இந்நாள் – அந்நாள் புலவர் மா.நன்னன் நினைவு நாள் (7.11.2017)

viduthalai
2 Min Read

தமிழை வடமொழி கலப்பு இல்லாமல் அடுத்த தலைமுறையிடம் கொண்டு செல்ல வேண்டும், எளிய முறையில் சாதாரண மக்களும் தமிழை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அயராது பாடுபட்டவர். தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கிய இவர், ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டே தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

பிறகு, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டம் பெற்ற இவர், தொல்காப்பியம் பற்றி ஆய்வு செய்து, முனைவர் பட்டத்தையும் பெற்றார். பள்ளி ஆசிரியராகத் தொடங்கி, கல்லூரியில் பேராசிரியராக இருந்து, தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநராக உயர்ந்தார். ஓய்வு பெற்ற பிறகு நேரடியாகவே தமிழ்த் தொண்டு ஆற்றினார்.

கி.பி.1944ஆம் ஆண்டு தந்தை பெரியார் மயிலாடுதுறையை அடுத்துள்ள வடகரை என்னும் ஊரில் உரையாற்ற வருவதாகவும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த தம்மை மாணவப் பேச்சாளராக பேராசிரியர் அன்பழகனின் தந்தை கல்யாணசுந்தரம் அங்கு பேச அழைத்ததாகவும் நன்னன் குறிப்பிடுகின்றார்.

“தந்தை பெரியாரின் கொள்கைகளை ஓரளவு மட்டுமே புரிந்துகொண்டு அதில் ஈடுபட்டு ஓரிரண்டு ஆண்டுகளே ஆகி முரட்டுப் பேச்சாளராக இருந்த எமது முரட்டுப்பேச்சை விழா முடிந்த பின் பெரியார் பாராட்டியதோடு அதில் இருந்த சில குறைகளையும் கூறிய முறையையும் சுட்டி எம்மைத் திருத்தினார்“ என்று குறிப்பிடுகிறார்.

தந்தை பெரியாரின் கொள்கை களை ஏற்று, தம் குடும்பத்தின் வாழ்க்கை முறையாகவே ஆக்கிக் கொண்டவர். எளிமையாகப் பெரியாரியலைப் பகுத்துப் புரிந்து கொள்ளும் வகையில் பெரியாரியல், பெரியார் கணினி, பெரியாரைக் கேளுங்கள் புத்தகங்களைத் தொகுத்து வெளியிட்டவர்.

“பெரியாரை அணுக்கமாகப் பார்த்ததை, நெருக்கமாகத் துய்த்து உணர்ந்ததையெல்லாம் எழுத்து வடிவில் எழுதி வரும் தலைமுறைக்குக் கொடுத்து சென்றவர் புலவர் மா.நன்னன். தமிழ் குறித்தும், தந்தை பெரியார் குறித்தும் பல தலைப்புகளிலும் சிறியதும் பெரியதுமாகிய 124 நூல்களைப் படைத்தவர் – பகுத்தறிவு எழுத்துகளாகத் தன் எழுத்துகளை அமைத்துக் கொண்டவர் – பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத்தலைவர் பொறுப்பை ஏற்று, பல ஊர்களுக்கும் சென்று தந்தை பெரியாரின் கொள்கைகளைப் பரப்பியவர் மா.நன்னன் ஆவார்” என்று தமிழர் தலைவர் ஆசிரியரால் பாராட்டப்பட்டவர்.

அருப்புக்கோட்டை கைலாசம் அறக்கட்டளையில் தந்தை பெரியார் ஆய்வுச் சொற்பொழிவுகளை நிகழ்த்தி, “பெரியார் பேருரையாளர்” என்னும் சிறப்புப் பெற்றவர்.
தன் வாழ்நாளின் இறுதிவரை பகுத்தறிவாளராகவே வாழ்ந்து, அதையும் பதிவு செய்தவர் நன்னன்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *