பது விளங்கும்.
பதிலடி: புரிகிறதா? இவர்கள் சொல்லும் – காஞ்சி காம கோடி விரும்பும் அந்த ஜனநாயகம் என்ன தெரியுமா?
கிராமசபை உறுப்பினராக ஒருவனுக்கு 35 வயது நிரம்பி இருக்க வேண்டும். 70 வயதுக்குள் இருக்க வேண்டும். கால்வேலிக்குக் குறையாத நிலம் இருக்க வேண்டும். வேத மந்திரங்களையும், உபநிஷத்துகளையும் தெரிந்திருக்க வேண்டும். அல்லது ஒரு வேதமும், ஒரு பாஷ்யமும் தெரிந்திருக்க வேண்டும். (ஆர்.சத்தியநாதய்யரின் இந்திய வரலாறு).
பேஷா புரிஞ்சிருக்குமே! …. குடுமி சும்மா ஆடுமா? வேத மந்திரம் தெரிந்தவர்கள்தான் கிராமசபை உறுப்பினராக முடியும். காஞ்சி மகா (?) பெரியவாள் இதைத் தான் விரும்புவார் என்று சிலாகிக்கிறார் திருவாளர் குருமூர்த்தி அய்யர் வாளு!
(‘துக்ளக்’ 22.1.2025 பதில்களுக்கான
பதிலடிகள் இவை)
“சிறுத்தை தன் புள்ளிகளை மாற்றிக் கொண்டாலும் பார்ப்பான் தன் பிறவிப் புத்தியை மாற்றிக் கொள்ளவே மாட்டான்!” (டாக்டர் டி.எம்.நாயர்).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *