பெர்லின், ஜன.3- ஜெர்மனி நாட்டின் கொலோன் நகரில் அமைந்துள்ள கொலோன் பல்கலைக் கழகத்தில் நிதிப் பற்றாக்குறையை காரணம் காட்டி தமிழ்த்துறை மூடப்பட்டுள்ளது.
தமிழ்த் துறை
கொலோன் பல்கலைக்கழகத்தில் கலை மற்றும் சமூகவியல் கல்விப் பிரிவின் கீழ் இந்தியவியல் மற்றும் தமிழ்க் கல்வி துறை செயல்பட்டது. 1963 முதல் இயங்கிய இந்த தமிழ்த்துறை கடந்த அக்டோபர் மாதம் 30க்குப் பிறகு மூடப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கொலோன் பல்கலைக்கழகம் 2014 முதல் நிதிப் பற்றாக்குறையை சந்தித்து வந்ததாகவும் இதன் விளைவாக தற்போது தமிழ்த் துறை மூடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே இந்த நிதிப் பற்றாக்குறையின் காரணமாக அப்பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறை 2 முறை மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டது. இத்தகைய சூழலில் தமிழ்நாடு அரசு 1.25 கோடி ரூபாயும், அமெரிக்க வாழ் இந்தியர்கள் 1.5 கோடி ரூபாயும், அய்ரோப்பிய தமிழர் கூட்டமைப்பின் சார்பில் 23 லட்சம் ரூபாயும் நன்கொடையாக வழங்கப்பட்டது. இதனால் 2021இல் அத்துறை மூடப்படுவதில் இருந்து பாதுகாக்கப்பட்டது. இந்த நிதி உதவியை வைத்து தமிழ், ஆங்கிலம், ஜெர்மனி, சமஸ்கிருதம், ஹிந்தி, பாலி உள்ளிட்ட மொழிகளை கற்றிருந்த ஸ்வென் வொர்ட்மான் உதவிப் பேராசிரியராக ஒப்பந்த முறையில் நியமிக்கப்பட்டார். அவருடைய பணிக்காலம் 2024 அக்டோபருடன் முடிவடைந்தது.
அதன்பிறகு நிதிப்பற்றாக் குறையை காரணம் காட்டி வேறு பேராசிரியர்களை அத்துறைக்கு நியமிக்கவில்லை. இதனை காரணமாக வைத்து 60 ஆண்டுகளாக இயங்கி வந்த தமிழ் துறையை கொலோன் பல்கலைக்கழகம் மூடியுள்ளது.
தமிழ் நூல்கள்
கொலோன் பல்கலைக்கழக தமிழ்த் துறைக்கு நிரந்தரப் பேராசிரியராக இருந்த உல்ரிக் நிக்லாஸ் 2022இல் ஓய்வு பெறுவதற்கு சில மாதங்கள் முன்பாகத்தான் ஸ்வெர்ன் வொர்ட்மான் ஒப்பந்த முறையில் உதவிப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அவரை நியமித்த பிறகும் பல்கலைக்கழகம் அத்துறையில் புதிய மாணவர் சேர்க்கையை நடத்தவில்லை என கூறப்படுகிறது. மாணவர் சேர்க்கை நடைபெறாதது குறித்தும், பேராசிரியர் நியமனம் குறித்தும் நிதி உதவி செய்தவர்கள் தரப்பு உட்பட யாரும் பல்கலைக்கழகத்தை நோக்கி முறையான கேள்விகளை முன் வைக்கவில்லை.
இந்திய ஒன்றிய அரசு சிங்கப்பூரில் திருவள்ளுவர் மய்யத்தை அமைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இது போன்று கொலோன் பல்கலைக்கழகத்தில் ஒரு தமிழ் இருக்கை அமைத்திருந்தால் கூட அப்பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறை மூடப்படாமல் தப்பியிருக் கும் என கூறப்படுகிறது. இப்பல்கலைக்கழக நூலகத் தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழம்பெரும் தமிழ் நூல்கள், தமிழ் இதழ்கள், ஓலைச் சுவடிகள் உள் ளன எனவும் இந்த முக்கியமான வர லாற்று ஆவணங்களை காப்பாற்ற வேண்டும். எனவும் இவற்றை யாராவது பாதுகாத்து ஆய்வுகள் செய்ய முன்வந்தால் அவர்களிடம் அவற்றைக் கொடுக்க அப்பல்கலைக்கழ கம் முன்வரலாம் என கூறப்படுகிறது.