டில்லி பல்கலைக் கழக தேர்தலில் காங்கிரஸ் மாணவர் அணி வெற்றி

viduthalai
2 Min Read

புதுடில்லி, நவ. 27- டில்லி பல்கலைக் கழக மாணவர் சங்கத் தேர்தலில் 7 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் இந்திய தேசிய மாணவர் சங்கம் வெற்றி பெற்றுள்ளது.

டில்லி பல்கலை மாணவர் சங்க தேர்தல் மிகவும் முக்கியமாக எதிர்பார்க்கப்படும். இந்த தேர்தலில் கடைசியாக 2017இல் காங்கிரஸ் ஆதரவு பெற்ற இந்திய தேசிய மாணவர் சங்கம் (என்.எஸ்.யு.அய்.) வெற்றி பெற்றது. அதன்பிறகு ஆர்எஸ்எஸ் ஆதரவு பெற்ற ஏபிவிபி மாணவர் அமைப்பினரும் வெற்றி பெற்று வந்தனர். தற்போது 7 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் வெற்றி பெற்று தலைவர் பதவியை பிடித்துள்ளது. இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் ரவுனக் காத்ரி தலைவர் பதவிக்கு போட்டியிட்டு 20,207 வாக்குகள் பெற்றார்.

ஆர்எஸ்எஸ் ஆதரவு பெற்ற ஏபிவிபி வேட்பாளர் ரிஷப் சவுத்ரி 18,864 ஓட்டுகள் மட்டுமே பெற்றதால் தலைவர் பதவியை ரவுனக் காத்திரி கைப்பற்றினார். இணைச் செயலாளர் பதவிக்கான போட்டியில், மாணவர் காங்கிரசின் லோகேஷ் சவுத்ரி 21,975 வாக்குகள் பெற்று ஏபிவிபியின் அமன் கபாசியாவை 6,726 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். துணைத் தலைவர் பதவிக்கு ஏபிவிபி வேட்பாளர் பானு பிரதாப் சிங் 24,166 வாக்குகள் பெற்று என்எஸ்யுஅய்வின் யாஷ் நந்தலை 8,762 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். செயலாளர் பதவிக்கு ஏபிவிபியின் மித்ரவிந்தா கரண்வால் 16,703 வாக்குகள் பெற்று என்எஸ்யுஅய்வின் வேட்பாளர் நம்ரதா ஜெப் மீனாவை 1,447 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.

853 அய்ஆர்எஸ் அதிகாரிகள் விருப்ப ஓய்வு
நாடாளுமன்றத்தில் அதிர்ச்சித் தகவல்

புதுடில்லி, நவ. 27- கடந்த 10 ஆண்டுகளில் 853 இந்திய வருவாய் துறை அதிகாரிகள் (அய்ஆர்எஸ்) விருப்ப ஒய்வை பெற்றுள்ளதாக நாடாளுமன்றத்தில் 25.11.2024 அன்று தெரிவிக்கப்பட்டது.

ஒன்றிய நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதுகுறித்து கூறியுள்ளதாவது: கடந்த 2014 முதல் 2024 வரை வருமான வரி துறையைச் சேர்ந்த 383 அய்ஆர்எஸ் அதிகாரிகள், சுங்கம் மற்றும் மறைமுக வரி துறையைச் சேர்ந்த 470 அய்ஆர்எஸ் அதிகாரிகள் என மொத்தம் 853 அய்ஆர்எஸ் அதிகாரிகள் விஆர்எஸ் திட்டத்தின்கீழ் விருப்ப ஓய்வினைப் பெறறுள்ளனர்.

கடந்த 2020-2025 நிதியாண்டு வரை (2024, அக்டோபர் 31 நிலவரம்) கேரள சுங்கத் துறை அதிகாரிகள் 2,746.49 கிலோ கடத்தல் தங்கத்தை விமான நிலையங்களில் பறிமுதல் செய்துள்ளனர். பிடிபட்ட தங்கம் விசாரணைக்குப் பிறகு உரிய இடத்தில் கொண்டு சேர்க்கப்படும்.
ரிசர்வ் வங்கி தரவுகளின்படி வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் ரூ.1 லட்சத்துக்கும் அதிகமாக நடைபெற்ற நிதி மோசடிகள் ரூ.2021-2022-ல் ரூ.9,298 கோடியாக இருந்த நிலையில் 2022-2023இல் ரூ.3,607 கோடியாக சரிந்துள்ளது. இது, 2023-2024இல் ரூ.2,715 கோடியாக மேலும் குறைந்தது. இவ்வாறு பங்கஜ் சவுத்ரி கூறியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *