சென்னை, ஜன.1 நீலகிரி மாவட்டம் ஊட்டியில், முதல் முறையாக தனியார் பங்கேற்புடன், ‘வொர்கேஷன்’ எனப்படும், விடுமுறையை கொண்டாடியபடி வேலை செய்யும் வசதிகளுடன் கூடிய டைடல் பார்க்கை, தமிழ்நாடு அரசு அமைக்க உள்ளது.
தமிழ்நாட்டில் அய்.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்பை உருவாக்க, தமிழ்நாடு அரசு, சென்னை தரமணியில், ‘டைடல் பார்க்’ கட்டியது.
வேலைவாய்ப்புகள்
அங்குள்ள அலுவலக இடங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, பல்வேறு தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் தென்சென்னையில் துவக்கப்பட்டதால், பல ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகின. தகவல் தொழில் நுட்ப வேலைவாய்ப்பை மாநிலம் முழுதும் உருவாக்க, முக்கிய நகரங்களில் மினி டைடல் பார்க் கட்டப்பட்டு வருகிறது. அதன்படி, கோவை, விழுப்புரம், தஞ்சை, சேலம், திருவள்ளூர் பட்டாபிராம், துாத்துக்குடி ஆகிய நகரங்களில், டைடல் பார்க்குகள் கட்டப்பட்டுள்ளன. இதுவரை, டைடல் பார்க் கட்டடத்தை, டைடல் பார்க் நிறுவனமே ஒப்பந்த நிறுவனம் வாயிலாக கட்டி, தனியார் நிறுவனங்களுக்கு வாடகைக்கு விட்டு வருகிறது.
இந்நிலையில், நீலகிரி மாவட்டம் ஊட்டியில், முதல் முறையாக தனியார் பங்கேற்புடன், பணியாளர்கள் விடுமுறையை கொண்டாடியபடி, வேலை செய்யும் வசதிகளுடன் கூடிய டைடல் பார்க்கை தமிழ்நாடு அரசு அமைக்க உள்ளது.
தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இதுகுறித்து பல தகவல் தொழில் நுட்ப நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே பணிபுரிகின்றனர். உலகம் முழுதும் இருந்து மக்கள் விடுமுறையை கொண்டாட, ஊட்டிக்கு சுற்றுலா வருகின்றனர். அங்கு, அலுவலக அறைகள் மட்டுமின்றி, தங்கும் வசதி, பூங்கா போன்றவற்றை உள்ளடக்கிய பொழுதுபோக்கு அம்சங்களுடன், டைடல் பார்க் கட்டப்பட உள்ளது. இதற்காக, ஊட்டி எடப்பள்ளியில், 20 ஏக்கர் அடையாளம் காணப்பட்டு, ‘சர்வே’ உள்ளிட்ட பணிகள் முடிவடைந்துள்ளன.
முதல் டைடல் பார்க்
அங்கு நிலத்தை மேம்படுத்தி, பொழுதுபோக்கு அம்சங்களுடன் வேலை செய்வதற்கான சூழலுடன் கூடிய கட்டடத்தை, தனியார் நிறுவனம் சொந்த செலவில் அமைக்கும். தனியார் பங்கேற்புடன் அமைக்கும் முதல் டைடல் பார்க் இது.
நிலம், 45 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வாடகை வருவாயை ஒப்பந்த நிறுவனமும், டைடல் பார்க் நிறுவனமும் பகிர்ந்து கொள்ளும்.