மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் கிண்டல்
புதுடில்லி, டிச.18 மக்களவைக்கே ஒரேமாதிரி தேர்தலை நடத்தமுடியாத பாஜக அரசு, எப்படி நாடு முழுவதும் ஒரேமாதிரி தேர்தலை நடத்த முடியும்? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில்,
மக்களவை உறுப்பினர்கள் வாக்களிக்கும்போது பாதிபேரின் இருக்கையில்தான் மின்னணு வாக்கு இயந்திரம் வேலை செய்தது. மீதிபேர் வாக்குச்சீட்டு முறையில் வாக்களித்தனர்.
ஒரு அவைக்குள்ளேயே ஒரேமாதிரி தேர்தலை நடத்த முடியாத மோடி அரசு, நாடு முழுவதும் ஒரே மாதிரி தேர்தலை நடத்தப்போவதாக சட்டத்திருத்தம் கொண்டுவருகிறது’ என்று பதிவிட்டுள்ளார்.
ஜார்ஜியாவில் உணவகத்தில் விஷவாயு தாக்கி 12 இந்தியர்கள் உயிரிழப்பு
பிளிசி, டிச. 18 ஜார்ஜியா நாட்டின் குதவுரி நகரில் மலை பகுதியில் உணவு விடுதி உள்ளது. இந்திய உணவு விடுதியான இதன் 2-ஆவது தளத்தில் 12 பேரின் உடல்கள் நேற்று (17.12.2024) கண் டெடுக்கப்பட்டன. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுபற்றி அந்நாட்டின் பிளிசி நகரில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் உயிரிழந்தவர்களில் 11 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என தெரிவித்து இருந்தது. ஜார்ஜியாவின் உள்விவகார அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், தொடக்க விசாரணையில் உயிரிழந்தவர்களின் உடல்களில் காயங்களோ அல்லது வன்முறை நடந்ததற்கான அடையாளங்களோ காணப்படவில்லை.
அவர்கள் அனைவரும் கார்பன் மோனாக்சைடு விஷ வாயு பாதிப்பால் உயிரிழந்து உள்ளனர் என தெரிவித்ததுடன் அவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல்களையும் தெரிவித்து உள்ளது.இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமிர்தசரஸ் தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் குர்ஜீத் சிங் ஆஜ்லா இன்று கூறும்போது, ஜார்ஜியாவில் உள்ள உணவு விடுதியில் இறந்தவர்கள் அனைவரும் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள்.
அவர்களின் உடல்களை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் பகவந்த் மான் மற்றும் இந்தியர்கள் அல்லாதோருக்கான விவகாரங்கள் துறை அமைச்சரான ஆம் ஆத்மியை சேர்ந்த குல்தீப் சிங் ஆகியோரை வலியுறுத்துகிறேன் என தெரிவித்து உள்ளார்.