வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது

viduthalai
2 Min Read

சென்னை, நவ.9- தென் மேற்குவங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை (10.11.2024) உருவாக வாய்ப்பு இருக்கிறது எனவும், இதன் காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மய்யம் அறிவித்துள்ளது.

காற்று குவிதல் காரணமாக தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களாக ஆங்காங்கே மழைபெய்து வருகிறது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி கடந்த 6ஆம் தேதி உருவாக வாய்ப்பு இருந்த நிலையில், மியான்மர கடலோரப் பகுதியில் நிலவிய காற்று சுழற்சி யால், வடகிழக்கு காற்றின் வருகை தடைப்பட்டு, தாழ்வுப்பகுதி உருவாவது தள்ளிப்போனது.
இதற்கிடையே மியான்மர் கடலோரப் பகுதியில் நிலவி வந்த காற்று சுழற்சி வலுவிழந்து, நாளை தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மய்யம் அறிவித்துள்ளது.

இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையவும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படும் நிலையில், அதுகுறித்து வானிலை ஆய்வு மய்யம் நாளை தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வங்கக்கடலில் உருவாகி, மேற்கு நோக்கி நகர்ந்து தமிழ்நாடு, இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி வரும் என சொல் லப்படுகிறது.

இதன் காரணமாக நாளை இரவில் இருந்து தமிழ்நாட்டில் பரவலாக நல்ல மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மய்யம் அறிவித்து இருக்கிறது. அதாவது வருகிற 15ஆம் தேதி வரை இந்த மழை பெய்யக்கூடும்.
அதிலும், வட கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை வரையிலும், தெற்கு, உள் மாவட்டங்கள் உள்ளிட்ட பிற பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரையிலும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அதன்படி, இன்றும் (9.11.2024), நாளையும் (10.11.2024) தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகு திகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

நாளை மறுநாள் (11.11.2024) கடலோர மாவட்டங்களில் சில இடங்களிலும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடிமின்னலுடன் மிதமான மழையும், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *