சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்! சுயமரியாதை இயக்கம் – தோற்றமும் வளர்ச்சியும் (2) கவிஞர் கலி.பூங்குன்றன்

viduthalai
4 Min Read

நேற்றைய (7.1.2025) தொடர்ச்சி…

சமுதாயத்தின் அவலங்களையெல்லாம் சற்றும் மறைக்காமல் பிறந்த மேனியாக வெளிப்படுத்தியது!

எத்தனை எத்தனையோ நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறமுடியும். 1936 மே மாதம் 25 ஆம் நாளிட்ட (பக்கம் 10) ‘குடிஅரசு’ ஒரு தகவலைக் கூறுகிறது.

சென்னை ஜார்ஜ் டவுனிலும், மவுண்ட் ரோட்டிலும் பஞ்சமர்களும், நாய்களும், பெருவியாதியஸ்தர்களும் பிரவேசிக்கக் கூடாது (உணவு விடுதிகளில்), சில இடங்களில் மகமதியர்களும் பிரவேசிக்கக் கூடாது; மேட்டுப்பாளையம் ரயில்வே ஓட்டலில் பிராமணர்க்கு என்றும், சூத்திரர்க்கு என்றும் போர்டு போட்டு இருந்தது. சென்னை நகரம் முழுவதும் ‘வீடு காலி – பிராமணர்க்கு மாத்திரம்’ என்று இருந்தது என்கிற தகவலை ‘குடிஅரசு’ வெளியிட்டிருந்தது.

1935இல் கும்பகோணம் நகராட்சியில் அக்கிரகாரத் துக்குக் கக்கூஸ் எடுக்க தாழ்த்தப்பட்டவர்களை நியமிக்கக் கூடாது – அதற்குப் பதிலாக சூத்திரர்களை ஏற்பாடு செய்யவேண்டும் என்று தீர்மானம் போட்டதையும் ‘குடிஅரசு’ தெரிவிக்கிறது. (06.10.1935)
உத்தமபாளையம் வட்டம் சீலையம்பட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து உறுப்பினர்களை ஜாதியைக் காரணம் காட்டி கீழே உட்கார வைத்தார்கள்

(‘குடிஅரசு’ 27.01.1929).

திருப்புவனம் ஆவியூர் பெரிய கருப்பக்குடும்பன் என்னும் தாழ்த்தப்பட்ட தோழர் அவர் தொழில் குப்பை வாருதல்; குப்பை வண்டியின் மேலே உட்கார்ந்து வந்தார் என்பதற்காக உயர் ஜாதிக்காரர்கள் அத்தோழரைக் கீழே தள்ளி அடித்தார்கள். தோழரின் பயிர் பச்சைகளை ஆடு, மாடுகளை விட்டு மேய்த்தார்கள். வீட்டிற்கும் தீ வைத்தார்கள்

(‘குடிஅரசு’ 24.11.1929)

பல்லாவரம் கொளத்துமேட்டு வீதிவாசியான ஆதி திராவிடக் கிறித்துவர் அந்தோணிராஜ் அக்கிரகாரத்தில் குடியிருந்த பார்ப்பன ஆசிரியரிடம் பாடம் படித்துக் கொண்டிருந்தபோது, அதே வீதி ரெங்கசாமி அய்யர், பார்ப்பனத் தெருவுக்குள் எப்படி நுழையலாம் என்று கூறி செருப்பாலேயே அடித்திருக்கிறார். (‘குடிஅரசு’ 03.05.1936)
இதுபோன்ற எத்தனை எத்தனையோ சமூகக் கொடுமைகளை ‘குடிஅரசு’ என்னும் தன்மான இயக்கப் போர்வாள் தட்டிக் கேட்டுக் குரலும் கொடுத்திருக்கிறது.

தன்மான இயக்கத்தின் இத்தகைய பணிகளால், ஆட்சி பீடத்தில் இருந்த நீதிக் கட்சி பல சமூக சீர்திருத்த நடவடிக்கைகளுக்குச் சட்ட வடிவம் அளித்து வந்தது. மக்கள் மன்றத்தில் தந்தை பெரியாரின் தன்மான இயக்கமும் ஆட்சி மன்றத்தில் பார்ப்பனரல்லாதார் இயக்கமான தென்னிந்திய நலவுரிமைச் சங்கமும் உண்மையிலேயே இரட்டைக் குழல் துப்பாக்கிகளாகச் செயல்பட்டன.

தாழ்த்தப்பட்டோர் பொது வீதிகளில் நடத்தல், பொதுக் கிணறுகளில் தண்ணீர் எடுத்தல், பள்ளிகளில் ஆதி திராவிட மாணவர்களுக்குக் கட்டாய இடம், ஆதி திராவிடர் தோழர்களைப் பயணம் செய்ய அனுமதிக்காத பேருந்துகளுக்கு உரிமம் ரத்து, வகுப்புரிமைச் சட்டம், தேவதாசி ஒழிப்புச் சட்டம், பெண்களுக்கு வாக்குரிமை, இந்து அறநிலையத்துறை பாதுகாப்புச் சட்டம் இன் னேரன்ன முற்போக்குத் திட்டங்களும், சட்டங்களும் தமிழ் மண்ணிலே அரங்கேறி – புது மறுமலர்ச்சிக்கு வித்திட்டன.
தந்தை பெரியாரின் பிரச்சாரமும், ‘குடிஅரசு’ இதழின் எழுத்துக்களும் சாதாரண மக்கள் மத்தியிலே கூட புதுத் தெம்பையும், புது நம்பிக்கையையும் ஊட்டின. கைகள் இருப்பது சதா வேலை செய்வதற்கும், முதுகு இருப்பது ஆண்களின் அடியைக் குனிந்து வாங்கிக் கொள்வதற்குமே பெண்களுக்கு உள்ளது என்பதை ஒரு தர்மமாகவே பேசப்பட்ட காலம் அது. “ஆகா, பத்தினியென்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்” என்று அதனைப் பெண்களே போற்றவும் செய்வார்கள்.

இந்த அடக்கு முறைகளை ஏற்பதைத் தவிர வேறு வழியே இல்லை என்றிருந்த காலகட்டத்தில் சுயமரியாதை இயக்கமும், தந்தை பெரியாரும், ‘குடிஅரசு’ம் அவர்களுக்குச் சரணாலயங்களாக இருந்திருக்கின்றன.

மணமகன் தேவை என்ற தலைப்பில் ‘குடிஅரசு’ இதழில் (12.03.1929 பக்கம்-1) வெளிவந்த ஒரு விளம்பரம் கண்களைக் குளமாக்கும். இதோ அந்த விளம்பரம்!

மணமகன் தேவை

நான் ஒரு ஆதிதிராவிடப் பெண். வயது 22. என் பெயர் சின்னராமாயி. என் ஊர் திண்டுக்கல் தாலுகாவில் வத்திலைத் தோப்பம்பட்டி. கிராமம் கோவில்பட்டி. எனக்கு சுமார் 3 வருஷத்திற்கு முன் சிலுவத்தூரில் என் தாய் மாமனுக்குக் கல்யாணம் ஆயிற்று.

அவருக்கு முதலில் இரண்டு பெண் ஜாதிகள் உண்டு. அவர் 50 வயதானவர். அவரை மணக்க நான் எவ்வளவோ மறுத்தும் பயன்படாமல் போய்விட்டதால் அவருடன் வாழ இஷ்டமில்லாமல் தாய்வீட்டில் வாழ்ந்து வந்தேன். இப்போது என்னை எப்படியாவது எங்கிருந்து கொண்டாவது வேறு யாருக்காவது ஒரு குழந்தையைப் பெற்றுத் தங்களுக்குக் கொடுத்துவிட்டு பிறகு எப்படியோ போகும்படி தாய் வீட்டாரும், புருஷன் வீட்டாரும் சொல்லுகிறார்கள். இதன் மத்தியில் என்னை விபசார முறையில் பெண்டாள பல பேர் பலவித துன்பத்துக்குள்ளாக்கினார்கள். சிலவற்றில் என் வீட்டாரும் உடந்தையாயும் இருந்தார்கள். இவை ஒன்றுக்கும் இதுவரை இசையாத நான் இப்போது சுயமரியாதைக் கொள்கைப்படி வேறு யாரையாவது கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று கருதி யாருக்கும் தெரியாமல் ஈரோட்டிற்கு வந்து தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் சத்திரத்தில் வசிக்கிறேன். எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது.

வீட்டு வேலை, தோட்ட வேலை செய்ய சக்தியும், அனுபவமும் உண்டு. நல்ல குணமும் சுயமரியாதைக் கொள்கையும் உடைய வாலிபர் ஒருவர் யாராயிருந்தாலும் அவரை வாழ்க்கைத் துணையாகக் கொண்டு வாழ்க்கை நடத்தத் தயாராய் இருக்கிறேன். ஆகையால் என்னை மணக்க இஷ்டமுள்ளவர்கள் உடனே கீழ்க்கண்ட விலாசத்துக்குத் தெரியப்படுத்தக் கோருகிறேன்.

தற்குறி,
சின்னராமாயம்மாள்
விலாசம்:
சின்னராமாயி,
C/o. ‘குடிஅரசு’. ஈரோடு
(‘குடிஅரசு’ 12.03.1929)

இது அந்தக் கால நிலவரத்தைக் காட்டும் நிலைக் கண்ணாடி மட்டுமல்ல; தந்தை பெரியாரின் ‘குடிஅரசு’ குருகுலம் எதற்கெல்லாம் அரணாகச் செயல்பட்டது என்பதை விளக்கும் ஆவணமும் ஆகும்.

இது ஒரு தனி நபர் பிரச்சினை என்றால், இதுவன்றி ஒரு கிராம மக்களே சுயமரியாதை இயக்கத்தை நோக்கி அபயம் கேட்கும் ஒரு தகவலை ‘குடிஅரசு’ தெரிவிக்கிறது.
இதோ அந்தக் குரல்!

– தொடரும்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *