நவீன அறிவியல் யுகம் மனிதர்களுக்கு அளித்த ஒரு ‘‘அதிசய அருட்கொடை’’ என்ன தெரியுமா?
மூளைச்சாவு அடைந்த மனிதர்கள் – எப்பாலர் ஆனாலும் அவர்களது நெருங்கிய உரிமை உள்ள உறவுகளின் தாராளமான மனிதநேயத்தால், செத்தவர்கள் உலகில் எங்கோ ஒரு மூலையில் வாழ்பவர்களாகவே வாழ்ந்து, இழப்பை ஏற்க முடியாது சோகத்தின் சூழலிலேயே உழன்று கொண்டிருப்பவர்களுக்கு ஒருவகை ஆறுதலைத் தருவதுடன், மறைந்தவர்கள் கருணையால் என்றும் வாழும் வரலாறு படைத்தவர்கள் ஆகிறார்கள்!
ஏற்கெனவே உயிர் வாழ தேவைப்படும் உடல் உறுப்புக்களை – மருத்துவத்தின் உயர் கண்டுபிடிப்புகளாலும், மருத்துவர்களாகிய வல்லுநர்களின் அபாரத் திறமையாலும் சில மணி நேரத்திற்குள், உடலில் எடுக்கப்பட்ட உடல் உறுப்புகள் விமானம் மூலம் பறந்துகூட இணைத்து, புதுவாழ்வு – மறுவாழ்வு பெற்றவர்களாகி மீண்டும் ‘புதுப்பிறவி’ எடுக்கிறார்கள்?
‘அடுத்த பிறவி’ என்ற கற்பனை முன்பு வேறு வகை – இப்போதோ மருத்துவ அறிவியல் தொழில் நுட்ப ஆய்வின் பலனாக அருஞ் சாதனையாக மனிதன் இறந்தாலும், அவரது உறுப்புகளின் உயிர் காரணமாக புதிய வாய்ப்புகளை, புதிய வார்ப்புகளாகவும் பயன் பெற்று உலவுகின்றனர்.
அதைத்தாண்டி, மறைந்தவர்கள் உடலுறுப்புக் கொடையைத் தாண்டி அடுத்த பயனுறு கட்டமாக, ‘சுடுகாட்டில் எரியூட்டவோ, இடுகாட்டில் கல்லறையில் புதைக்கப்பட்டோ இறந்தவர்களின் உடல் பயனில்லாமல் போவதற்குப் பதிலாக – அதை மருத்துவ மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து, அவர்களை நல்ல மருத்துவர்களாக்கிட மறைந்தவர்கள் தங்களது உடற்கொடை மூலம் மருத்துவக் கல்வி கொடையாளர்களாகவும் மற்றொரு கோணத்தில் – பயன்படுகிறார்களே!
என்னே மனித அறிவின், மனிதர்களின் கருணை – அன்பின் காரணமாக, சமூக கூட்டு வாழ்க்கையில் இப்படி புதுப்புது கண்டுபிடிப்புகளும் கருணை மலர்களும் பூத்துக் குலுங்கி காய்த்துக் கனிகின்றன.
திருவாரூரில் அய்யா எஸ்.எஸ். மணியம் – இராஜலட்சுமி அம்மையார் குடும்பத்தைச் சார்ந்த கழகக் கொள்கையாளர் கழகப் பொறுப்பாளராக இருந்த திரு. கிருஷ்ணமூர்த்தியின் உடற்கொடை (மாவட்டத் தலைவர் திரு. அருண்காந்தியின் அருமைத் தந்தை) நடந்ததுபற்றி, திருவாரூர் பொது மனிதநேய அமைப்புகள் கழகத்தின் தியாக உணர்வு பற்றிக் குறிப்பிட்டுள்ள செய்தியை படியுங்கள் – அருகே!
நம்மியக்கம் ஒரு மனிதநேய பகுத்தறிவாளரின் அமைப்பு என்பதற்கு இதைவிட வேறு சான்றா தேவை? ‘கடவுளை மற; மனிதனை நினை’ என்றார் தந்தை பெரியார். காரணம் மனிதர்களை மறந்து விட்டு கடவுளை நினைத்து சமூகம் பயனற்றுப் போனதை தந்தை பெரியார் மாற்றவே, மனிதத்தை உயர்த்தவே அப்படி எழுதினார்!
அது நமக்கு வெறும் ஏட்டுச் சுரைக்காய் அல்ல,
அன்றாட நாட்டு நடைமுறையாகும்.
தொடரட்டும் உடற்கொடைகளும், உறுப்புக் கொடைகளும்.
மனிதநேய செயலுக்கு பாராட்டு
திராவிடர் கழக சகோதரர்களுக்கு நன்றியும்… மகிழ்வும்…
11 உடற்கொடைகள், விழிக்கொடைகள்
2013இல் துவங்கிய எங்கள் திருவாரூர் அறநெறி லயன்ஸ் சங்கம் இந்த 11 ஆண்டு களில் 30 உடற்கொடை பெற்று திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாணவர்கள் கல்வி பயில்வதற்கு உதவி புரிந்துள்ளோம்.
30 உடற்கொடைகளில் சுமார்
11 உடற்கொடைகள் திராவிடர் கழக சகோதரர்கள் அளித்தது.
அதே போன்று ஒவ்வொரு ஆண்டும் அதிகமான விழிக்கொடைகளையும் அளித்து வருகிறார்கள்.
இன்று 30ஆவது உடற்கொடை அளித்த திராவிடர் கழகத்தை சார்ந்த திருவாரூர் புலிவலம் எஸ்.எஸ். மணியன் அவர்களின் மகனும், திராவிடர் கழக மாவட்ட துணைத் தலைவர் Rtn கே.அருண்காந்தி அவர்களின் தந்தையாருமான திரு.எஸ்.எஸ்.எம்.கிருஷ்ணமூர்த்தி அவர்களும் திராவிடர் கழக பாரம்பாரியத்தில் வந்தவர்கள்தான்.
தொடர்ச்சியாக விழிக்கொடைகளையும், உடற்கொடைகளையும் வழங்கும் திராவிடர் கழக சகோதரர்களுக்கு எங்கள் திருவாரூர் அறநெறி லயன்ஸ் சங்கத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
முகநூலிலிருந்து…