இந்நாள் – அந்நாள்!

viduthalai
2 Min Read

கோட்சே தூக்கிலிடப்பட்ட நாள் 15.11.1949
ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் கோட்சேவும்

1947இல் ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து இந்தியா விடுதலை பெற்ற போது, இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிக்கப்பட்டு தனி நாடானது.

பிரிவினைக்கு காந்தியார் துணை போனார் என்றும், இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக, ஹிந்துக்களுக்கு துரோகம் செய்தார் என்றும் ஹிந்து மகாசாபை உள்ளிட்ட சில தீவிர ஹிந்துத்துவ அமைப்புகள் காந்தியாரை விமர்சனம் செய்தன.

பிரிவினையின் போது பல லட்சம் அப்பாவி மக்கள் இரு தரப்பிலும் கொல்லப்பட்டனர். இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று காந்தியார் வலியுறுத்தினார். இதனால் ஹிந்து மகாசபா உறுப்பினர்கள் அவர் மீது வெறுப்பை வளர்த்துக் கொண்டனர்.

ஹிந்து மகாசாபையின் உறுப்பினராக தீவிரமாக பணியாற்றிய நாதுராம் விநாய்க் கோட்சே, இளம் வயதில் ஆர்.எஸ்.எஸின் உறுப்பினராகவும் பணியாற்றினார். பூனாவைச் சேர்ந்த கோட்சே, ஹிந்து மகாசாபை நிறுவனர்களில் ஒருவரான சாவர்கரின் தொண்டராக உருவெடுத்தார். காந்தியாரைக் கொல்ல, நாராயணன் ஆப்தே மற்றும் ஆறு இதர சகாக்களுடன் கோட்சே திட்டம் தீட்டினார். 1948 ஜனவரி 30இல் டில்லியில் பிர்லா மாளிகையின் தோட்டத்தில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தின் போது, காந்தியாரை கோட்சே சுட்டு கொன்றான்.

1948ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி மாலை. இந்திய தலைநகர் டில்லியில் நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மகாத்மா என்று போற்றப்பட்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள் வெளியே வந்தபோது, அவரை நாதுராம் விநாயக் கோட்சே சுட்டுக் கொன்றான்.

காந்தியார் படுகொலை செய்யப்பட்ட ஒரு ஆண்டிற்குப் பிறகு, விசாரணை நீதிமன்றம் கோட்சேவுக்கு தூக்குத் தண்டனை விதித்தது.

1949ஆம் ஆண்டு நவம்பரில் அந்தத் தீர்ப்பை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. இதையடுத்து நாதுராம் அம்பாலா சிறையில் கோட்சே தூக்கிலிடப்பட்டான்.

ஹிந்து மகாசபாவில் சேருவதற்கு முன்பே, கோட்சே ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் (தேசிய தொண்டர் அமைப்பு) என்ற அமைப்பில் உறுப்பினராக இருந்தார். அந்த அமைப்புதான் பின்னர் அபினவ் பாரத் என்ற பெயரில் வழங்கப்பட்டதாக மாலேகான் குண்டுவெடிப்பு விசாரணை அறிக்கை கூறுகிறது அந்த குண்டுவெடிப்பில் குற்றவாளிதான் பிரக்யா சின் தாக்கூர்.

26 நவம்பர் 2019, அன்று நாடாளுமன்றத்தில் சிறப்புப் பாதுகாப்பு படைப் பிரிவு திருத்த மசோதா மீதான விவாதத்தில், தான் ஏன் காந்தியாரைக் கொன்றேன் என்பது குறித்த கோட்சேவின் கருத்தை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா மேற்கோள் காட்டினார். அப்போது குறுக்கிட்ட பிரக்யா தாகுர், “ஒரு தேச பக்தரை நீங்கள் உதாரணமாக அளிக்க முடியாது” என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. கோட்சே தேச பக்தராம்!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *