நீ எத்தனை யாகம் செய்தாலும்
இந்திரன் வரமாட்டான்
கேட்கும் வரம் தரமாட்டான்.
கருப்புக்கொடியை பார்த்து
கலங்கி நிற்கிறார்கள்
முப்பத்து முக்கோடி தேவர்கள் –
எண்பதினாயிரம் ரிஷிகள்-
எங்கே எண்ணிக்காட்டு-
விடலைகளின் வினாக்களுக்கு
இங்கே விடைகள் இல்லை.
கின்னரர் கிம்புருடர் அட்டதிக்கு பாலகர்கள்-
கொம்புள்ள பொம்மையாய்
குழந்தைகளின் கைகளில்-
மூன்றடி மண்கேட்டால்
இனி வாமனனுக்கு சவுக்கடி-
ஒண்டவந்த பிடாரிக்கு ஒரே அடி.
பெரியார் பிரம்போடு
வாத்தியாராய் நிற்கிறார்.
.கடவுள்- தூணிலும் இருப்பான்
துரும்பிலும் இருப்பான்
எங்கே இந்த மொபைலில் இருப்பானா…
நரசிம்மனை கிழித்து தொங்கவிடுகிறது
கருப்புச்சட்டை.
நந்தியை விலக்கி
காட்சி தந்த நடராஜருக்கு இன்று
நந்தன் வீட்டில் தஞ்சம் புகும் நிலை.
கருப்புச்சட்டை
புடைசூழ சம்பூகன் தவமிருக்கிறான்.
ராமனே… நீ வீரனாய் இருந்தால் வில்லை எடு.
கட்டைவிரல் என்னிடமிருக்க
கலைகளை எப்படி கற்றான் ஏகலைவன்…
காரணம் தெரியாமல்
கலங்கி நிற்கிறான் துரோணன் –
அக்கிரகாரத்திலும் ஆல் இந்தியா ரேடியோவிலும்
இனி தேவகானம் கேட்காது-
அசுரர்கள் வாழும்நாட்டில்
இனி அசுர கானம்தான்-
இன்றுபோய் நாளைவா-
ராமனுக்கு வாய்தா
கொடுக்கிறான் இராவணன்.
கோயில்களிலெல்லாம் அசுரர்கள் ஆட்டம் –
ஒண்ட இடம்தேடி ஓடுது பூணூல் கூட்டம்.
அசுரர்கள் அருகே இருக்க-
இனி யாகத்தீயை ஓங்கி வளர்க்காதே.
யாக குண்டத்தில் ஆகுதியாய்
ஆக்கிவிடப் போகிறார்கள்.
– நன்னிலம் கரிகாலன்