சென்னை, ஏப். 28- இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாகத் தங்கி சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையில் 43 சதவீதத்தைப் பெற்று தமிழ்நாடு முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
தேசிய புள்ளியியல் ஆய்வகம் (NSO) சமீபத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கையில் இந்த முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையின்படி, இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் தான் பொதுமக்கள் அதிக அளவில் அரசு மருத்துவமனைகளைத் தேர்வு செய்கின்றனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு மருத்துவமனைகள் இத்தகைய மைல்கல்லை எட்டியதற்குப் பின்னால் உள்ள முக்கிய காரணங்களாகப் பின்வருவன பார்க்கப்படுகின்றன.
தரம் மற்றும் நவீன வசதிகள்
தனியார் மருத்துவமனைகளுக்கு இணையான நவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் உயர்தர சிகிச்சை வசதிகள் அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மருத்துவர்களின் நம்பகத்தன்மை: அரசு மருத்துவர்களின் அனுபவம் மற்றும் அவர்கள் மீதான பொதுமக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை இந்த உயர்வுக்கு முக்கியக் காரணமாகும். அரசின் பல்வேறு மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் மற்றும் இலவச மருத்துவ சேவைகள் அடித்தட்டு மக்கள் வரை சென்றடைந்துள்ளது., தமிழ்நாட்டின் பொது சுகாதாரக் கட்டமைப்பு இந்தியாவில் ஒரு முன்னோடியாகத் திகழ்வதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. பொதுமக்களின் இந்த அதீத ஆதரவு, மருத்துவத் துறையில் தமிழ்நாடு மேற்கொண்டு வரும் தொடர் முன்னேற்றத்திற்குச் சான்றாக அமைந்துள்ளது
தமிழ்நாட்டில் பதிவான
அஞ்சல் வாக்கு எண்ணிக்கையில் முரண் உள்ளதா? வெளியான தகவல்
சென்னை, ஏப்.28- தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. 85 சதவீத வாக்குப்பதிவு நடந்து சாதனை படைத்தது. இதனைத்தொடர்ந்து மே நான்காம் தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது. அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வாக்கு என்னும் மய்யங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகள், ராணுவப்படை வீரர்கள், கட்சி முகவர்கள் என பலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மே நான்காம் தேதி முதலில் அஞ்சல் வாக்குகள் தான் எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை எட்டு மணிக்கு அஞ்சல் வாக்குகள் எண்ணப்படும், அதன் பிறகு தான் இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் என தேர்தல் அதிகாரி தெரிவித்து இருக்கின்றார். இதற்கிடையில் தேர்தல் ஆணையம் வெளியிட்டு இருக்கும் அஞ்சல் வாக்கு எண்ணிக்கையில் முரண்கள் இருப்பதாக சொல்லப்படுகின்றது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பொதுவான அஞ்சல் வாக்கு குறித்து ஒரு தகவல் வந்துள்ளது. தேர்தல் பணியில் ஈடுபட்டு இருந்த 3 .60 லட்சம் அலுவலர்களில் 2 .88 லட்சம் அலுவலர்கள் அஞ்சல் வாக்குகளை செலுத்தி இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டு இருக்கும் காவல்துறையினர், தேர்தல் கண்காணிப்பு குழு அலுவலர்கள் என 3 .36 லட்சம் பேர் அஞ்சல் வாக்கு செலுத்தி இருக்கின்றனர்.
அதைத்தொடர்ந்து 85 வயதிற்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் என் 1.73 லட்சம் பேர் வாக்கு செலுத்தி இருக்கின்றனர். இதையெல்லாம் சேர்த்து பார்த்தால் கூட்டுத்தொகை 8.15 லட்சம் வருகின்றதாம். ஆனால் தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் தகவலில் 6.37 லட்சம் அஞ்சல் வாக்குகள் தான் பதிவாகி இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. எனவே இந்த அஞ்சல் வாக்கு எண்ணிக்கையில் முரண் இருப்பதாக சொல்லப்படுகின்றது.
இந்த எண்ணிக்கைகளை கூட்டி பார்த்தால் 8 லட்சத்திற்கு மேல் அஞ்சல் வாக்குகள் இருக்கும் நிலையில் எப்படி 6 லட்சம் வாக்குகள் தான் பதிவாகி இருப்பதாக சொல்லப்படுகின்றது என சிலரால் கேள்வி கேட்கப்பட்டு வருகின்றது. எனவே விரைவில் தேர்தல் ஆணையம் இதுகுறித்தான விளக்கத்தை கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் ஒருபக்கம் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிகப்படியான வாக்குப்பதிவு நடந்திருப்பதாக சொல்லப்படுகின்றது.
ஆனால் அதே சமயம் வாக்குப்பதிவு சதவீதம் தான் அதிகரித்துள்ளதே தவிர வாக்காளர்களின் எண்ணிக்கையில் உயர்வு இல்லை என பலர் சொல்கின்றனர். கடந்த முறை வாக்களித்தவர்களின் எண்ணிக்கையையும் இம்முறை வாக்களித்தவர்களின் எண்ணிக்கையையும் பார்த்தால் ஒரே மாதிரி தான் இருக்கின்றது என திமுகதரப்பினர் சொல்கின்றனர்.
சட்டவிரோத மணல் கடத்தல் வழக்கு
கரூர் நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்
எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனையுடன் பிணை!
கரூர், ஏப். 28- சட்டவிரோத மணல் கடத்தல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று (27.4.2026) கரூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற சட்டவிரோத மணல் கடத்தல் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தனக்கு முன்பிணை வழங்கக்கோரி அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த கரூர் நீதிமன்றம், அவருக்கு நிபந்தனை பிணை வழங்கியது.
சரண் அடைய உத்தரவு: முன்னதாக, இந்த வழக்கில் மார்ச் 31ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனினும், குறிப்பிட்ட அந்த நாளில் அவர் நீதிமன்றத்தில் சரணடையவில்லை.
சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு: இதனைத் தொடர்ந்து நடந்த மேல்முறையீட்டு விசாரணையில், சென்னை உயர்நீதிமன்றம் அவர் ஏப்ரல் 29ஆம் தேதிக்குள் கண்டிப்பாகச் சரணடைய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. உயர்நீதிமன்றம் வழங்கிய காலக்கெடு நாளை (ஏப்ரல் 29) முடிவடைய உள்ள நிலையில், ஒரு நாள் முன்னதாகவே இன்று (ஏப்ரல் 28) எம்.ஆர். விஜயபாஸ்கர் கரூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். நீதிமன்றத்தில் ஆஜரான அவர், பிணை நடைமுறைகளை நிறைவு செய்ததாகத் தெரிகிறது.
நீதிமன்ற வளாகத்தில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் வழக்குரைஞர்கள் திரண்டதால் கரூரில் நேற்று (27.4.2026) பரபரப்பான சூழல் காணப்பட்டது.

