வாரணாசி ஞானவாபி மசூதியில் தொல்லியல் ஆய்வா?

Viduthalai
3 Min Read

அரசியல்

உத்தரப் பிரதேசம் வாரணாசியில் அமைந்துள்ளது ஞானவாபி மசூதி. இங்கு, ஆண்டுக்கு ஒரு முறை இந்துக்கள் வழிபாடு மேற்கொள்ள அனுமதி வழங் கப்பட்டு வருகிறது. இந்த மசூதியானது, சிவன் கோவிலை இடித்து அதன்மேல் கட்டப்பட்டதாக கதை கட்டவிழ்த்து விடப்பட்டது. இந்த நிலையில், ஞான வாபி மசூதியில் உள்ள சிவன்கோவிலில், இந்துக்கள் வழிபட அனுமதி வழங்க வேண்டும்  என்று இந்துப் பெண்கள் அய்ந்து பேர் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.  முதலில் இந்த வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டது.

பின்னர் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என  அஞ்சுமன் இன்டெஜாமியா மசூதி (ஏஅய்எம்) கமிட்டி மற்றும் உத்தரப்பிரதேச சன்னி வக்பு வாரியம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. “1991 ஆம் ஆண்டின் வழிபாட்டுத் தலங்கள் சட்டம் மற்றும் 1995ஆம் ஆண்டின் மத்திய வக்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் மனுதாரர்களின் கோரிக்கை விசாரணைக்கு உகந்தது அல்ல” என ஏஅய்எம் கமிட்டி மனுவில் குறிப் பிட்டிருந்தது.

வழக்கின் விசாரணையின்போது, மசூதி வளாகத்தில் வழிபாடு மேற்கொள்ள அனுமதி வழங்கக் கோரி மனு தாக்கல் செய்த அய்ந்து இந்துப் பெண்களில் நான்கு பேர், சிவலிங்கம் போன்ற சிலையின் தொன்மத்தைக் கண்டறிய கார்பன் டேட்டிங் போன்ற விஞ்ஞானப்பூர்வமான ஆய்வை நடத்த வேண்டும் என மேலும் ஒரு மனுவைத் தாக்கல் செய்தனர். அதில், இந்துக் கடவுளர்களின் சிலைகள், மசூதிக்கு உள்ளே இருப்பதாக அவர்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர். 

இந்த நிலையில்,   கார்பன் டேட்டிங்  ஆய்வுக்கு  ஞானவாபி மசூதி கமிட்டி எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதனால் சர்ச்சை எழுந்தது. மசூதியில் உள்ள   சிவலிங்கம் என சொல்லப்படும் சிலை, நீரூற்று என்றும், மசூதிக்கு செல்லும் இஸ்லாமியர்கள் வழிபடுவதற்கு முன்னதாக தங்களைத் தாங்களே சுத்தம் செய்து கொள்ள அதைப் பயன்படுத்தி வருவதாகவும் மசூதி கமிட்டி விளக்கம் அளித்திருந்தது.

இந்த வழக்கின் பல்வேறுகட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, மசூதியில் உள்ள சிலையின் தொன்மையை கண்டறிய விஞ்ஞானப்பூர்வமான ஆய்வுகளை மேற்கொள்ள இந்திய தொல்லியல் துறைக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது  அதன்படி, தொல்லியல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் தங்களது ஆய்வுகளைத் தொடங்க இருந்தனர்.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் அவசர வழக்காக விசாரிக்கக் கோரி மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம்,  ஞானவாபி மசூதியில்,  அகழ்வாராய்ச்சியுடன் பணியை தொடர்வதற்கு   ஜூலை 26 மாலை 5 மணி வரை  நிறுத்தி வைக்கும்படி   உத்தர விட்டு உள்ளது.

“உண்மைகள்” வெளிவருவதற்கு அறிவியல் விசாரணை “அவசியம்” என்று கூறி, மசூதி ஏற்கெனவே உள்ள இந்துக் கோவிலின் மீது கட்டப்பட்டதா என்பதை அறிய கிஷிமி ஆல், ஞானவாபி மசூதியின் முத்திரையிடப்பட்ட பகுதியைத் தவிர்த்து,  மற்ற பகுதியில் விரிவான ஆய்வுகளை நடத்த வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தற்போது உச்சநீதிமன்றம் அதற்குத் தடை போட்டுள்ளது. இந்தத் தடை நிரந்தரமாக்கப்பட வேண்டும். 

2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு மதப் பிரச்சினையை ஏற்படுத்துவது என்ற வழக்கமான முறையை நடைமுறைப்படுத்த பிஜேபி சங்பரிவார்கள் திட்டமிடுகின்றனர்.

வரலாற்றைத் திரும்பிப் பார்க்க ஆரம்பித்தால் ஆயிரக்கணக்கான புத்த விஹாரங்கள் இந்துக் கோயில்களாக மாற்றப்பட்டுள்ளன – திருப்பதி கோயில் உட்பட. “பவுத்தமும் – தமிழும்” என்ற   மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களால் எழுதப்பட்ட ஆதாரப் பூர்வமான ஆய்வு நூல் – இந்த வகையில் நீண்ட பட்டியலையே வெளியாக்கியுள்ளது. அவற்றை எல்லாம் கிளற ஆரம்பித்தால் என்ன ஆகும்? நீதிமன்றங்கள் பொறுப்புடன் நடக்கும் என்று எதிர்ப்பார்ப்போம்! 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *