தமிழ்ச் சமூகத்தை அவமதிப்பதா?
சென்னை, நவ.17- ஆளுநர் மாளிகை அழைப்பிதழில் மீண்டும் காவி உடையுடன் திருவள்ளுவர் ஒளிப்படம் அச்சிடப்பட்டுள்ளதால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
திருவள்ளுவர், கவிஞர்கள் கபீர் தாஸ், யோகி வேமனா குறித்த பன்னாட்டு கருத்த ரங்கம் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறுகிறது.
இந்த பன்னாட்டு கருத்தரங்கம் தொடர்பான ஆளுநர் மாளிகை அழைப்பிதழில் காவி உடையுடன் திருவள்ளுவர் படம் அச்சிடப்பட்டுள்ளது. வள்ளுவரின் அதிகாரப்பூர்வ படத்தை அரசு வெளியிட்டுள்ள நிலையில், அதற்கு முற்றிலும் மாறுபட்ட வகையில் ஆளுநர் மாளிகை காவி நிற வள்ளுவர் படத்தை வெளியிடுவதற்கு தமிழ் ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே திருவள்ளுவர் நாளின்போது காவி உடை யுடன் வள்ளுவர் படத்தை ஆளுநர் மாளிகை பதிவிட்டது சர்ச்சையானது.பல்வேறு அமைப்புகளின் கடும் எதிர்ப்பை அடுத்து காவி உடை யுடன்பதிவிட்ட வள்ளுவர் படத்தை ஆளுநர் மாளிகை நீக்கியது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பி னர் க.வெங்கடேசன் கண்டனம்:
தமிழ்ச் சமூகத்தை ஆளுநர் புண்படுத்துகிறார். வள்ளுவருக்கு காவி உடை அணிவித்து மத அடையாளமாக முன்னிறுத்தும் வேலையை ஆளுநர் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். இந்துத்துவா அரசியலை பிரச்சாரப்படுத்தும் பணியில் ஆளுநர் மாளிகை பிரதான இட மாக இருக்கிறது. திருவள்ளுவரை அவர்கள் சார்ந்த அரசியலுக்கு பயன்படுத்த துடிக்கின்றனர். மதம், ஜாதி சார்ந்த வெறுப்பு அரசியலுக்கு திருவள்ளுவரை பயன்படுத்துவதை ஏற்க முடி யாது.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம்: திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து அழைப்பிதழ் அச்சிட்டு ஆளுநர் செய்வது அராஜகம். மாநில அரசின் ஊதியத்தை பெற்றுக்கொண்டு அரசுக்கு எதிரான செயல்களில் ஆளுநர் ரவி ஈடுபடுகிறார். ஆளு நரின் செயலுக்கு எத்தனை முறை கண்டனம் தெரிவித்தாலும் அவர் மதிப்பளிப்பதில்லை. காவி உடையுடன் வள்ளுவர் படம் அச்சிட்ட அழைப்பிதழை ஆளுநர் மாளிகை திரும்பப் பெறவேண்டும். பதவிக் காலம் முடிந்தபின்னும் ஆளுநர் ஆர்.என்.ரவியை ஒன்றிய அரசு திரும்ப பெறாதது ஏன் என்று தெரியவில்லை. ஆளுநர் பதவியிலிருந்து விலகிவிட்டு பாஜகவில் இணைந்து அவர் என்ன செய்தாலும் யாரும் கேட்கப் போவதில்லை.