பெங்களூரு, டிச. 15- பெங்களூருவில் எழுச்சியுடன் தகைசால் தமிழர் விடுதலை ஆசிரியர், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்க ளின் 92ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா 8.12.2024 அன்று மாலை 4 மணிக்கு பெங்களூருத் தமிழ்ச் சங்க வளாகம், திராவிடர் அகம், பெரியார் மய்யம், ஆசிரியர் கி.வீரமணி அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
தந்தை பெரியார், ஆசிரியர் கி.வீரமணி ஆகியோர்களின் வண்ணப் படங்கள் வண்ண விளக்குகளால் காட்சிப்படுத்தப்பட்டு மேடையில் வைக்கப்பட்டது.
நிகழ்விற்கு கருநாடக மாநிலத் திராவிடர் கழகத் தலைவர் மு.சானகிராமன் தலைமையேற்று உரை நிகழ்த்தினார். செயலாளர் இரா.முல்லைக்கோ அனைவரையும் வரவேற்று நிகழ்வினை ஒருங்கிணைத் தார். முதல் நிகழ்வாக ஈஜிபுரா தலைவர் கோ.சண்முகம் கழகக் கொடியை பெரும் முழக்கத்தின் இடையே ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், வடக்கு மண்டலச் செயலாளர் சி.வரதராசன், பொதுக்குழு உறுப்பினர் ஆசிரியர் இரா.இராசாராம், கருநாடக தமிழ் மக்கள் இயக்கத் துணைத் தலைவர் பண்முகன், பொது செயலாளர் அரசு, பொருளாளர் இளங்கோவன், யலையன்பூர் தலைவர் பெரியவர் செல்வராஜ், ஈஜிபுரா சமூக ஆர்வலர் மைசாத், ஈஜிபுரா தலைவர் கோ.சண்முகம் ஆகியோர் ஆசிரியரைப் பற்றி வாழ்வியல் முறைகளை எடுத்துரைத்தனர்.
திராவிடர் கழக மாநில துணைத் தலைவர் கவிஞர் பாவலர் குணவேந்தன், பு.ர.கஜபதி மற்றும் 105 வயது வீ.மு.வேலு அவர்களுக்கு, மாநில கழகத் தலைவரால் பயனாடை அணிவித்த பின்னர் மூவரும் சிறப்புரை நிகழ்த்தினர். திராவிடர் கழகத் தோழர்களும், கருநாடக தமிழ் மக்கள் இயக்க நிருவாகிகளும், மாநில துணைத் தலைவர் பு.ர.கஜபதியின் இணையர் செயலட்சுமி மற்றும் தமிழ்ச் சங்கத்தினர்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் தொடக்கத்தில் அலங்கரிக்கப்பட்ட அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் படத்தினை அஞ்சல்துறை மேனாள் அலுவலர் அருள்மணி, திராவிடர் கழக வழக்குரைஞர் பிரிவு தலைவர் ஜெ.அருண், கருநாடகத் தமிழ் மக்கள் இயக்கத் துணைத் தலைவர் பண்முகன் ஆகியோர் பலத்த கரவொலிக்கு இடையே திறந்துவைத்தனர்.
ஈஜிபுரா தலைவர் கோ.சண்முகம், பிஸ்கட்டுகளும், குளிர் பானமும் வழங்கினார். வடக்கு மண்டலச் செயலாளர் சி.வரதராசன் இனிப்புகளை வழங்கினார். மாநிலத் துணைத் தலைவர்குணவேந்தன் அனைவருக்கும் சிற்றுணவும் மற்றும் பிஸ்கட், தேநீர் ஆகியன வழங்கினார்.
நிறைவாக வழக்குரைஞர் ஜெ.அருண் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.