தி.மு.க. ஆட்சியில் பெண்கள் நலத் திட்டம் சிப்காட் தொழிற்பூங்காக்களில் குழந்தைகள் காப்பகங்கள்

viduthalai
2 Min Read

சென்னை, டிச.20 முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டில் உள்ள மகளிர் முன்னேற்றம் கருதி பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

குழந்தைகள் காப்பகம்

இதன் தொடர்ச்சியாக, மேலும் ஒரு முக்கியத் திட்டமாக தொழிற்சாலைகளில் வேலைக்குச் செல்லும் பெண்கள் முன்னேற்றத்திற்காக, தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்) தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள 17 சிப்காட் தொழில் பூங்காக்களில் குழந்தைகள் காப்பகங்களை தொடங்கிட திட்டமிட்டுள்ளது. இந்த குழந்தைகள் காப்பகங்கள். பணிபுரியும் பெற்றோரின், குறிப்பாகப் பெண்களின் மன அழுத்தத்தைக் குறைக்கவும். பெண் தொழிலாளர்கள் அதிகளவில் பணியாற்றக்கூடிய சூழலை உருவாக்கவும் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் மூலம் 17 தொழில் பூங்காக்களில் குழந்தைகள் காப்பகங்கள் தொடங்கப்பட உள்ளன. ஏற்ெகனவே 13 தொழிற்பூங்காக்களில் 63 குழந்தைகள் காப்பகங்கள் பல்வேறு தொழிற்சாலைகள் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றின் பயனாக ஏறத்தாழ 1 லட்சத்து 50 ஆயிரம் தொழிலாளர்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

2024-2025ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அறிவித்தபடி இந்த குழந்தைகள் காப்பகங்கள் வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள் தொழிற்சாலைகளில் கவலையின்றிப் பணியாற்றுவதற்கான சூழல்களை உருவாக்கிட உதவும். இந்த 17 தொழிற் பூங்காக்களில் புதிதாக ஏற்படுத்தப்படும் குழந்தைகள் காப்பகங்களில் ஏறத்தாழ 3 லட்சத்து 23 ஆயிரம் தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள். இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் சென்னையில் உள்ள இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு சார்ந்த பெண்கள் நிறுவனத்துடன் (FICCI) இணைந்து பணியாற்ற உள்ளது.

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா முன்னிலையில் நடைபெற்ற இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கி.செந்தில்ராஜ் மற்றும் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பினுடைய (சென்னை) பெண்கள் பிரிவின் தலைவர் முனைவர் திவ்யா அபிஷேக் ஆகியோர் இணைந்து கையெழுத்திட்டனர்.

தொழிலாளர் நலன்

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும்போது,
இது, நமது மாநிலத்தின் உளவியல், பொருளாதார மற்றும் சமூக நலனை உயர்த்துகிறது. தொழில் வளர்ச்சியிலிருந்து தொழிலாளர் நலனைப் பிரிக்க முடியாது என்ற எங்கள் நம்பிக்கையின் பிரதிபலிப்பே இந்த முயற்சியாகும். பெண்களுக்கு அதிகாரம் அளித்து, தொழில்களை வலுப்படுத்துவதுடன் சமுகக் கட்டமைப்பையும் இது மேம்படுத்துகிறது. இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (சென்னை) பெண்கள் அமைப்புடனான இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், திராவிட மாடல் அரசின் “எல்லோர்க்கும் எல்லாம்” என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அனைவரையும் உள்ளடக்கிய தொழில் சூழலை உருவாக்குவது ஒரு புதிய மைல்கல்லாக அமையும் என்று நான் நம்புகிறேன் ” என தொழில்துறை அமைச்சர் தெரிவித்தார்கள். இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் செயல் இயக்குநர் D.சிநேகா இ.ஆ.ப. மற்றும் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் அதிகாரிகளும், இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு சென்னை பெண்கள் அமைப்பின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *