பயிர் கழிவுகள் எரிப்பால் காற்று மாசு ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

Viduthalai
2 Min Read

புதுடில்லி, அக்.24 டில்லியில் காற்று மாசுபாட்டுக்கு அண்டை மாநிலங்களில் பயிர்க் கழிவுகள் எரிக்கப்படுவது முக்கிய காரணமாக உள்ளது. இந்நிலையில் காற்று தர மேலாண்மை ஆணையத்தின் (சிஏகியூஎம்) உத்தரவுகள், குறிப்பாக தேசிய தலைநகரப் பிராந்தியத்தில் கடைப்பிடிக்கப்படவில்லை என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று (23.10.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது ஒன்றிய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல், பஞ்சாப், அரியானா மாநில அரசுகளின் தலைமைச் செயலர்கள் நீதிமன்றத்தில் ஆஜராயினர். அப்போது நீதிபதிகள் கூறும்போது,
“பயிர்க் கழிவுகளை எரிக்கக்கூடாது என்று சட்டம் இருக்கிறது. சட்டத்தை மீறினால் அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் கடுமையான விதிகள் இல்லை.

சட்டம், விதிகளை பொருட்படுத்தாமல் விவசாயிகள், பயிர்க் கழிவுகளை எரிப் பதால் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் மட்டுமல்லாமல் அருகில் உள்ள மாநிலங்களிலும் காற்று மாசுபாடு ஏற்படுகிறது. கடுமையான சட்டவிதிகள் இல்லாததாலும், அதை சரிவர அமல்படுத்தாததாலும் தொடர்ந்து பயிர்க் கழிவுகள் எரிக்கப்படுகின்றன. பயிர்க்கழிவுகளை எரிப்பதைக் கட்டுப்படுத்த ஒன்றிய அரசு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது’’ என்று கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து பயிர்க் கழிவுகளை எரித்தால் அதிக அபராதம் விதிப்பது தொடர்பான புதிய சட்டவிதிகளை, காற்று தர மேலாண்மை ஆணைய சட்டத்தின் கீழ் அடுத்த 10 நாட்களில் ஒன்றிய அரசு வெளியிடும் என்று ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள் கூறும் போது, “சுத்தமான மற்றும் மாசு இல்லாத சூழலில் வாழ்வது அனைத்து குடிமக்களின் அடிப்படை உரிமை. குடிமக்களின் உரிமையை நிலை நாட்டுவது மத்திய, மாநில அரசுகளின் கடமை’’ என்று தெரிவித்தனர்.
‘‘பஞ்சாப், அரியானா மாநிலங்களில் பயிர்க்கழிவுகள் எரிப்பதை நிறுத்துவ தற்கான உத்தரவை ஏன் அதிகாரிகள் பின்பற்றவில்லை. அவர்கள் மீது ஏன் கடுமையான தண்டனை நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று சம்பந்தப்பட்ட பல்வேறு அதிகாரிகளுக்கு தாக்கீது அனுப்பியுள்ளோம்’’ என்று காற்று தர மேலாண்மை ஆணையம் (சிஏகியூஎம்) சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள் கூறும்போது, “பஞ்சாப் மற்றும் அரியானா மாநில அரசுகள் பயிர்க்கழிவுகளை எரிக்கும் நபர்கள் மீது போதிய நடவடிக்கை எடுப்பதில்லை. இதற்கான சட்டங்கள் நடைமுறையில் இருந்தாலும், குறிப்பிடத்தக்க வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை” என்று கண்டனம் தெரிவித்தனர்.

எஃப்அய்ஆர்: அப்போது பஞ்சாப் மாநில தலைமைச் செயலாளரிடம் நீதிபதிகள் கூறும்போது, ‘‘பயிர்க்கழிவு எரிப்பு தொடர்பாக, பஞ்சாபில் பதிவுசெய்யப்பட்ட 1080 முதல் தகவல்அறிக்கைகளில் (எஃப்அய்ஆர்) 473 நபர்களிடமிருந்து மட்டுமே அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 600-க்கும் மேற்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவர்களை நீங்கள் காப்பாற்றுகிறீர்கள். சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக எதுவும் செய்ய மாட்டீர்கள் என்று நீங்கள் ஒரு சமிக்ஞையை வழங்குகிறீர்கள் என்று நாங்கள் வெளிப்படையாகக் குற்றம்சாட்டுகிறோம். இந்த விவகாரம் கடந்த 3 ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது” என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *