அதிகரிக்கும் போலி வேலைவாய்ப்பு விளம்பரங்கள்!

viduthalai
1 Min Read

சென்னை, நவ.25- தற்போதெல்லாம் பெரும்பாலான நிறுவனங்கள் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக போலி வேலைவாய்ப்புகளை அறிவிக்கின்றன. இன்றைய காலகட்டத்தில் நல்ல வேலை கிடப்பது என்பது குதிரைக்கொம்புபோல் ஆகிவிட்டது என்று வேலை தேடுபவர்கள் தெரிவிக்கின்றனர். ஆகையால், பல்வேறு நிறுவனங்கள் வெளியிடும் வேலைவாய்ப்புகளுக்காகவே வேலைவாய்ப்பற்றோர் பலரும் காத்திருக்கின்றனர்.
இதனைச் சாதகமாக்கிக் கொண்ட பல நிறுவனங்கள், தங்கள் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு இருப்பதாக (Ghost Jobs – போலி வேலைவாய்ப்புகள்) போலி விளம்பரங்களை வெளியிடுகின்றனர். போலி வேலைவாய்ப்புகளை அறிவிப்பதன் மூலம், குறிப்பிட்ட நிறுவனத்தில் ஆள்சேர்ப்பு நடந்தால், அந்த நிறுவனம் நல்ல முறையிலும், செழிப்பாகவும் இயங்குவதாக பொதுமக்களை நம்ப வைக்கும் யுக்தியாகக் கொண்டு இதனைக் கையாளுகின்றனர்.
இன்னும் சில நிறுவனங்கள், போலி வேலைவாய்ப்புகளை அறிவித்து, விண்ணப்பங்களைப் பெற்று, அவை எதிர்காலத்தில் பயன்படக் கூடும் என்று கருதுகின்றனர். சில நிறுவனங்கள், எந்தப் பகுதிகளில் திறமையாளர்கள் கிடைக்கிறார்கள் என்பதை அறியவும் போலி வேலைவாய்ப்பு விளம்பரங்களை அளிக்கின்றனர். இன்னும் சில நிறுவனங்கள் போலி வேலைவாய்ப்புகள் அறிவித்து, தங்களிடம் பணிபுரியும் ஊழியர்களிடம் ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தி, அவர்களிடம் பணிச்சுமையை மறைமுகமாகத் திணிக்கவும் செய்கின்றனர். சிலர் வேலைவாய்ப்புகளை அறிவித்து, அந்த விளம்பரங்களை நீக்காமல் அப்படியே விட்டுவிடுகின்றனர்.

தவிர்ப்பது எப்படி?

வேலைவாய்ப்பு தேடுபவர்கள், இந்த போலி வேலைவாய்ப்புகளை நம்பி, அதனில் நேரத்தை வீணடித்து மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். சிலர், இந்த மாயை வேலைவாய்ப்பு விளம்பரங்களில் அறிவித்திருக்கும் திறமைகளைக் கற்கவும் முயற்சிகள் மேற்கொள்கின்றனர். சில வேலைவாய்ப்புகள் நீண்ட காலமாக விளம்பரப்படுத்திக் கொண்டே இருக்கும். ஆனால், அவை விண்ணப்பதாரருக்கு எந்த விதமான பதில் அளிக்காமல் இருப்பர். இவையெல்லாம், போலி வேலைவாய்ப்புகளே.

மாயை வேலைவாய்ப்புகளைத் தவிர்ப்பதற்கு சம்பந்தப்பட்ட நிறுவன அதிகாரியைத் தொடர்பு கொண்டு, உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *