தந்தை பெரியார் தந்த அருங்கொடை!

viduthalai
4 Min Read

பேராசிரியர்
பூ.சி.இளங்கோவன்

“தென்றிசையைப் பார்க்கின்றேன்; என்சொல்வேன் என்றன்
சிந்தையெல்லாம் தோள்களெல்லாம் பூரிக்கு தடடா!
அன்றந்த லங்கையினை ஆண்ட மறத்தமிழன்
அய்யிரண்டு திசைமுகத்தும் தன் புகழை வைத்தோன்
குன்றெடுக்கும் நெடுந்தோளான் கொடைகொடுக்கும் கையாளன்!
குள்ளநரிச் செயல்செய்யும் கூட்டத்தின் கூற்றம்!
என் தமிழர் மூதாதை! என்தமிழர் பெருமான்
இராவணன்காண்! அவன்தன் நாமம் இவ்வுலகம் அறியும்!”
– என்று இராவணனை புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் புகழும் தன்மைக்கேற்ப – நம் பெரியாரிய கொள்கைக்கு கிடைத்திருக்கும் – நாணயமான – நேர்மையான – தலைவர், நம் தமிழர் தலைவர் ஆசிரியரே ஆவார். அன்று, இராவ ணனைக் கண்டு அஞ்சி, நடுங்கி, பதுங்கி புறமுதுகிட்டு ஓடிய ‘தேவர் களை’ப் போல – யாகம் நடத்தி பிழைப்பு நடத்திய பார்ப்பனர்களைப் போல, இன்று, நம் இன எதிரிகளுக்கு, கொள்கை விரோதிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கக் கூடியவர் ஒருவர் உண்டென்றால், அவர் நம் ஆசிரியர் மட்டும்தான் ஆகும்.
இம்மாதம் நடைபெற்ற சொற் பொழிவாளர்களுக்குப் பயிற்சி முகாமில் – உரையாற்றிய நம் தலைவர் நம் இயக்கத் தொண்டை மூன்று பிரிவுகளாகப் பிரித்து,
1. தந்தை பெரியாருக்கு முன்…
2. தந்தை பெரியார் காலத்தில்…
3. தந்தை பெரியார் காலத்திற்குப் பின்… என்று
– விளக்கியது மிகத் தெளிவாக இருந்தது.
தந்தை பெரியார் மறைவிற்குப் பின், இவ்வியக்கம் அழிந்துவிடும் அல்லது மங்கிவிடும் – நம் கொள்கைக்கு தடையிராது என்று எண்ணிய பார்ப்பனர்களின் எண் ணத்தில் மண்ணைப் போட்டது நம் தலைவரின் செயல்பாடுகளாகும்.
“இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்”
என்ற திருக்குறள் பொருளுக்கேற்ப, தந்தை பெரியாரும், அன்னை மணியம்மையரும் நம் இயக்கத்தை ஆசிரியரிடம் ஒப்படைத்துச் சென்றது எத்துணைப் பொருத்தமானது – என்பதைப் பார்க்கிறோம்.

தந்தை பெரியார் மறைந்த நிலையில், அன்னை மணியம்மை யாரும் நம் தலைவர் ஆசிரியரும் எதிர்கொண்ட பிரச்சினைகள் கொஞ்ச நஞ்சமல்ல. வருமான வரித் தொல்லை, எதிரிகளின் எதிர்ப்பு, அரசாங்கத்தின் ஆதரவின்மை ஒருபுறம் – என்று பலமுனைத் தாக்குதல்கள் நடைபெற்ற காலகட்டத்தில்தான் நம் தலைவர் ஆசிரியர் அவர்கள் பொறுப்பேற்றார். நம் இயக்கத்திற்கு பொறுப்பேற்றது முதல் இன்றுவரை தன்னை ஒரு தலைவர் என்று என்றுமே நினைத்துக் கொள்ளாமல் – தன்னை ஒரு பெரியாரின் தொண்டன் என்று நினைப்பதுடன் மட்டுமல்லாது, அதனை செயல்முறையிலும் காட்டிவரும் ஓர் ஒப்பற்ற தொண்டறத் தலைவர் ஆவார்.
தலைமைப் பண்பிற்கே தலை மையேற்பது போன்றதொரு செயல். நம் தலைவரிடமுள்ளது என்றால், அப்பண்பு என்ன என்றால் அனை வரிடமும் அன்பு காட்டி, ஒவ்வொரு தொண்டருக்கிடையிலும் வேறுபாடு இல்லாமல், திருக்குறள் காட்டும் ‘துலாக்கோல்’ போன்ற நடுவு நிலைமைப் பண்பாகும்.
நான் 1966ஆம் ஆண்டு முதல் நம் தமிழர் தலைவரை அறிந்தவன். நான் கண்டு வியக்கும் செயல் என்னவென்றால், வைரம் பட்டை தீட்டத் தீட்ட ஒளிவிடுவதுபோல் அவரின் பழகும் பண்பும் உள்ளது.
சில தலைவர்கள் உயர உயர ஏறிவந்த ஏணியை மறந்துவிடுவார்கள். ஆனால், ஆசிரியர்தான் யாரால் இக்கொள்கைக்கு அழைத்து வரப் பட்டோம் என்பதை நினைவு கூரும் தன்மையில் திராவிடமணி என்ற ஆசிரியர்தான் காரணம் என்று கூறுவதை நினைத்து வியக்கின்றோம். இக்கொள்கையில் சிலர் தாங்களே ‘சுயம்புவாக’த் தோன்றியதாகக் காட்டிக் கொள்வார்கள். ஆனால், ஆசிரியர் என்றைக்கும் ஏறிவந்த ஏணியை மறக்காத மாண்பாளர்!

ஆசிரியரின் உள்ளம் எப்படிப்பட்ட குழந்தை உள்ளம் என்பதை – சென்ற ஆண்டு (2023 மார்ச்சு மாதம்) எனது அண்ணாமலை இல்லத்திற்கு வந்தபொழுது அறியும் வாய்ப்பு கிடைத்தது. ஆசிரியர் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்தது அனைவரும் அறிந்ததே!
அவ்வாறு வந்தபொழுது, அந்நாட்களில் தான் படித்த வகுப்பறை – கூட்டங்கள் நடைபெறும் ‘கோகலே’ அரங்கம் ஆகியவற்றைக் காண விருப்பப்பட்டார். நானும், தமிழ்த் துறைத் தலைவர் முதுமுனைவர் அரங்க.பாரி அவர்களிடம் தெரிவித்தேன். தமிழ்த்துறைத் தலைவர், ஆசிரியரின் விருப்பத்தை பதிவாளரிடம் தெரிவித்து – அந்த கோகலே அரங்கத்தை திறக்கச் செய்தார்.
ஆசிரியர் அவ்வரங்கத்தினுள் சென்று, அங்குள்ள படங்களைப் பார்த்து – பழைய நினைவுகளை அசைபோட்டு, அப்படங்களை யெல்லாம், நம் ஒளிப்படக் கலைஞர் சிவக்குமாரிடம் படம் எடுக்கச் சொல்லி மகிழ்ந்தார். தான் பி.ஏ., படிக்கும்பொழுது, அவ்வரங்கத்தில் பேசியபொழுது, அன்றைய தமிழ்த்துறைத் தலைவர் டாக்டர் அ.சிதம்பரநாதன் செட்டியார், தன் தோளில் கை வைத்து “நன்றாகப் பேசினாய் வீரமணி” என்று கூறியதை யெல்லாம் எங்களிடம் ஒரு குழந்தை உள்ளத்தோடு கூறினார். அந்த மண்டபத்தின் முன் நின்று தனிப் படம் எடுத்துக் கொண்டார்.
தமிழ்த்துறைக்கு வந்து, தான் எந்த அறையில் மாணவனாக அமர்ந்திருந்தேன் என்பதையும், முன்வரிசை இருக்கையில் (முதல் பெஞ்ச்) அமர்வேன் என்பதையும் கூறினார்.

தந்தை பெரியார் ஏந்திய கொள்கைச் சுடரை இன்றுவரை அணையாமல் காத்துவரும் நம் தலைவர் – இக்கொள்கைகள் தனக்குப் பின்னும் செழிப்படைய வேண்டும் என இளைஞர் பட்டாளத்தை உருவாக்கி – அதற்குக் கொள்கை விளக்கத்தையும் பயிற்சி முகாம்கள் மூலம் அளித்து வருகிறார். 2021ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற தன் பிறந்த நாள் நிகழ்ச்சியில், எனக்கும் வாய்ப்பளித்து 1975ஆம் ஆண்டு கழகம் எதிர்கொண்ட துரோகத்தை விளக்கிப் பேசினேன்.
பட்டை தீட்டப்பட்ட கொள்கை உள்ளம், இன்று 92ஆவது வயதை தொடங்குகிறது என்றால் நம் மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது. “தலைவா!” நீர் தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தையும் தாண்டி வாழ்ந்து தந்தை பெரியார் கொள்கையை நிலைநாட்டுவீர்கள்” என்று மனதார உறுதியாக எண்ணுகிறோம். உங்கள் வாழ்க்கை உங்கள் சுயநலத்திற்கு அல்ல; தந்தை பெரியார் கொள்கை யைப் பரப்புவதற்கு என்பதை நாங்கள் அறிவோம்! தமிழினத்தின் பாதுகாப்பு அரணே, நீடு வாழ்க, வாழ்கவே!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *