காரைக்குடி கழக மாவட்டம் பலவான்குடியில் 146ஆவது தந்தை பெரியார் பிறந்தநாள், அறிஞர் அண்ணா 116 ஆவது பிறந்தநாள் விழா, திராவிடர் கழக தெருமுனைக் கூட்டம்

viduthalai
3 Min Read

அடை மழைக் காலத்திலும் அனல் பறந்த அறிவு மழை!

காரைக்குடி,அக்.28- காரைக்குடி (கழக) மாவட்டம்,கல்லல் ஒன்றியம், பலவான்குடியில் தந்தை பெரியார் 146 ஆவது பிறந்தநாள் விழா, அறிஞர் அண்ணா 116 ஆவது பிறந்தநாள் விழா திராவிடர் கழக தெருமுனைக் கூட்டம் கல்லல் ஒன்றியத் தலைவர் ஆ. சுப்பையா தலைமையில், மாவட்டத் தலைவர் ம. கு. வைகறை, மாவட்ட செயலாளர் சி செல்வமணி, மாவட்டத் துணைத் தலைவர் கொ. மணிவண்ணன், பலவான்குடி ராம. பாண்டி முருகன், கல்லல் மேற்கு ஒன்றிய திமுக துணைச் செயலாளர் கா.அப்துல் காசிம் என்கிற ராஜா ஆகியோர் முன்னிலையில் நடை பெற்றது. (25.10.2024 மாலை) பலவான்குடி கழக அமைப்பாளர் மு.ராசா வர வேற்புரை ஆற்றினார். மாவட்ட துணைத் தலைவர் கொ.மணிவண்ணன் தொடக்க உரை ஆற்றினார்.

தமிழ்நாடு

மாவட்டத் தலைவர் வைகறை தனது உரையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடைபெறும் கூட்டத்தின் நோக்கம் பற்றியும், தமிழ் நாடெங்கும் திராவிட இயக்கத் தலைவர்களின் நூற்றாண்டு விழாவை பரப்புரை நிகழ்வாக கழகம் நடத்தி வருவதையும், இயக்கத்தை நோக்கி இளைஞர்கள் தன்னார்வமாக வந்து கொண்டிருப்பதையும், மாவட்டத்தின் அனைத்து ஒன்றியங்களிலும் கழகப் பரப்புரை நடைபெற இருக்கிறது என்பதையும் எடுத்துரைத்தார்.
கனமழையின் காரணமாக கூட்டம் அருகே உள்ள வணிக வளாகத்தின் தாழ்வாரத்தில் கருத்தரங்கம் போல் நடைபெற்றது, ஊர் பொதுமக்களும், பெண்களும் மிகுந்த ஆர்வத்தோடும் பங்கேற்றது கூடுதல் சிறப்பு!

கழக சொற்பொழிவாளர் இரா. பெரியார் செல்வன் தனது உரையில், “எத்தகைய சூழ்நிலையிலும், எத்தனை இயற்கை தடைகள் வந்தாலும், அடாது மழை பெய்தாலும் அய்யாவின் அறிவு மழை மக்களை மானமும் அறிவும் உள்ள மக்களாக சுயமரியாதை உள்ள மக்களாக மாற்றி இருப்பதற்கு இந்த நிகழ்வும் ஒரு உதாரணம், பண்டிகை என்பதற்கும் விழா என்பதற்கும் உள்ள வேறுபாட்டையும் அதற்குள் புதைந்து கிடக்கும் ஆரிய திராவிட பண்பாட்டு கருத்துக்களையும், எடுத்துச் சொல்லி தீபாவளி தமிழர் விழா அல்ல, இறப்பைக் கொண்டாடுவது தமிழரின் வாழ்வியல் அறம் அல்ல என்று எடுத்துரைத்தார்.

கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார் செல்வனுக்கு “எங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி!” என ஊர் மக்கள் சிறப்பு செய்தார்கள். கல்லல் ஒன்றியச் செயலாளர் கொரட்டி வீ.பாலு நன்றி கூறினார்.

நிகழ்வில் மாவட்ட ப. க தலைவர் துரை.செல்வம் முடியரசன், காரைக்குடி மாநகரத் தலைவர் ந. ஜெகதீசன், மாநகர செயலாளர் அ. பிரவீன் முத்துவேல், மாநகர துணைத்தலைவர் ஆ. பழனிவேல் ராசன், பெரி. சின்னக்கருப்பன்(இ.காங்கிரஸ் கட்சி), சா.முருகேசன்(சிஅய்டியு), க. செல்லத்துரை, திமுக கிளைச் செயலாளர், கரு. முருகேசன், திமுக கிளை செயலாளர், கரு. நெல்லியான், திராவிடர் தொழிலாளர் அணி சொ.சேகர், தேவகோட்டை ஒன்றிய கழக செயலாளர் அ. ஜோசப், பெரியார் பிஞ்சு செ. அன்பரசு மற்றும் தோழமை இயக்கத்தினர் பங்கேற்றனர்.

தோழர்கள் அனைவருக்கும் கல்லல் ஒன்றியத் தலைவர் பலவான்குடி ஆ. சுப்பையா இல்லத்தில் சிறப்பான புலால் உணவு வழங்கப்பட்டது. குடும்பத்தாருடன் கழகத்தோழர்கள் குழுப் படம் எடுத்துக்கொண்டார்கள்.

பலவான்குடியில்
கழகக் கொடி ஏற்றம்

தமிழ்நாடு

பலவான்குடி – ஆத்தங்குடி சாலையில் 15 அடி இரும்புக் கொடிக் கம்பத்தில் கல்லல் ஒன்றியத் தலைவர் ஆ. சுப்பையா ஏற்பாட்டில், மாவட்டத் துணைத்தலைவர் கொ. மணிவண்ணன் கொள்கை முழக்கமிட கழகக் கொடியை மாவட்டத் தலைவர் ம. கு. வைகறை ஏற்றினார். நிகழ்வில் கழகத் தோழர்கள், ஊர் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *