அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படும் அமலாக்கத்துறை கருநாடக முதலமைச்சர் குற்றச்சாட்டு

Viduthalai
1 Min Read

பெங்களூரு, டிச.5 நில முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுகிறது என்று கருநாடக முதலமைச்சர் சித்த ராமையா குற்றம்சாட்டியுள்ளார்.

நில முறைகேடு வழக்கு
நில முறைகேடு வழக்கில் சித்த ராமையா பெயர் சிக்கியுள்ளதால் அவர் தனது முதலமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் என அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோகா வலியுறுத்தி வருகிறார்.
முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான இடத்தை கையகப்படுத்தியதற்காக மைசூரு மாநகர மேம்பாட்டு கழகம் மாற்று நிலம் ஒதுக்கீடு செய்தது. இதில் முறைக்கேடு நடந்துள்ளதாக புகார் எழுந்ததால் லோக் ஆயுக்தா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இவ்வழக்கில் சித்தராமையா, அவரது மனைவி பார்வதி, மூத்த மைத்துனர் மல்லிகார்ஜுன சுவாமி, இளைய மைத்துனர் தேவராஜ் ஆகியோரிடம் லோக் ஆயுக்தா காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். இதனி டையே அமலாக்கத்துறையும் நால்வர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளது.இதுகுறித்து முதலமைச்சர் சித்தராமையா மைசூருவில் செய்தியா ளர்களிடம் பேசும் போது கூறியதாவது:

அரசியல் உள்நோக்கம்
‘‘நிலம் ஒதுக்கீடு செய்த விவகாரத்தில் எனது தலையீடு எதுவும் இல்லை. நான் எந்த விதிமுறை மீறலிலும் ஈடுபடவில்லை. இந்த வழக்கில் நான் நிரபராதியாக வெளியே வருவேன். ஆனால் அரசியல் ரீதியாக பழிவாங்க பல்வேறு முயற்சிகள் நடந்து வருகின்றன.
அமலாக்கத்துறை அதிகாரிகள் அரசியல் உள்நோக்கத்துடன் எனக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளனர். அமலாக்கத்துறையின் செயல்பாடுகள் மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, என் மீதான வழக்கின் விசாரணைக்கு தடைக்கோரி கருநாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தேன்.
அந்த மனு விசாரணைக்கு வருவதற்கு முந்தைய தினம் அமலாக்கத்துறை எனக்கு தாக்கீது அனுப்பியது. இதன் மூலம் அமலாக்கத்துறை, மறைமுகமாக கருநாடக உயர்நீதிமன்றம் மூலமாக அழுத்தம் கொடுக்க முயற்சித்தது அம்பலமாகியுள்ளது. இந்த சதிகளை எதிர்க்கொண்டு வெற்றிகரமாக வழக்கில் இருந்து விடுதலை ஆவேன்”.
இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *