சென்னை, அக்.24- சென்னையில் (Pink Auto) திட்டத்தில் பெண்கள் விண்ணப்பிக்க சமூக நலத்துறை அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாடு அரசு, பெண்கள் நலன், பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களைத் திறம்பட செயல்படுத்தி வருகின்றது. அவற்றோடு, பெண்களின் நலனை உறுதி செய்யும் விதமாக விடியல் பயணத்திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, தோழி விடுதிகள், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கியது,
புதுமைப்பெண் திட்டம் போன்ற பல்வேறு புதிய மகளிர் நலத் திட்டங்களை செயல்படுத்தி, பெண்களின் வாழ்வாதாரம் மற்றும் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்துள்ளது. பெண்களின் பாதுகாப்பில் தமிழ் நாடு சிறந்து விளங்குகின்றது, அதனை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று தமிழ் நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில், ஒரு புதிய முன்னெடுப்பாக ‘இளஞ்சிவப்பு ஆட்டோக்களை’ தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இத்திட்டத்தின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக பயணிக்க, பெண் ஓட்டுநர்கள் மூலம் 250 ஆட்டோக்கள் சென்னை மாநகரில் இயக்கப்பட உள்ளன.
அவசர காலங்களில் புகார் பெறப்பட்டவுடன், காவல் துறையின் மூலம் விரைவான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யும் நோக்கத்தோடு ஒவ்வொரு இளஞ்சிவப்பு ஆட்டோவிலும், பெண்களின் பாதுகாப்பிற்காக காவல்துறை உதவி எண்களுடன் இணைக்கப்பட்ட (GPS) பொருத்தப் பட்டிருக்கும். பெண்கள் சுய தொழிலில் சிறந்து விளங்க ஊக்கப்படுத்தவும், ஓட்டுநர் உரிமம் பெற்ற பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் இத்திட்டம் வழிவகை செய்யும்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற
தேவையான தகுதிகள்:
* பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
* கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
* 25 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
* 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
* ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
* சென்னையில் குடியிருக்க வேண்டும்
இதற்கென, சென்னையில் உள்ள 250 பெண் களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் தமிழ்நாடு அரசு ஜி.என்.சி. அய்பிரிட் (CNG/Hybrid) ஆட்டோ வாங்க மானியமாக வழங்கும். ஆட்டோ வாங்க தேவைப்படும் மீதி பணத்திற்காக வங்கிகளுடன் இணைக்கப்படும். சென்னையில் உள்ள தகுதியான பெண் ஓட்டுநர்கள், இத்திட்டத்தின் கீழ் பயனடைய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சென்னை மாவட்ட சமூக நல அலுவலருக்கு, 8ஆவது தளம், சிங்காரவேலர் மாளிகை, சென்னை – 600 001 என்ற முகவரிக்கு நவ.23ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மீனவர்களுக்கு
நாளும் நடக்கும் கொடூரம்!
ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
ராமேசுவரம், அக்.24- எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 16 ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. நெடுந்தீவு கடல்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்கொள்ளை யர்களாலும் கடற்படையினராலும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழ்நாடு மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக ஒன்றிய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பில் தமிழ்நாடு முதலமைச்சரும் பலமுறை வலியுறுத்தி கடிதங்களை எழுதி வருகிறார்.
இந்த சூழலில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 16 ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. நெடுந்தீவு கடல்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2 படகுகளுடன் ராமேசுவரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டு காங்கேசன்துறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கைது செய்யப்பட்ட 16 மீனவர்களும் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் மீனவர்களிடை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீனவர் பிரச்சனைக்கு ஒன்றிய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என மீனவ சங்கங்கள் வலியுறுத்தியுள்ளது.