தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் தேதி கூடும் – பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவிப்பு

viduthalai
1 Min Read

சென்னை, நவ. 27- தமிழ்நாடு சட்டப் பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று, 15ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை அளித்தார்.

தொடர்ந்து, 19ஆம் தேதி தமிழ்நாடு அரசின் 2024-2025ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசுவும், 20ஆம் தேதி வேளாண்மை நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வமும் தாக்கல் செய்தனர். நிதிநிலை அறிக்கைகள் மீது 22ஆம் தேதி வரை விவாதம் நடைபெற்றது.

அதன் பிறகு, துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதம், கடந்த ஜூன் 20 முதல் 29ஆம் தேதி வரை 10 நாட்கள் நடத்தப்பட்டன.
சட்டப்பேரவை விதிகளின்படி, பேரவையின் ஒரு கூட்டம் முடிவடைந்தால், அடுத்த 6 மாதங்களுக்குள் அடுத்த கூட்டம் நடத்தப்பட வேண்டும். அந்த வகையில், வரும் டிசம்பர் இறுதிக்குள் சட்டப்பேரவை கூட்டம் நடத்த வேண்டும்.

இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் டிசம்பர் 9ஆம் தேதி நடைபெறும் என்று பேரவைத் தலைவர் மு.அப்பாவு நேற்று (25.11.2024) அறிவித்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் டிசம்பர் 9ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்க உள்ளது. எத்தனை நாட்கள் கூட்டம் நடைபெறும் என்பது, அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். கூட்ட நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்வது தொடர்பாக படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

செயற்கை நுண்ணறிவு

எனது வெளிநாட்டு சுற்றுப் பயணத்தின்போது, செயற்கை நுண்ணறிவு (ஏ.அய்) குறித்து பேச வாய்ப்பு கிடைத்தது. ஏ.அய். தொழில்நுட்பத்தில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உள்ளது. மாணவர்களுக்கு இது மிகவும் பயனளிக்கும்.

சட்டப்பேரவையிலும் காகிதம் இல்லாத முறைதான் செயல்பாட்டில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *