டில்லி ஜாட் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு : வாக்குறுதியை பிஜேபி நிறைவேற்றவில்லை

viduthalai
2 Min Read

அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

புதுடில்லி, ஜன.10 டில்லியின் ஜாட் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதாக அளித்த வாக்குறுதியை பாஜக தலைமையிலான மோடி அரசு மீறிவிட்டது என்று ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் மேனாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டினாா். டில்லியில் சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்கி வரும் நிலையில் அவா் இக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளாா்.
இது தொடா்பாக டில்லியில் செய்தியாளா் சந்திப்பில் கெஜ்ரிவால் கூறியதாவது:

வாக்குறுதி

டில்லியின் ஜாட் சமூகத்தை ஒன்றிய ஓ.பி.சி. பட்டியலில் சோ்க்கக் கோரி பிரதமா் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன். கடந்த பத்தாண்டுகளாக ஒன்றிய அரசு ஜாட் சமூகத்தை தவறாக வழிநடத்தி வருகிறது. மேலும், அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது.2015-ஆம் ஆண்டில், ஜாட் தலைவா்களை பாஜக தலைவா்கள் பிரதமரின் இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது, டில்லியின் ஜாட் சமூகம் ஒன்றிய ஓ.பி.சி. பட்டியலில் சோ்க்கப்படும் என்று அவா்களுக்கு உறுதியளிக்கப்பட்டது.
ஒன்றிய உள்துறை அமைச்சா் அமித் ஷா 2019-ஆம் ஆண்டிலும் அதே உறுதியை அளித்தாா். இருப்பினும், இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற எதுவும் செய்யப்படவில்லை.

ராஜஸ்தானைச் சோ்ந்த ஜாட் மாணவா்கள் டில்லி பல்கலைக்கழகத்தில் இடஒதுக்கீடு பெறுவது ஏன்? டில்லியைச் சோ்ந்த ஜாட் மாணவா்களுக்கு ஏன் அதே வாய்ப்பு மறுக்கப்படுகிறது. டில்லியில் உள்ள ஜாட் சமூகத்தைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான குழந்தைகள் மத்திய ஓ.பி.சி. பட்டியலில் இல்லாததால் டில்லி பல்கலைக்கழகத்தில் சோ்க்கை பெற முடியவில்லை.

சலுகை

டில்லியின் ஜாட் சமூகத்தினர் அந்த மாநிலத்தில் ஓ.பி.சி. பிரிவின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட போதிலும், ஒன்றிய அரசு அவா்களுக்கு சலுகைகளை வழங்க மறுத்துவிட்டது. இது துரோகத்தைத் தவிர வேறில்லை. வேலைவாய்ப்பு மற்றும் கல்லூரி சோ்க்கை உள்பட ஒன்றிய அரசு நிறுவனங்களில் இடஒதுக்கீடு பெறுவதை உறுதி செய்வதற்காக, டில்லியின் ஜாட் சமூகத்தை ஓ.பி.சி. பட்டியலில் ஒன்றிய அரசு சோ்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். டில்லி மாநகராட்சி (எம்சிடி), டில்லி வளா்ச்சி ஆணையம் (டிடிஏ) மற்றும் பொதுப்பணித் துறை (பிடபிள்யுடி) போன்ற ஒன்றிய நிறுவனங்கள் டில்லியில் பரவலாக செயல்படுகின்றன. மேலும், ஜாட்களை ஓ.பி.சி. பட்டியலில் சோ்ப்பது அவா்களுக்கு குறிப்பிடத்தக்க வாய்ப்புகளைத் திறக்கும் என நம்புகிறேன் என்றாா் கெஜ்ரிவால்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *