விருதுநகர் மாவட்டத்தில் 2 பேரூராட்சிகளுக்கு கூட்டுக் குடிநீர் திட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

Viduthalai
1 Min Read

மதுரை, அக்.31- வைகை ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சிகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்தினை ரூ.75.85 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசு, வைகை ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சிகளுக்கு ரூ.80.00 கோடி மதிப்பீட்டில் 29,000 மக்கள் பயனடையும் வகையில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தது.

இத்திட்டத்திற்கு தேவையான நீர், வைகை ஆற்றில் மேலக்கால் அருகில் கொடிமங்களம் தடுப்பணை மேல்புரத்தில் அமைக்கப்படும் 11 நீர் உறிஞ்சு கிணறுகள் மூலம் பெறப்பட்டு காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சிகளுக்கு குடிநீர் வழங்கப்படும்.

இத்திட்டம் நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 135 லிட்டர் குடிநீர் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம், சுமார் 36,000 மக்கள் பயன்பெறுவர். இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தினை ரூ.75.85 கோடி மதிப்பீட்டில் மாநில நகர்ப்புர உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி (SUIDF), கலைஞர் நகர்ப்புர மேம்பாட்டு திட்டம் (KNMT) மற்றும் மூலதன மானிய நிதி (CGF), ஆகிய நிதியாதாரங்களின் கீழ் செயல்படுத்த நிர்வாக ஒப்புதல் வழங்கி ஆணையிட்டுள்ளார்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டம், காரியாபட்டி பேரூராட்சி மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சி ஆகியவற்றின் குடிநீர் தேவையை மேலும் திறம்பட எதிர்கொள்ளும் வகையில் அமைகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *